பீஷ்ம ஏகாதசி நாளில் விரதம் இருந்து தானம் கொடுங்க சொர்க்கம் நிச்சயம்
மதுரை: பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு பீஷ்ம ஏகாதசி வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று வருகிறது. அந்த நன்னாளில் விரதமிருந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம். பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் பிரதமை முதல் சதுர்த்தசி வரை இரண்டு திதிகள் வருவதுண்டு. அதாவது வளர்பிறை பிரதமை முதல் பவுர்ணமி திதி வரையிலும், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையிலும் என இரண்டிரண்டு திதிகள் மாதந்தோறும் வருவது வழக்கம். இதில் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி முதல் சதுர்தசி வரையிலும் வரும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு பலாபலன்களை நமக்கு வழங்கும்.

உத்தராயண காலத்தில் வரும் அஷ்டமி, ஏகாதசி போன்ற தினங்களில் விரதமிருந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த பருவத்தில் உயிர் நீத்தால் மோட்சம் கிடைக்கும் என்பது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மஹாபாரதப் போரில் பிதாமகர் என்றழைக்கப்பட்ட பீஷ்மருக்கு, உத்தராயண காலத்தின் முதல் அஷ்டமி தினத்தில் தான் பகவான் கிருஷ்ணர் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டி அவருக்கு மோட்சம் அளித்தார். அதன் காரணமாகவே அந்த தினத்தை இந்துக்கள் அனைவரும் பீஷ்மாஷ்டமி என்று கொண்டாடி வருகிறோம்.
உத்தராயண கால ஏகதசி திதியில் அம்புப்படுக்கையில் படுத்திருந்த சமயத்தில் பீஷ்மரைக் காண்பதற்கு, பகவான் கிருஷ்ணர் தன்னுடன் பாண்டவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றார். பீஷ்மரைக் கண்டதும், அவரை வணங்கி பாண்டவர்களுக்கு நல்லாசியும் அறிவுரைகளும் வழங்குமாறு பகவான் கிருஷ்ணர் கூறினார்.
பீஷ்மரும் தலையசைத்து, பாண்டவர்களுக்கு பல்வேறு தர்ம உபதேசங்களையும், அறிவுரைகளையும் வழங்கினார். அதோடு, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பெயர்களை சதா சர்வகாலமும் தியானித்தும், துதித்து வணங்கியும் ஒருவன் வாழ்ந்து வருவானென்றால், அவன் இந்தப் பிறவியில் எல்லாவித துக்கத்தையும் கடந்து விடுவான் என்று சொல்லி, என்றைக்கும் நிலைத்திருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பெருமையை விளக்கும் ஆயிரம் நாமங்களைக் கொண்ட விஷ்ணு சகஸ்ரநாமம் என்னும் திவ்ய ஸ்லோகத்தையும் உபதேசித்து அருளினார்.
இப்படிப்பட்ட ஆயிரம் திருநாமங்களைக் கொண்ட ஸ்ரீமஹாவிஷ்ணு வேறு யாருமல்ல. சாட்சாத், இதோ இந்த கிருஷ்ண பரமாத்மாவே தான் என்ற உண்மையையும் சொல்லி எல்லாம் வல்ல பரந்தாமனை வணங்குகிறார். பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு பீஷ்ம ஏகாதசி வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று வருகிறது. அந்த நன்னாளில் விரதமிருந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம்.
வட மாநிலங்களில் பீஷ்ம ஏகாதசி நாளை நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடி வருகிறார்கள். நிர்ஜலா ஏகாதசி என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், ஸ்ரீமத் நாராயணனின் திருநாமங்களை உச்சரித்துகொண்டு இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் வரும் 24 ஏகாதசிகளில் முக்கியமான ஏகாதசி இந் பீஷ்ம ஏகாதசி நாளாகும்.
பீஷ்ம ஏகாதசி தினத்தன்று, பானகம், பழங்கள், ஆடைகள், அன்னதானம் என தங்களால் இயன்றதை தானம் அளிப்பது முக்கியமாகும். மனிதர்கள் செய்யும் நல்லது கெட்டதுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.












Click it and Unblock the Notifications