ஆலய தரிசனம்: கோடகநல்லூர் ஸ்ரீகைலாயநாதர்
-ஜோதிடர் பேராசிரியர்: கே.ஆர்.சுப்ரமணியன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது நவகைலாயங்களில் மூன்றாவது கைலாயமான கோடகநல்லூர் ஸ்ரீகைலாயநாதர் திருக்கோயிலாகும். நவகிரகங்களில் செவ்வாய் தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகிறது. கார்கோடக க்ஷேத்திரம் என்றும் கோடகனூர் என்றும் இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது.
மனித வாழ்க்கையில் செவ்வாய் தசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த ஏழு ஆண்டுகளில் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் வாழ்க்கை செம்மையாக நடக்கும். சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றுள்ளதாக சொல்வார்கள். பெண்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் நடக்க தாமதமாகும் என்பதுண்டு. இப்படிப்பட்டவர்கள், அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலம் கோடகநல்லூர் திருக்கோயிலாகும்.

புராண வரலாறு:
ஆதிகாலத்தில் முனிவர் ஒருவர் காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்தார். ரிஷிக்கு உதவியாக முனிவரின் குமாரர் யாகம் நடத்த தேவையான சமித்துகளை சேகரிக்கச் சென்றிருந்தார். அப்போது அந்த வழியாக காட்டில் வேட்டையாட வந்த பரிஷித் மகாராஜவின் குமாரர் முனிவர் யாகம் செய்யும் வழியாக வந்துள்ளார்.
அரச குமாரன் முனிவரை அழைக்க முனிவர் கண்ணும்கருத்துமாக யாகம் வளர்ப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் கோபமடைந்த ராஜகுமாரன் கோபமடைந்து இறந்து கிடந்த பாம்பை முனிவரின் கழுத்தில் போட்டு விட்டு சென்று விட்டார்.
தன் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதை பார்த்த ரிஷி குமாரன் இச்செயலை செய்தவர் அரசகுமாரன் தான் என்று தன் ஞானதிருஷ்டியில் அறிந்து ராஜ குமாரனுக்கு ‘என் தந்தையின் கழுத்தில் நீர் பாம்பை போட்டதால் உன் தந்தையும் பாம்பு தீண்டி இறப்பார்' என்று சாபமிட்டார். இதை அறிந்த பரிஷித் மகாராஜா தன் ஆஸ்தான ஜோதிடரிடம் தன் ஜாதகத்தை நன்கு ஆராயுமாறு கேட்டுக்கொண்டார். ஜோதிடர்களும் அவருக்கு சர்ப்பத்தினால் கண்டம் உண்டாகும் என்பதனை தெரிவித்தனர்.
பரிஷித் மகாராஜா
பரிஷித் மகாராஜவும் தன் உயிரை பாம்பிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி கப்பலில் மணிமண்டபம் கட்டி வசிக்கத் துவங்கினார். விதி வசத்தால் கார்கோடகன் என்ற பாம்பானது மன்னர் சாப்பிடும் பழத்தில் சிறு புழுவாக உருமாறி புகுந்து பரிஷத் மகாராஜவை தீண்டியது. மகாராஜா இறந்து போனார். கார்கோடகம் பாம்பு தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது சூதாட்டத்தில் தன் சொத்து,சுகங்களை இழந்த நள மகராஜா சோகமாக அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். தீயில் மாட்டிக் கொண்டிருந்த கார்கோடன் சர்ப்பத்தை போராடி நள மகராஜா காப்பாற்றினார்.
சாபவிமோசனம்
பரிஷத் மகராஜவை தீண்டிய தோஷத்திற்கு சாபவிமோசனம் வேண்டி மகாவிஷ்ணுவை வேண்டி தியானம் செய்தது. திருமாலும் கார்கோடகன் முன் தோன்றி ‘கார்கோடகநல்லூருக்கு வா அங்கு உனக்கு முக்தி தருகிறேன்' எனக் கூறினார். கார்கோடகன் சர்ப்பம் முக்தியடைந்ததால் கார்கோடகநல்லூர் என்ற பெயர் இத்திருத்தலத்திற்க்கு வழங்கப்படுகிறது.

கல்வெட்டு சான்று:
இவ்வூரிலுள்ள பெரிய பிரான் சுவாமி கோயில் கல்வெட்டில் கோடனூர் என்ற குலசேகர சதுர்வேதிமங்கலம் என்று ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. குலசேகர சதுர்வேதம் என்றால் ருக்,யஜூர்,சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களை உதைவர்கள் வாழ்ந்த ஊர் என்று பொருளாகும்.
திருக்கோயில் சிறப்புகள்
இத்திருக்கோயிலில் சுவாமி கைலாசநாதராகவும் அம்மாள் சிவகாமி அம்மனாகவும் அருள் பாலிக்கின்றனர் கோடகநல்லூரில் வடபுறமாக ஸ்ரீகைலாயநாதர் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கொடிமரம் கோபுரம் ஆகியவை கிடையாது. ஜாதகத்தில் செவ்வாயின் தசை நடைபெறும் பொழுது இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவது நற்பலன்கள் நடைபெற உதவுகிறது.
திருக்கோயிலின் அமைவிடம்
திருநெல்வேலியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, முக்கூடல் செல்லும் சாலையில் நடுக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோடகநல்லூர் அமைந்துள்ளது.
மூலவர்: கைலாசநாதர்
அம்மன்/தாயார்: சிவகாமி, அனந்தகவுர
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: தாமிரபரணி
ஊர்: கோடகநல்லூர்
மாவட்டம்: திருநெல்வேலி
தாலியுடன் நந்தி
கைலாசநாதர் கோயில்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. அங்காரகன் இங்கு சிவனை வழிபட்டார். அதனால் இது செவ்வாய் பரிகார தலமாயிற்று. இங்குள்ள நந்திக்கு, செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், 58 விரலிமஞ்சளை, தாலிக்கயிற்றில் கட்டி, மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications