அட்சய திருதியை நாளில் என்ன பொருள் தானம் கொடுத்தால் என்ன புண்ணியம்
அட்சய திருதியை ரோகிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளில் தானம் செய்வதால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.
மதுரை: ரோகிணி நட்சத்திரத்துடன் வருகிற அட்சய திருதியை மிகவும் சிறப்பானது இன்றைய நன்னாளில், முடிந்தவரை உணவோ உடையோ தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் இதுவரை இருக்கின்ற செல்வம் பன்மடங்காகப் பெருகும் என்பது உறுதி.
அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
நள்ளிரவில், டெல்லியில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார் பிரதமர் மோடி.. ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணம்
நாளைய தினம் 3ஆம் தேதி அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்து மற்றும் ஜெயின் சமூக மக்கள் அட்சய திருதியை பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.
அட்சய திருதியை
அட்சய திருதியை பண்டிகை அன்று எந்தவொரு பொருள் வாங்கினாலும் அது பல்கி பெருகும் என்பது பண்டிகையை கொண்டாடுவோரின் நம்பிக்கை. எனவே, இந்நாளில் இந்தியர்கள் நகை கடைகளில் திரண்டு தங்க நகை அல்லது நாணயம் வாங்குவது வழக்கம். மேலும், அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டமும், செல்வமும், வளமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
முயற்சிகள் வெற்றியடையும்
அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். ஒரு வியாபாரத்தை துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்வதன் மூலம் அளப்பரிய நன்மைகளை அடைய முடியும். மேலும் இந்த நாளில் தான தர்மங்கள் செய்தால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்.
விவசாயம் செழிக்கும்
வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள். ஹரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
புண்ணியம் சேரும்
அட்சய திருதியை நாளில் புண்ணிய காரியங்கள் செய்து அதன் மூலம் கிடைக்கும் புண்ணியங்கள் உங்கள் சந்ததியினருக்கு சேரும் என்பது உறுதி. இந்தப் புண்ணியத்தின் பலன்கள் என்பது நாம் நம் சந்ததிக்கு கோடி கோடியாய் வைத்துச் செல்லும் மிகப்பெரிய பிக்ஸட் டெபாசிட். இதன் மூலம் நம் சந்ததியினர் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
என்னென்ன தானம் தரலாம்
ஏழைகளுக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்கலாம். சித்தர்கள் ஜீவசமாதி உள்ள ஆலயங்களுக்குச் சென்று புண்ணியத்தை தரும். அன்னதானம் செய்யலாம். ஆலயங்களுக்கு உங்கள் சார்பில் ஏதாவதொரு பூஜைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கித்தரலாம். வயதானவர்களுக்கு குடை வாங்கிக் கொடுங்கள். செருப்பு தானம் செய்யுங்கள். நீர்மோர் பானகம் வழங்கலாம்.
முன்னோர்கள் பித்ரு கடன்
மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்து கூடவே ஜாக்கெட் பிட் வைத்து கொடுக்கலாம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.