காக்கைக்கும் ஆட்சி மாற்றத்துக்கும் தொடர்பு உண்டு - காக்கா முட்டைகளை எதிர்கட்சிகள் கவனிக்கவும்
சென்னை: லோக்சபா தேர்தல் வரப்போகிறது. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்து வரும் அதே நேரத்தில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய சமஸ்கிருத நூலான பிருஹத் சம்ஹிதாவில் காகங்களுக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் தொடர்பு இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. ஒரு காக்கை தனது கூட்டில் முட்டையிட்டு ஐந்து குஞ்சுகள் பொறித்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஜோதிடர் வராஹமிகிஹர் கணித்துள்ளார்.
லண்டனில் டவர் மியூசியத்தில் ஆறு அண்டங்காக்கைப் பறவைகள் வளர்க்கப்படுகின்றன. இதை பாதுகாக்க ஒருவர் வேலை செய்கிறார். அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் தருகிறார்களாம். இந்த ஆறு காக்கைகளும் அந்தக் கோட்டையில் இருந்து போய்விட்டால் பிரிட்டிஷ் முடியாட்சி முடிந்துவிடும் என்றும் அத்தோடு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்துவிடும் என்றும் பலத்த நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் பாதுகாப்பாக காக்கைகளை வளர்க்கிறார்களாம்.
காகங்கள் நம் முன்னோர்கள். கஷ்டங்கள் வரும் போது தினசரியும் காகங்களுக்கு உணவளித்தால் நல்லது நடைபெறும் என்று ஜோதிடர்கள் பரிகாரம் கூறுவார்கள். இன்றைக்கும் கிராமப்புறங்களில், காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்றும், ஏதோ நல்ல தகவல் வரப்போவதாகவும் பேசிக்கொள்வதைக் கேட்கலாம். காக்கைபாடினியார் எனும் சங்க காலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களைப் கூறியுள்ளார்
ஜோதிட மேதை வராஹமிஹிரர்
ஜோதிட மேதை வராஹமிஹிரர் எண்பது வயது வரை வாழ்ந்தவர். வராஹத்தின் மூலம் இளவரசனுக்கு மரணம் வரும் என்பதை கணித்துச் சொன்னதால் வராஹமிஹிரர் என அழைக்கப்பட்டார். வானியல் சாஸ்திரம் பற்றியும், ஜோதிடக் கலையைப் பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்கள் ஆச்சரியத்தை விளைவிக்கும் அபூர்வ நூல்களாக இலங்குகின்றன.
வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதா
வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவில் காக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன 1500 ஆண்டுகளுக்கு முன் காக்கைகள் பற்றி நூற்றுக் கணக்கில் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எழுதி வைத்திருக்கிறார். விவசாயம், மற்றும் மரங்களுக்கு வரும் வியாதிகள், நிலத்தடி நீர் கண்டுபிடிப்பது, கோவில் கட்டுவது, விக்ரகம் வைப்பது, சகுன சாஸ்திரம், கட்டிடம் கட்டுவது, வீடுகளின் வகைகள், மலர்கள், யானை, குதிரை, பசுமாடுகள் தொடர்பான சாஸ்திரங்கள், வானிலை, மழை, மேகம் தொடர்பான சாஸ்திரங்கள் அதில் எழுதப்பட்டுள்ளன.
தங்க நகைகள் வரும்
பிருஹத் சம்ஹிதாவில் 1500 ஆண்டுகளுக்கு முன் காக்கைகள் பற்றி நூற்றுக் கணக்கில் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எழுதி வைத்திருக்கிறார்
காகம் சில பொருட்களை எடுத்துச் சென்றால் அதை ஒருவர் இழப்பார். கொண்டுவந்தால் அதை ஒருவர் பெறுவர். எடுத்து காட்டாக மஞ்சள் நிற பொருட்களை உங்களிடம் இருந்து பறித்துச் சென்றால் நீங்கள் தங்க நகைகளை இழப்பீர்கள். அது மஞ்சள் நிறத்தைக் கொண்டுவந்தால் உங்களுக்கு தங்கம் கிடைக்கும் என எழுதப்பட்டுள்ளது.
மழையை சொல்லும் காக்கா கூடு
வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் தானிய விளைச்சல் அமோகமாக இருக்கும். ஒரு பட்டுப்போன மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும். ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது என்றும் அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் வராஹமிஹிரர் எழுதியுள்ளார்.
4 மாதங்களுக்கு மழை
மரத்தின் கிழக்குப் புற கிளையில் கூடு கட்டினால் இலையுதிர் காலத்தில் மழை பெய்யும். மேற்குக் கிளையில் கூடு கட்டினால் மழைக்காலத்தில் மட்டும் மழை பெய்யும். தெற்கு மற்றும் வடக்கு கிழக்கு கிளைகளில் கூடு கட்டினால் மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை பெய்யும். மரத்தின் உச்சியில் கூடு கட்டினால் ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய 4 மாதங்களுக்கு மழை கொட்டும். தென்கிழக்கு திசை கிளையில் கூடு கட்டினால் அவ்வப்போது மழை பெய்யும். தென்மேற்கு திசையில் கூடு கட்டினால் காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும். கோவில்கள், வீடுகள், முட்புதர்கள் முதலிய இடங்களில் கூடு கட்டினால் பசி, பட்டினி, பஞ்சம் வரும்.
அழிவை எச்சரிக்கும் காகங்கள்
ஒரு கிராமத்தின் நடுவில் காரணம் இன்றி காக்கைகள் கூட்டம் போட்டு சத்தம் எழுப்பினால் பஞ்சம் வரும். ஊரைச் சுற்றிச்சுற்றி வந்தால் எதிரிகள் முற்றுகை இடுவர். பல குழுக்களாகப் பிரிந்து சத்தம் எழுப்பி எச்சரித்தால் அழிவு ஏற்படும். சுனாமி, பூகம்பம், திடீர் வெள்ளம் ஆகியவற்றுக்கு முன் இப்படி பறந்துள்ளன.
எதிரிகளினால் தொல்லை
காகங்கள் இரவில் வலம் வந்தால் ஊருக்கு அழிவு! ஒரு தனி மனிதனை காகம் வலம் வந்தால் அவனுக்கு சொந்தக்காரர்கள் இடமிருந்து தொல்லை ஏற்படும். இடம் இருந்து வலம் போனால் எதிரிகள் இடமிருந்து தொல்லை ஏற்படும். துணிச்சலாக மக்களைத் தாக்கினால் எதிரிகள் பெருகுவர்.
லாபம் பணவரவு
ஒருவரின் குடைகள், செருப்புகள், வண்டிகள், கருவிகளை காக்கைகள் தாக்கினால் அவருக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். காகங்கள் மண்ணையோ, தானியங்களையோ, பூக்களையோ கொத்தி வந்து நம் மீது போட்டால் தன லாபம்.
பட்டம் பதவிகள் கிடைக்கும். குடைகள், வண்டிகள், சட்டையில் எச்சம் போட்டால் செல்வமும் உணவும் கிடைக்கும்! கலயங்கள், விலையுயர்ந்த பொருட்களைத் தூக்கிச் சென்றால் பொருள் இழப்பு என்பதை உணர்த்துகின்றன.
காக்கைகளின் முட்டைகள்
ஒரு காக்கை 3 அல்லது 4 குஞ்சு பொறித்தால் அமோக உணவு விளைச்சல். ஐந்து குஞ்சுகள் பொறித்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கு பதிலாக காகங்கள் ஒரே முட்டை இட்டாலோ, முட்டையே இடாமல் இருந்தாலோ கூட்டில் இருந்து முட்டைகளை தள்ளி உடைத்து விட்டாலே நல்லதல்ல என்கிறார் வராஹமிஹிரர். ஆளுங்கட்சிக்காரர்களே... எதிர்கட்சிக்காரர்களே... காக்கா எத்தனை முட்டை இட்டு குஞ்சு பொறிக்குதுன்னு நல்லா கவனிங்க.