அட்சய திருதியை 2021: ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்
அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்குவதை விட தானம் செய்வதால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும். இந்த புண்ணியத்தின் பலனால் பல தலைமுறை சந்ததியினரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
மதுரை: பல கோடி சொத்து சேர்த்து வைத்து விட்டு செல்வதை விட நமது சந்ததியினர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ நாம் புண்ணியம் சேர்த்து வைக்க வேண்டும். நாம் செய்யும் தான தர்மங்கள் நம்முடைய வருங்கால தலைமுறையினருக்கு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்கும். அட்சய திருதியை நாளில் நாம் தங்கம், வெள்ளி என்று வாங்கி குவிப்பதை விட நோய் தொற்று பரவும் இந்த காலத்தில் நம்மிடம் உள்ள பணத்தைக் வைத்து பலருக்கும் தானம் செய்யலாம்.
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை நட்சத்திரம் அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் அட்சய திருதியை நாளில் தங்க நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு அட்சய திருதியை மே 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
கொரோனா காலமாக இருப்பதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே தங்கம் வாங்க கடைக்குப் போக முடியாது. எனவே அட்சய திருதியை நன்னாளில், முடிந்தவரை உணவோ உடையோ தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் இதுவரை இருக்கின்ற செல்வம் பன்மடங்காகப் பெருகும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
பல மடங்காக பெருகும்
அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். ஒரு வியாபாரத்தை துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்வதன் மூலம் அளப்பரிய நன்மைகளை அடைய முடியும். மேலும் இந்த நாளில் தான தர்மங்கள் செய்தால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்.
அன்னதானம்
அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
குடை தானம்
வெயில் காலமாக இருப்பதால் நீர் மோர் தானமாகத் தரலாம். ஏழைகளுக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்கலாம். சித்தர்கள் ஜீவசமாதி உள்ள ஆலயங்களுக்குச் சென்று புண்ணியத்தை தரும். அன்னதானம் செய்யலாம். வயதானவர்களுக்கு குடை வாங்கிக் கொடுங்கள். செருப்பு தானம் செய்யுங்கள். நீர்மோர் பானகம் வழங்கலாம்.
மஞ்சள் குங்குமம்
அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்து கூடவே ஜாக்கெட் பிட் வைத்து கொடுக்கலாம்.
பல தலைமுறையும் வாழும்
அட்சய திருதியை நாளில் புண்ணிய காரியங்கள் செய்து அதன் மூலம் கிடைக்கும் புண்ணியங்கள் உங்கள் சந்ததியினருக்கு சேரும். இந்தப் புண்ணியத்தின் பலன்கள் என்பது நாம் நம் சந்ததிக்கு கோடி கோடியாய் வைத்துச் செல்லும் மிகப்பெரிய பிக்ஸட் டெபாசிட். இதன் மூலம் நம் சந்ததியினர் வாழ்வாங்கு வாழ்வார்கள்.