குச்சிக்குச்சி ராக்கம்மாவும் குரு பார்த்தால் குண்டாவார்கள்...#Astrology
உடல் குண்டாவதற்கும் குருவே காரணம் என்கிறது ஜோதிடம் . உலகம் முழுவதும் அக்டோபர் 26ஆம் தேதி உடல் பருமன் தினம் கடைபிடிக்கப் படுகிறது.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். உடல் குண்டாவதற்கும் குருவே காரணம் என்கிறது ஜோதிடம் எப்படி என்கிறீர்களா படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் குழந்தை மற்றும் இளம்வயதினர் உடல் பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது. பிற்கால உடல் நலத்தையும் கல்வியையும் தரமான வாழ்க்கையையும் பாதிக்கும் இந்நிலையை எதிர்த்து சில நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.
இன்றைய உலகில் பெரும்பான்மையோர், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் தோற்றத்தைக் குறித்து அதிருப்தி அடைந்து எடையைக் குறைப்பது அதி முக்கியமானது என்று கருதுகின்றனர். ஆனால், உடல் பருமன் என்பது ஒரு மருத்துவ நிலை என்பதையும் அது பல்வேறு நோய்களையும் மரணத்தையும் கூட உண்டாக்கும் என்பதை மக்கள் அடிக்கடி மறந்து போகின்றனர். உண்பதினால் மட்டுமன்றி தவறான உணவுப் பழக்க வழக்கங்களினாலும் உடல் பருமன் உண்டாகிறது.
உடல் பருமனாய் இருப்பதால், நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, கீல்வாதம், சில புற்று நோய் வகைகள், மிகை இரத்த அழுத்தம், இளமையில் மிகை கொலஸ்ட்ரால் ஆகிய பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
உடல் பருமனுக்கான ஜோதிட காரணங்கள்:
உடல் பருமனுக்கும் ஜோதிடத்திற்க்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என பார்த்தபோது, ஆச்சரியமூட்டும் வகையில் நிறையவே தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. உடல் பருமனுக்கு காரகர் குரு என்றும் ஊளை சதைக்கு காரகர் சுக்கிரன் என்றும் பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.
குருவும், சுக்கிரனும் லக்னதில் ஆட்சி பெற்று நிற்பது, உச்சம், மூல திரிகோனம், கேந்திர திரிகோனங்களில் நின்று லக்னத்தை பார்ப்பது, பஞ்ச மகா புருஷ யோகங்களில் குருவால் ஏற்படும் ஹம்ச யோகம், சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் ஆகிய யோகங்கள் பெற்று நின்று தனது தசா புத்தியை நடத்தும்போது உடல் பருமனும் ஊளை சதையும் ஏற்படுகின்றது.
முக்கியமாக கொழுப்பின் காரகரே குரு தான் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. சில பணக்கார்களுக்கு தொப்பை இருக்கும்போது அதை "பணத்தொப்பை" என குறிப்பிடும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. பணத்திற்க்கும் செல்வ செழிப்பிற்கும் காரகரான தன காரக குரு கொழுப்பு சத்திற்க்கும் காரகர் என்பது பொருத்தமன்றோ?
ஜோதிட ரீதியாக உடல் பருமனை ஏற்படுத்தும் பாவங்களாக கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபம் மற்றும் அதன் அதிபதி சுக்கிரன், ஜெனன ஜாதக இரண்டாம் பாவம், அதன் அதிபதி, கால புருஷனுக்கு ஒன்பதாம் பாவமான தனுசு மற்றும் அதன் அதிபதி, ஜெனன ஜாத ஒன்பதாம் பாவம் மற்றும் அதன் அதிபதி லக்னத்தோடு தொடர்பு கொள்ளும் போது உடல் பருமன் ஏற்படுகிறது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.
மேலும் ஜெனன ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் லக்னாதிபதியாகவோ, போஜன ஸ்தானதிபதியாகவோ இருப்பது மற்றும் லக்னத்தையோ அல்லது போஜன ஸ்தானத்தையோ தொடர்பு கொள்ளும்போது ஜாதகருக்கு இனிப்புகளில் அதிகம் நாட்டம் ஏற்படும். அதனால உடல் பருமன் ஏற்படும்.
பானை வயிறு படைத்தவர் என் போற்றபடும் விநாயக பெருமானின் ஜாதகத்தில் நீர் ராசியான விருச்சிக லக்னமாகி லக்னத்தில் கேதுவும் கால புருஷ இரண்டாமிடமான ரிஷபத்தில் ராகுவும் நின்று ஐந்தாமதிபதியாகிய குரு நீர் ராசியில் உச்சம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
உடல் பருமனை ஏற்படுத்தும் கிரஹ சேர்க்கைகள்:
1. லக்னம் நீர் ராசியான கடகம் அல்லது மீனமாகி அதில் குரு பகவான் ஆட்சி உச்சம் ஆகி நிற்பது அல்லது நீர் ராசியாகிய விருச்சிகமாகி அதை நீர் ராசிகளில் ஆட்சி உச்சம் பெற்ற குரு பார்பது.
2. லக்னம்/சந்திரன் காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகி அதில் குரு நின்று காற்று ராசி அதிபதிகளோடு தொடர்பு கொள்வது
3. பொதுவாக குரு தான் இருக்கும் வீட்டின் காரகத்தை வளர்த்துவிடுவார் என்பது ஜோதிட விதி. அந்த வகையில் எந்த லக்னமானாலும், காலபுருஷனுக்கு ஐந்தாமிடமான சிம்மம் வயிறு பாகத்தையும் ஆறாமிடமும் அடி வயிற்றினை குறிக்கும் இடங்களாகும்.
அ. குரு சிம்மத்தில் அல்லது ஜெனன ஜாதக ஐந்தாமிடத்தில் ராகுவோடு சேர்ந்து நிற்கும் போது மிகப்பெரிய வயிற்றுடன் கூடிய உடல் பருமன் ஏற்படுகிறது. ராகுவோடு சேராமல் தனித்து சிம்மத்தில் நிற்பது குறைந்த அளவிளாவது தொப்பை இருக்கும்.
ஆ. கன்னி மற்றும் ஜெனன ஜாதக ஆறாமிடத்தில் குரு நிற்பது முக்கியமாக லிவர் எனப்படும் கல்லீரல் பாதிப்பால் உடல் பருமன் ஏற்படும். மேலும் கன்னியில் குரு நிற்பவர்களுக்கு சர்க்கரை நோயும் சேர்ந்து வர இதுவே காரணமாகும். அதிலும் சனைச்சரனும் சேர்ந்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் இரண்டும் சேர்ந்து அமைந்துவிடுகிறது.
4. கால புருஷ இரண்டாமதிபதியான சுக்கிரனும், கால புருஷ ஒன்பதாமதிபதியான குருவும் எந்த விததிலும் சேர்க்கை பெற்று நிற்பது.
5. காற்று ராசியான மிதுனத்தில் சுக்கிரன் நின்று தனுர் ராசியை பார்ப்பது மற்றும் நீர் ராசியான விருச்சிகத்தில் குரு நின்று ரிஷப ராசியை பார்ப்பது.
6. ராகுவும் கேதுவும் லக்னத்தில் குரு/சுக்கிரனின் சாரம்பெற்றும் நிற்பது மற்றும் தனது திரிகோண பார்வையாலும் 3-7-11 பார்வையாலும் குருவையோ சுக்கிரனையோ பார்ப்பது. ராகுவும் கேதுவும் லக்னத்தில் நிற்கப்பெற்றவர்கள் சமூக பழக்கங்களுக்கு கட்டுபடாதவர்களாக இருப்பதோடு அந்நிய உணவு வகைகள் மற்றுக் துரித உணவுகளை அதிகம் உண்பதால் உடல் பருமன் ஏற்படும்.
7. குரு மற்றும் சுக்கிரனின் மேற்கண்ட தொடர்புகளை கொண்டு செவ்வாய் நீசமடைந்து நிற்பது, கடகம் மற்றும் மீனத்தில் நீர் ராசிகளில் நிற்பது, தனது வீட்டிற்கு பன்னிரெண்டில் நிற்பது, 6-8-12 தொடர்புகள் பெறுவது போன்றவை ஜாதகரை உடற்பயிற்சியற்ற நிலைக்கு உட்படுத்தி அதனால் உடல் பருமன் ஏற்படுகிறது, மேலும் உடல் கட்டழகு, உடல் பயிற்சியின் காரகர் செவ்வாய் என்பது குறிப்பிடத்தக்கது.
8. லக்னம்/சந்திரன் காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் லக்னமாகி, அங்கு குரு சாரத்தில் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி) ராகு நின்று, சுக்கிரனின் சாரத்தில் (பரணி, பூரம், பூராடம்) கேது நின்று குருவுக்கும் சுக்கிரனுக்கும் பலமான தொடர்பு ஏற்படுத்துவது. முக்கியமாக கும்ப லக்னத்தில் ராகு நின்று சிம்மத்தில் கேது நிற்கும்போது கால புருஷனுக்கு வயிறு பாகம் பாதிப்படைவதால் பானை போன்ற வயிறு ஏற்படுகிறது.
9. குருவோடு சனி,யுரேனஸ், நெப்ட்யூன், புளுட்டோ போன்ற கிரஹங்கள் லக்னத்திலோ, குருவின் வீடுகளிளோ, சுக்கிரன் வீடுகளிளோ, ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகளிலோ தொடர்பு கொள்ளும்போது தீடீரென உடல் பருமன் ஏற்படுகிறது.
உடல் பருமன் ஏற்படும் காலம்:
மேற்கண்ட கிரஹ நிலைகள் ஒருவருக்கு இருந்து குரு தசை ராகு புக்தி, குரு சாரம் பெற்ற ராகு தசை குரு புக்தி போன்றவை நடைபெறும் காலங்களில் உடல் பருமன் ஏற்படுகிறது, 6/8/12 அதிபதிகளுடன் தொடர்பு கொண்டு குரு தசை புத்தி ஏற்படுபோது உடல் பருமன் நோயாக அவஸ்தையை தருகிறது.
பெண்களுக்கு புத்திர காரக குரு பிரசவ காலத்திற்கு பிறகு உடல் பருமனை ஏற்படுத்துகிறார். பிரசவத்திற்கு முன் "குச்சி குச்சி ராக்கம்மாவாக" இருந்தவர்கள் கூட ஒரு குழந்தையை பெற்றவுடன் உடல் பருமனடைவதை பார்க்க முடிகிறது.
உடல் பருமனை குறைக்கும் மருத்துவம் மற்றும் பரிகாரங்கள்:
1. உடல் பருமனை ஏற்படுத்தும் கிரஹ நிலைகள் ஜாதகத்தில் கொண்டவர்கள் குருவின் காரகம் நிறைந்த இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகள் முக்கியமாக நெய் சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
2. செவ்வாயின் காரகம் கொண்ட யோகா, உடற்பயிற்சி செய்வது போன்றவை உடல் பருமனை குறைக்க வழி செய்யும், அழகன் எனப்படும் முருகப்பெருமானை திருச்செந்தூர் ஸ்தலத்தில் வணங்குவது.
3. கேதுவின் தானியமான கொள்ளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் பருமனை குறைக்கும் மற்றும் கேதுவின் அதிதேவதையான விநாயக பெருமானுக்கு தோப்புகரணம் போட்டு வணங்குவது
4. அநேகமான உடல் பருமனுக்கு குருவின் காரக விட்டமினான கொலின் குறைபாடு கல்லீரல் (லிவர்) பாதிப்பை ஏற்படுத்தி வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேர செய்து உடல் பருமன் நோயிற்க்கு காரணமாகிறது. எனவே தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் கோலின் விட்டமினை எடுத்துகொள்ளும்போது உடல் பருமன் நாளடைவில் குறைகிறது.
5. ஆயுர்வேத மருந்துகளில் நவக குக்குலு, யோகராஜ குக்குலு, கோஷிராதி குக்குலு போன்ற குக்குலு மருந்துகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது.
6. வாயு பொருட்கள், கிழங்குகள், எண்ணையில் பொரித்த உணவுகள் சனி குருவின் சேர்க்கையால் கொழுப்புச்சத்தை அதிகரிக்கிறது. எனவே அத்தகைய உணவுகளை தவிர்த்து தன்வந்தர வடி, பாஸ்கர லவனம், அஷ்ட சூரணம் போன்ற மருந்துகளை உட்கொள்வதால் வாயு தொல்லையில் இருந்து நிவாரனம் கிடைக்கும். மேலும் வாயு மைந்தன் ஆஞ்சனேயனை வணங்குவதும் உடல் பருமனை குறைக்கும்.
7. செவ்வாயின் காரகம் நிறைந்த வெள்ளை பூண்டினை அதிக அளவு சேர்க்குக்போது கொழுப்புச்சத்து கரைந்து உடல் பருமன் நோய் நீங்கும் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. இது அனைத்து மருத்துவ முறையிலும் ஏற்கப்பட்ட ஒரு எளிய வழியாகும்.
8. செவ்வாயின் காரகம் நிறைந்த இஞ்சி மற்றும் சுக்கு ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்ப்பது ஜீரண கோளாறுகளை நீக்கி உடல் பருமனை தடுக்கிறது.
9. வயிறு சம்மந்த பிரச்சனைகளை போக்கவும் உடல் பருமனை குறைக்கவும் மருத்துவ குணம் கொண்ட செவ்வாயின் காரகம் நிறைந்த கருஞ்சீரகம் பெருமளவு உதவுகிறது. கருஞ்சீரக எண்ணையுடன் தேன் சேர்த்து சாப்பிடுவது, கருஞ்சீரக கஷாயம் போன்றவை உடல் பருமனை குறைக்க உலகளவில் புகழ் பெற்ற மருத்துவ முறையாகும். என்றாலும் மாதவிடாயை ஏற்படுத்தும் தன்மை கொண்ட கருஞ்சீரகத்தை கருவுற்றிருப்பவர்கள் உட்கொள்ளகூடாது.
10. ராஜ கனி எனப்படும் குரு ஆதிக்கம் பெற்ற எலுமிச்சை உடல் பருமனை குறைக்கும் அற்புத மருந்தாகும். காலையில் வெறும் வயிற்றில் கதகதப்பான சுடு நீரில் எலுமிச்சை சாரு மற்றும் தேன் கலந்து பருகுவது மிகச்சிறந்த மருந்தாக பயன்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புத்துணர்ச்சியை அளிக்கிறது.
11. இவற்றிகெல்லாம் முத்தாய்ப்பாக உடல் பருமன் கொண்டவர்கள் அடிக்கடி ஏதாவது உணவுகள் மற்றும் நொறுக்கு தீனி கொறிப்பதை நிறுத்தவேண்டும். முக்கியமாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, படித்துக்கொண்டே சாப்பிடுவது போன்றவை தவறான உணவு பழக்கங்களாகும்.