சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம் - டிச.30ல் ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. 30ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
சிதம்பரம்: மார்கழி மாத திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாளை தேரோட்டமும் நாளை மறுநாள் 30ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது. புதன்கிழமை அதிகாலை 3மணி முதல் 6 மணி வரை மார்கழி மகாதிருமஞ்சனமும் காலை 10 மணிக்கு மேல் இராஜசபையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, காலை மற்றும் இரவு பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐந்தாம் நாள் திருவிழாவான தெருவடைச்சான் டிசம்பர் 25ஆம் தேதி இரவு 11 மணிக்கு வீதியுலா சென்றது. இந்த தெருவடைச்சான் முழுவதும் வாசனைப் பொருள்களான ஏலக்காய், கிராம்பு, முந்திரி, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது.
தெருவடைச்சான் என்பது தெரு முழுவதையும் அடைத்துக் கொண்டு சாமி முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைவது தெருவடைச்சான் வீதி உலா என்று பெயர். இதனை ஏராளமானோர் பார்த்து தரிசனம் செய்தனர். நாளை 29ஆம் தேதி தேர்த் திருவிழாவும், 30ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

இந்த உற்சவத்தில் கடலூர் மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
தமிழக அரசுத்தரப்பில், கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் ஏதும் அரசுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்குள்ளும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மத விவகாரங்களில் காரணமற்ற கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது எனக் கூறி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத்திற்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் கூறியுள்ளபடி, பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையும், 6 முதல் 7 மணி வரையும் தலா 200 பக்தர்கள் வீதம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் எனவும், பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி, கொரோனா அறிகுறி இல்லாவிட்டால் அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அனைத்து பக்தர்களும் முககவசம் அணிய வேண்டும் எனவும், கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், திறந்த வெளியில் 50 சதவிகிதம் பேர் கூட அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவினால் தேரோட்டத்தையும் ஆருத்ரா தரிசன விழாவையும் காண பக்தர்கள் தயாராகி வருகின்றனர். இதனிடைய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று மாலை தங்கரதத்தில் பிச்சாடன மூர்த்தி வீதியுலா நடைபெறுகிறது. சோமாஸ்கந்தர் வெட்டுங்குதிரையில் பவனி வருகிறார்.
நாளைய தினம் அதிகாலை அன்னை சிவகாமி, அருள்மிகு ஆனந்த நடராசப்பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். மாலை 6 மணிக்கு மேல் திருத்தேரில் இருந்து ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளல் நடைபெறுகிறது.
30.12.2020 புதன்கிழமை அதிகாலை 3மணி முதல் 6 மணி வரை மார்கழி மகாதிருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேல் இராஜசபையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நண்பகல் 12 மணிக்கு மேல் இராஜசபையில் இருந்து சிற்சபைக்கு அன்னை சிவகாமி, அருள்மிகு நடராசப்பெருமான் எழுந்தருளும் ஆருத்ரா தரிசன காட்சியை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications