ஐப்பசி திருக்கல்யாணம் - திருமண வரம் தரும் திருக்கல்யாணங்கள் - சிவ ஆலயங்களில் கோலாகலம்
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்த கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை: ஐப்பசி மாதம், சிவபெருமான் அம்பிகை வழிபாட்டுக்கு உகந்தது. ஐப்பசி மாதம் பல்வேறு ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெறும். அம்மனுக்கு உகந்தது ஐப்பசி பூர நட்சத்திர தினம். அன்றைய தினம் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சென்னை ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திலும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆலயத்திலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
சென்னை தங்க சாலையில் அமைந்துள்ளது, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். சென்னை பஞ்சபூதத் தலங்களில் ப்ருத்வி தலமாகப் போற்றப்படுகிறது. இந்த ஆலயம். முன்னொரு காலத்தில் பக்தர் ஒருவர், ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் காஞ்சிபுரம் சென்று ஏகாம்பர நாதரை வழிபடுவது வழக்கம். ஒரு நாள், அவரால் பிரதோஷத்தன்று காஞ்சிபுரம் செல்ல இயலவில்லை. அவர் முதலாளியும் காஞ்சிபுரம் செல்வதைத் தடுத்தார்.
இதனால் மனம் உடைந்த பக்தர், அன்று வருத்தத்தோடு துயில்கொண்டபோது அவர் கனவில் தோன்றிய ஏகாம்பரநாதர், 'இங்கேயே ஓர் ஆலயத்தை எழுப்பு. அதில் நான் அருள்பாலிப்பேன்' என்று கூறினார். அதன்படி சென்னை சௌகார்பேட்டை தங்கசாலையில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தில், ஈசன் ஏகாம்பரநாதராக அருள்பாலிக்கிறார். அன்னை காமாட்சி அம்மனாக அருள்புரிகிறாள்.
தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து அசைவ உணவு சாப்பிடுவது ஏன்
ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் பூர நட்சத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த ஆண்டு, ஐப்பசி மாதம் 7ஆம் தேதி அக்டோபர் 24ஆம் நாளன்று ஏகாதசி திதியுடன் கூடிய பூரம் நட்சத்திர தினத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்தத் தலம் நவகிரக பரிகாரத்தலமாகவும் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் திகழ்கிறது. இந்தத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் லிங்க சத்தி அம்மன் என்னும் போக சத்தி அம்மனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண விழா, கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமிக்கும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, அம்பாள் தங்கச் சப்பரத்திலும், நெல்லையப்பர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருள, காட்சி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சிவன் ஆலயத்தில் சங்கர ராமேஸ்வரர் - பாகம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. இத்திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.