செவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏன்? - எந்த கோவிலில் பரிகாரம் செய்வது
சென்னை: செவ்வாய் தோஷம் இருக்காமே கல்யாணம் தட்டிப்போயிட்டே இருக்கு.. ஏதாவது பரிகாரம் செய்யக்கூடாதா என்று திருமணம் தாமதமாகும் ஆணையோ, பெண்ணையோ பார்த்து கேட்பார்கள். இந்த கேள்வி திருமண தடையை விட அதிகம் வலியை ஏற்படுத்தும். செவ்வாய் தோஷம் அத்தனை கொடியதா? தோஷம் இருந்தால் பரிகாரம் இல்லையா? என்று கேட்பவர்களுக்காகவே இந்த கட்டுரை.
ரத்தத்தின் காரகன் செவ்வாய். வேகமான கிரகமும் இவரே. செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றவர்களாவோ, ஆதிக்கம் உள்ளவர்களாகவே இருந்தால் அவர்களுக்கு மற்றவர்களை விட உணர்ச்சி கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் . அது சிலருக்கு கோபமாகவோ, சிலருக்கு காமமாகவோ இருக்கலாம். அதுவும் செவ்வாய், சுக்கிரனுடன் சேர்ந்த ஜாதகமாக இருந்தால் அடடா கேட்கவே வேண்டாம். அந்த விசயத்தில் படு வேகமாக இருப்பார்கள்.
ஜாதகத்தில் செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களையே செவ்வாய் தோஷம் பெற்றவர்களாக கூறப்படுகிறது. ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர். இதனால்தான் சிக்கலே ஏற்படுகிறது.
எனவேதான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களை செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.

செவ்வாய் பகவான்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரனுக்கு 1,2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் திசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என ஜோதிடம் கணிக்கிறது. 1,2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.

தோஷத்திற்கு தோஷ ஜாதகம்
தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஆண் ஜாதகருக்கு லக்னம் அல்லது சந்திரனுக்கு 1, 7, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் பெண்ணிற்க்கும் அதே இடங்களில் செவ்வாய் இருக்குமாறு திருமணம் செய்வது நல்லது, அதேபோல 2,4,12 ஆகிய எந்த இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அதே அமைப்புடையா ஜாதகரோடு திருமணம் செய்யும்போது தாம்பத்ய வாழ்வு

செவ்வாய் ஆட்சி உச்சம்
செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமற்ற நிலை ஏற்படும் என கருதுகின்றனர். காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குறையும் என்றும் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது என்றும் கூறி வருகிறார்கள்.

செவ்வாய் தோஷம் பரிகார தலம்
செவ்வாய் தோஷத்தால் தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும். சீர்காழி அருகே தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

செவ்வாய் பகவானுக்கு வழிபாடு
செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் திருமண இக்கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும். வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செவ்வாய்க்கு அதி தேவதையான முருகப்பெருமானை வழிபடவேண்டும். அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட தோஷம் நீங்கும்.

தைரியம் வீரம் தரும் செவ்வாய் விரதம்
செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை மங்களவார விரதம் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது. செவ்வாய் தோஷமும் நீங்குகிறது. ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும் பிறக்கும்.
செவ்வாய்திசை, செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நல்லது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பவழத்தைக் கழுத்துச் சங்கிலியிலோ, மோதிரத்திலோ அணிந்து கொள்ள வேண்டும். சகோதரர்களுடன் உறவு பலப்படும்.












Click it and Unblock the Notifications