சித்திரை மாத ராசி பலன் 2022: வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா
சித்திரை மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தினால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைகிறார். சித்திரை மாதம் மேஷ மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுவதும் இந்த மாதத்தில்தான். அம்மன் ஆலயங்களில் தேரோட்டம் உற்சவங்கள் களைகட்டும். பல்வேறு சிறப்புக்கள் கொண்ட சித்திரை மாதத்தில் உச்சம் பெற்ற சூரியனாலும் ஆட்சி பெற்ற குருவினாலும் வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு பெற்று உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷ ராசியில் உச்சம் பெற்ற சூரியன், புதன் ராகு... துலா ராசியில் கேது... மகரத்தில் சனி...கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன்... மீனத்தில் குரு என கிரகங்கள் பயணிக்கின்றன.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் புதன் 11 ஆம் தேதி ரிஷபத்திற்கும் சுக்கிரன் 14ஆம் தேதி மீனத்திற்கும் சனி 16 ஆம் தேதி கும்பத்திற்கும் இடம் பெயர்கிறார்கள்.மற்ற கிரகங்களில் எந்த வித மாற்றமும் இல்லை. நவகிரகங்களின் சஞ்சார மாற்றத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
ராஜ கிரகமான சூரியன் உங்கள் ராசிக்கு வந்து உச்ச நிலையை அடைந்து இருக்கிறார். மற்ற கிரகங்களும் உங்களுக்கு மகத்தான பலனை தரப் போகின்றன. சித்திரை மாதத்தில் பத்தரை மாற்று தங்கம் ஆக பரிமளிக்க போகிறீர்கள். செவ்வாய் பதினொன்றில் இருப்பது சிறப்பு. ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபத்தை தரும். விவசாய தொழில் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்யும். சூரியனுடன் இணைந்து இருக்கும் புதன் உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை கொடுப்பார். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள் பூர்வீகச் சொத்து கைக்கு வந்து சேரும். அரசுத் துறையில் வேலை ஒப்பந்தம் செய்வீர்கள். 12ல் நிற்கும் குரு கணவன் மனைவிக்கு இடையே பிரிவை ஏற்படுத்துவார். அதாவது கடல் கடந்து அனுப்பி வைப்பார். இது லாபத்துடன் ஏற்படும் பிரிவு. லாபஸ்தானத்தில் நிற்கும் சுக்கிரன் உங்களுக்கு பல யோகங்களை கொடுக்க தவறமாட்டார். பொன் நகைகள் வாங்கி பூரிப்படைவீர்கள்.அலங்காரப் பொருள் உற்பத்தியில் லாபத்தை அள்ளுவீர்கள். பத்தாம் இடத்து சனி பக்குவமாக நன்மை செய்வார். அரசு ஊழியர்கள் நல்ல பலனை அடைவார்கள். சொத்து விற்பனை சுலபத்தில் நடக்காது. 11-ஆம் இடத்துக்கு செல்லும் சனியும் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். 12-ஆம் இடத்துக்கு செல்லும் சுக்கிரனும் யோகத்தை கொடுப்பார் கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நகை துணிமணிகள் வாங்கி சந்தோஷம் அடைவார்கள்.ஒன்றாம் இடத்து ராகு மருத்துவச் செலவுகளை கொடுப்பார். மனநிம்மதியை கெடுப்பார். உறவினர்களின் பகை உண்டாகும். 12-ஆம் இடத்து கேது பாதகத்தை தரமாட்டார். அறிவுத் திறமையை பெருக்கி அற்புத வாய்ப்புகளை கொடுப்பார். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

ரிஷபம்
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
சித்திரை மாதம் உங்கள் சிந்தையை குளிர்விக்கும் அற்புதமான பலன்களை அணிகலனாக கொண்ட மாதமாக திகழ்கிறது. சூரியன் உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அதிக சுபிட்சம் கிடைக்காது. சூரியனின் பலன் சுமாராக இருந்தாலும் மற்ற கிரகங்கள் பலன்களை அள்ளித்தரும். அரசு ஊழியர்கள் பணி மாறுதல் அடைவார்கள். ராசி அதிபதி வலுவாக இருப்பதால் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் மணல் செங்கல் வியாபாரத்தில் அமோக லாபத்தை தருவார். புதனும் நல்ல நிலையில் இல்லை. வாங்கிய கடனை குறித்த நேரத்தில் கொடுக்க முயலுங்கள். கெட்ட பெயர் எடுக்க வேண்டாம். குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பது ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்தும். தொழில் வியாபாரம் சூடுபிடிக்கும். ராசியாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.14 தேதி லாப ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். ஸ்டேஷனரி தொழில் லாபத்தை கொடுக்கும். மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவி உறவு கலகலப்பாக இருக்கும். சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உள்ளதால் வடிகட்டி தான் பலன் தருவார். கடன் பாதிப்பு ஏற்படும். பந்தயங்கள் பயன்தராது. சனிபகவான் 16ஆம் தேதி பத்தாமிடம் செல்கிறார். தொடங்கும் தொழில்கள் விருத்தியடையும். தொட்டதெல்லாம் பொன்னாகும்.12-ஆம் இடத்து ராகு பிள்ளைகளின் படிப்புக்கு பாதிப்பை உண்டு பண்ணுவார். கவனமாக கண்காணிப்பு செய்யுங்கள். பெரியோர்களின் அன்பைப் பெறுவதற்கு உதவியாக இருப்பார். வெளியூர் பயணங்களில் வெற்றி தருவார். ஆறாம் இடத்தில் கேது. மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். அதன்மூலம் அவர்கள் அன்பை பெறுவீர்கள் எதிர்காலத்துக்கு அது பேருதவியாக அமையும். கடும் முயற்சி தொழிலில் வெற்றியைத் தரும். கணினித் துறையில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

மிதுனம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
இந்த சித்திரை மாதத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். எல்லாக் கிரகங்களும் நல்லதை செய்வோம் என்று பிடிவாதமாக நிற்கின்றன. லாப ஸ்தானத்தில் நிற்கும் சூரியன் யோகங்களை அள்ளித் தருவார். புதனுடன் இணைவு ஏற்பட்டிருப்பதால் புதிய தொழில்கள் தொடங்கலாம். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். கூட்டுத்தொழில் கூட சிறந்த முறையில் நடக்கும். உணவு தொழில் செய்பவர்கள் பெரிய ஏற்றத்தைக் காண்பார்கள். ரியல் எஸ்டேட் தொழிலும் சூடுபிடிக்கும். சந்திர பகவானின் பயணம் ஏற்ற இறக்கங்களை கொடுக்கும். விருந்து நிகழ்ச்சிகளால் வீடு கலகலக்கும். புதன் 11 இடத்தில் நிற்கிறார். வாகனங்கள் வாங்குவீர்கள். தொழிலில் மிகச்சிறந்த லாபம் கிடைக்கும். அதன் மூலம் இன்னும் தொழில் தொடங்க வழி வகைகள் கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டு ஊக்கமாக அமையும். திடீர் பணவரவு உண்டாகும். போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பாக்கியவானுக்கு பதினொன்றில் குரு. நீண்டநாள் நோய்கள் அகலும். வறுமை மறையும். வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். புகழ் அதிகரிக்கும். எட்டில் இருக்கும் சனி தவறு செய்தால் தட்டி கேட்பார். அதேநேரத்தில் கொட்டியும் கொடுப்பார்.16-ஆம் தேதி சனி பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கிறார்.இரும்பு தொழில் கூட உங்களுக்கு கரும்பு மாதிரி இனிக்கும். அதே நேரத்தில் உடல் நலத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ராகுவிற்கு பதினோராம் இடம் மிகச் சிறப்பு. லாபத்தை அள்ளி தருவார். போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையும். தொழில் மேலும் மேலும் உயரும். பெரியோர்களின் ஆசி 5ஆம் இடத்து கேதுவால் கிடைக்கும். ஆதாயம் பெருகும். வழக்குகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவு வரும். கடன் வாங்க நேரலாம்.

கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசி அன்பர்களே... சித்திரை மாதம் கிரகங்கள் அத்தனையும் சீரான பலன்களை தரப் போகின்றன. சூரியனும் புதனும் இணைந்து பத்தாமிடத்தில் நிற்கிறார்கள். அரசாங்க வேலைக்கான பரீட்சை எழுதுங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். தற்காலிக வேலைகள் நிரந்தரமாக மாறி நிம்மதிப் பெருமூச்சுவிட வைக்கும். கூட்டுமுயற்சியில் புதிய தொழில் தொடங்குவீர்கள். உங்களின் உழைப்பு பல பேருக்கு வேலை தரப்போகிறது. சந்திர பகவான் சாதக பாதக பலன்களை தான் தருவார். உணவகத் தொழில் நல்ல லாபம் தரும். இரும்பு வியாபாரிகளுக்கு இரட்டிப்பு பலன்.எட்டாம் இடத்து செவ்வாய் கெட்ட பெயரை ஏற்படுத்துவார். எதிலும் பணிந்து நடக்க வேண்டும். எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பிடிவாத போக்கை கைவிட வேண்டும்.குடும்பத்தில் குழப்பங்கள் நிலவும். பத்தாம் இடத்து புதன் பணத்தை சேமிக்க வைப்பார். தொழிலில் முன்னேற்றத்தைத் தந்து லாபத்தை பெருக்குவார். மற்ற கிரகங்களின் பாதகத்தை சாதகமாக மாற்றுவார். பதினோராம் தேதி புதன் ரிஷபத்துக்கு இடம் மாறுகிறார். உங்களுக்கு நல்ல பலன்களைத் தான் வாரித் தருவார்..ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு. வெளியூர் பயணங்களால் நல்ல லாபம். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். மருந்து விற்பனை செய்யபவர்கள் பலன் அதிகம் பெறுவார்கள். வங்கிக் கணக்கில் பணத்தின் இருப்பு கூடும். 8ஆம் இடத்தில் சுக்கிரன். உறவினர்கள் விரோதம் உண்டாகும். மனைவியால் விரயச் செலவு ஏற்படும். விவாதங்களில் ஈடுபட வேண்டாம். எட்டாம் இடத்தில் சனி பகவான். மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து குடும்பம் நடக்கும். எதிர்பார்த்த காரியம் தள்ளிப்போகும். உரிய நேரத்தில் பணவரவு இருக்காது. பத்தாம் இடத்து ராகு மேலே சொன்ன பாதகங்களை சரி செய்வார். நண்பர்களின் உதவியால் நல்லது நடக்கும். கெடுபலன்கள் வராமல் பாதுகாப்பார். பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள். தாயார் வகையில் மருத்துவ செலவு ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications