அட்சய திருதியை..குபேரன் போல செல்வம் பெருக..மகாலட்சுமியின் அருள் கிடைக்க இதை செய்ய மறக்காதீர்கள்
சென்னை: சித்திரை மாத அமாவாசைக்கு 3வது நாள் அட்சய திருதியை. 3ஆம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது சிறப்பு பெறுகிறது. இந்த ஆண்டு வரும் 22ஆம் தேதியும் 23ஆம் தேதியும் திருதியை திதி இருப்பதால் 2 நாட்களிலும் தங்கம் வாங்கலாம். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் பவிஷ்யோத்தர-புராணம் விரிவாக விவரிக்கிறது.
அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. கங்கை, முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் பூமியை தொட்டதாக புராணங்கள் கூறுகின்றன. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள். சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
அரிதான வேலையை சந்திப்பதை அலப்ய யோகம்' என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு அட்சதை என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு அட்சய திருதியை எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும். அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார். வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.
அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு அட்சய திருதியை' நாளில் செய்யப்படுகிறது.
அட்சய திருதியை நாளில்தான் குபேரன் சங்கநிதி, பதுமநிதிகளை பெற்றதாக ஐதீகம். அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது.

அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் கூடுதல் பலன்களை தரும்.
அட்சய திருதியை தினத்தன்று வெண்மை நிறப் பொருட்கள் விசேஷமானது. வெண்ணிற மல்லி பூ, வெண்பட்டு ஆடை, வெண்ணிற பால் பாயசம் இவைகளைப் பயன்படுத்துதல் சிறப்பாகும். அட்சய திருதியை நாளில் தங்கம்தான் வாங்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். வசதி உள்ளவர்கள் வாங்கலாம். வசதி இல்லாதவர்கள் உப்பு, மஞ்சள், நெல், அரிசி ஆகியவற்றை வாங்கி லட்சுமி படத்திற்கு முன் வைத்து வழிபடலாம். குபேரன் போல செல்வம் பெருகும்..மகாலட்சுமியின் அருள் வீடு தேடி வரும்.












Click it and Unblock the Notifications