12 ராசிக்காரர்களும், 27 நட்சத்திரக்காரர்களும் எந்த பைரவரை வணங்க வேண்டும் தெரியுமா?
இன்று கால பைரவ ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பைரவர் வழிபாடு இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. 12 ராசிக்காரர்களும் பைரவரை வணங்க வேண்டிய நாட்கள், கோவில்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மதுரை: பைரவர், சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் என்று புராண கதைகள் கூறுகின்றன. இவர் காவல் தெய்வம் என்பதால் பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. கால பைரவ ஜெயந்தி தினமான இன்று 12 ராசிக்காரர்களும் பைரவரை வணங்க வேண்டிய நாட்கள், 27 நட்சத்திரக்காரர்களும் செல்ல வேண்டிய பைரவர் கோவில்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தில் கால பைரவர், சனியின் குருவாக குறிப்பிடப்படுகிறது. பொதுவாக பைரவருக்கு வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள் ஆகும். பொதுவாக தேய்பிறை அஷ்டமி திதியில் வழிபடுகின்றனர். ஞாயிறு ராகு காலத்திலும் அபிஷேகம் செய்து விளக்கேற்றி வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வாரத்தில் ஒவ்வொரு நாளும் பைரவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வதால் பல நன்மைகளை பெறலாம். பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது. செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்று அகத்தியர் நாடி கூறுகிறது.
பைரவரின் அம்சங்கள்
அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர்,கபால பைரவர்,பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்கள் பற்றி குறிப்பிடுகின்றனர். மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு நிலைகளும் உள்ளன. வடுக பைரவரின் உருவங்களை நான்கு கரங்களுடனும், எட்டு கரங்களுடனும் காணலாம். பைரவரை வணங்கினால் சனிதோஷம் நீங்கும், பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர். பைரவர் படத்தை வீட்டில் வடக்குப்புறம் வைத்தால் வாஸ்து தோஷத்தினால் வரக்கூடிய தீமைகள் அகலும் என்கிறார் காக புஜண்டர்.
சிம்ம ராசிக்காரர்கள் ஆலயங்கள்
வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவருக்கு அர்ச்சனை மற்றும் ருதராபிஷேகம் செய்து வடமாலை சாத்தி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்கள் ராகுகால நேரத்தில் கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் இழந்த செல்வத்தை மீட்கலாம். செல்வ வளம் பெருகும்.
சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமைகளில் பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும்.
மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில். பூரம்: ஸ்ரீ கோட்டை பைரவர்- பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில். உத்திரம்: ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்- சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.
கடக ராசிக்காரர்கள் ஆலயங்கள்
கடக ராசிக்காரர்கள் திங்கட் கிழமைகளில் பைரவரை வழிபடலாம். திங்கட்கிழமையில் சிவபெருமானுக்கு பிரியமான வில்வத்தால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால், சிவனருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக்காப்பு போட்டு, புனுகு பூசி நந்தியாவட்டை மலரை சாற்றி வழிபட்டால் கண் சம்மந்தமான நோய்கள் அகலும்.
புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமிகள் மடாலயம். பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.
ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர்- காளஹஸ்தி.
மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் ஆலயங்கள்
செவ்வாய்க்கிழமை மாலையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் இழந்த பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்கும். மேலும் மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபட உகந்த நாளாகும். எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. குறைந்தது 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஆறு தேய்ப்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டு வந்தால் நற்பலன்கள் உங்களை வந்தடையும்.
அஸ்வினி: ஸ்ரீ ஞான பைரவர்- கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. பரணி: ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில். கார்த்திகை: ஸ்ரீ சொர்ண பைரவர்- திருவண்ணாமலை. அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில். கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர்-சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள்
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள் புதன்கிழமை. இந்த நாளில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடும் பட்சத்தில் வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும். திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்- ஆண்டாள் கோவில் பாண்டிச்சேரி விழுப்புரம் சாலையில் உள்ளது. புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமிகள் மடாலயம். அஸ்தம்: ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில். சித்திரை: ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி- மல்லிகார்ச்சுன காமாட்சி கோவில்.
தனுசு மீனம் ராசிக்காரர்கள்
தனுசு, மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம், காத்து, கருப்பு போன்றவைகள் நம்மை விட்டு விலகி நலம் கிடைக்கும். மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.
பூராடம்: ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில். உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில். பூரட்டாதி: கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.
உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்- தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.
ரிஷபம் - துலாம் ராசிக்காரர்கள்
ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் மங்களகரமான வெள்ளிக்கிழமை மாலை வேளையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகும். ரோகிணி: ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர். மிருகசீரிஷம்:ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம். சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை. விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.
மகரம், கும்பம்
சனிபகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும். மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள் இது. உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.
திருவோணம்:திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில். அவிட்டம்: சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி. சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம். 12 ராசிக்காரர்களும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் அஷ்ட பைரவர்களை வணங்கலாம்.