ரத சப்தமி... சனிக்கிழமை புதன் ஹோரையில் மங்களகரமாக பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதா ராமன்
கடந்த ஆண்டு ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு சனிக்கிழமை ரத சப்தமி நாளில் நல்ல நேரத்தில் புதன் ஹோரையில் தாக்கல் செய்கிறார். பொருளாதார மந்தநிலையில்
Recommended Video
சென்னை: 2020-21 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்றைய தினம் சனிக்கிழமையாக இருந்தாலும் சூரிய பகவானுக்கு உகந்த ரத சப்தமி. சூரிய ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நாளில் நல்ல காரியம் செய்வது சிறப்பாக இருக்கும் எனவேதான் சென்டிமெண்ட் ஆக நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
பட்ஜெட் தாக்கல் செய்யும் போது இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மீனம் லக்னம், மேஷத்தில் சந்திரன் மிதுனத்தில் ராகு, கும்பம் ராசியில் சுக்கிரன், புதன், மகரத்தில் சூரியன், சனி, தனுசு ராசியில் கேது, குரு, விருச்சிக ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கடந்த ஆண்டு வெள்ளிக்கிழமையன்று நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது ராகு காலம், அன்றைய நாள் முழுவதும் மரணயோகம் அப்போதே பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தது. இந்த ஆண்டு ராகு காலத்தில்தான் தனது வீட்டை விட்டு கிளம்பி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். ஆனால் பட்ஜெட் உரையை வாசித்தது என்னவோ நல்ல நேரத்தில்தான்.
நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவான 5 சதவீதமாக வீழ்ச்சியடைந்து உள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை மோசமாகச் செயல்பட்டதாலும், வேலையின்மை அதிகரிப்பாலும் வளர்ச்சி குறைந்தது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்த நிலையில், 2வது காலாண்டில் 4.5 சதவீதமாக மேலும் வீழ்ச்சி அடைந்தது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீது மத்திய அரசு அக்கறை காட்டவில்லை, வேலைவாய்ப்பைப் பெருக்கவில்லை, கட்டமைப்பு திட்டங்களுக்குச் செலவிடவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றன. எனவேதான் இந்த நிதிநிலை அறிக்கை மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்தது.
நல்ல நாள் நல்ல நேரம்
இனிப்பு காரகர் சுக்கிரன். குரு தன காரகர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பாக எல்லோருக்கும் சுக்கிரனுக்கு பிடித்தமான இனிப்பான அல்வாவை கொடுத்திருக்கிறார். நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பை ஆரம்பித்த நாள் ஏகாதசி அன்றைய தினம் பெருமாளுக்கு உகந்த நாள். இன்று சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் புதன் ஹோரையும் பெருமாளுக்கு உகந்ததுதான். கூடவே இன்று ரத சப்தமி என்பதும் சிறப்பானது.
குரு பகவானுக்கு உகந்த மஞ்சள்
குரு பகவான் தன காரகர். கால புருஷ தத்துவப்படி குருபகவான் இப்போது தனது வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று கேது உடன் சேர்ந்திருக்கிறார். இந்த கேது குரு சேர்க்கை கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் என்றாலும் குரு பகவானை கேது பகவான் கட்டுப்படுத்தத்தான் செய்வார். குருவின் அருள் நாட்டிற்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் குருவிற்கு உகந்த மஞ்சள் நிற ஆடையில் மங்களகரமாக வந்து பட்ஜெட் வாசித்திருக்கிறார்.
நாட்டிற்கு நல்ல நேரம்
சுதந்திர இந்தியாவின் ஜாதகப்படி ரிஷப லக்னம், கடக ராசி. இப்போது கோச்சாரப்படி ஆறாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் சனி. குருவும் சனியும் ஆட்சி பெற்றிருக்கின்றன. விபரீத ராஜயோகம், சச மகாயோகம் பெற்றிருக்கிறது கடக ராசி. இந்த குருப் பெயர்ச்சியானது யோகத்தை தரா விட்டாலும் கஷ்டத்தை தராது. 27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு பகவான் அதிசாரம் பெற்று மகரம் ராசியில் சஞ்சரிக்கும் 102 நாட்கள் மிகுந்த யோகமும் , நல்ல பலன் தரும், சுப காரியங்களும் நடைபெறும். மகரத்தில் இருந்து குருவின் பார்வை கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிக கடன்கள் அடைபடும். சுபகாரியங்கள் நடைபெறும் நாட்டின் பொருளாதார மந்தநிலை மாறும் நாட்டு மக்களின் வருமானம் பெருகும்.
சுக்கிரன் அள்ளிக் கொடுப்பார்.
பிப்ரவரி 2ஆம் தேதி முதல் சுக்கிரன் இடப்பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடைகிறார். இது சிறப்பான அம்சம். நவ கிரகங்களின் சுக்கிரன் மிகப்பெரிய யோகத்தை கொடுப்பார். கடகம் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பது சிறப்பான அம்சம்.
பொருளாதார மந்தநிலை மாறும் சூழ்நிலை படிப்படியாக உருவாகும்.
ராகுவின் பார்வை
12ஆம் வீடு விரைய செலவுகள் ஏற்படும் வீடு. இந்த வீட்டில் ராகு அமர்ந்திருக்கிறார். செப்டம்பர் மாதம் வரைக்குமே நாட்டில் எதிர்பாராத வகையில் விரைய செலவுகள் அதிகம் ஏற்படத்தான் செய்யும். அதன்பிறகு ஏற்படும் ராகு கேது பெயர்ச்சி நாட்டிற்கு பல நன்மைகளை தரப்போகிறது. காரணம் ராகு பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். நிறைய லாபங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையும் உருவாகும்.
பொருளாதார மந்த நிலை மாறுமா
2019ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மோடி தலைமையிலான பாஜக அரசில் முதன் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையுடன் இரண்டாவது பட்ஜெட்டை நல்ல நேரத்தில்தான் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டை ஆள்பவர்களைப் பொறுத்தும் இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிப்பாதைக்காகவும் இந்த நாட்டு மக்களுக்காகவும் பாஜக தலைமையிலான அரசு நல்லது செய்ய வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வரப்போகும் நிதி ஆண்டிலாவது நாட்டின் பொருளாதார மந்தநிலை மாற வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாகும்.