அட்சய திருதியை 2019: பொன்மழை பொழிய தானம் செய்யுங்கள்! - கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள்
அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்குவது மட்டும் முக்கியமல்ல பல முக்கிய நிகழ்வுகளும் அன்றைய தினம் நிகழ்ந்துள்ளன. தானம் செய்தால் உங்கள் வீட்டிலும் பொன் மழை பொழியும்.
மதுரை: ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனியை பொன் மழையாக பொழியச் செய்த நாள் 'அட்சய திருதியை' நன்னாள் ஆகும். எனவேதான் அட்சய திருதியை நாளில் ஏழைகளுக்கு தானம் செய்தால் உங்கள் வீட்டிலும் பொன் மழை பொழியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
அட்சயம் என்பதற்கு வளருதல் என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாள் அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று தானம் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.
ஆதிசங்கரரால் அருளப்பட்ட கனகதாரா ஸ்தோத்திரத்தை அருள் பெருகும் அட்சய திருதியை நன்னாளில் பாராயணம் செய்தால், திருமகள் அருள் கடாட்சத்தால் நமது வாழ்விலும் வளம் பெருகும்.

கங்கை நதி பூமிக்கு வந்த நாள்
பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது சூரிய தேவனிடமிருந்து அள்ள அள்ளக் குறையாக அட்சய பாத்திரத்தைப் பெற்றனர். அதுவும் இதே நாளில்தான். பரசுராமர் அன்றுதான் தோன்றினார். கங்கை நதி அன்று தான் விண்ணிலிருந்து பூமியில் கால்பதித்தாள். சுதாமா என்கிற குசேலர் அன்றுதான் துவாரகையில் பகவான் கிருஷ்ணரை சந்தித்தார். அவல் பரிசளித்த குசேலருக்கு செல்வ வளங்களை வழங்கினார் கிருஷ்ணர்.

பத்ரிநாத் கோவில் திறப்பு
ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் அருகில் உள்ள சிம்மாசல நரஸிம்ம ஸ்வாமியின் திருமுக தரிசனம் இந்த ஒருநாள்தான் நடைபெறும். மற்றபடி வருடம் முழுக்க திருமுகத்தில் சந்தனகாப்புதான் சாற்றி இருப்பார்கள். பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் ரதயாத்திரைக்கான தேர் கட்டும் பணியை அன்றுதான் தொடங்குவார்கள். இமயமலையில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்கள் அன்று முதல் தரிசனத்திற்கு திறப்பார்கள். கும்பகோணத்தில் அன்று காலை 12 எம்பெருமான்களுக்கு கருடசேவை வைபவம் நடைபெறும்.

காசி அன்னபூரணி
குபேரன் அன்று தான் பத்மநிதி மற்றும் சங்கநிதியை பகவானிடமிருந்த கிடைக்கப் பெற்றான். காசி அன்னபூரணி அன்று தான் தன்னுடைய தரிசனத்தை உலக மக்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தாள். வியாசர் அட்சய திருதியை தான் மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தார்.

கனகதாரா யாகம்
கேரளாவின் காலடியில் உள்ள கிருஷ்ணர், காலடியப்பன் என்று அழைக்கப்படுகிறார். கருவறையில் உள்ள கண்ணன், ஒரு கையில் வெண்ணெய் ஏந்தியும், மறு கையை இடுப்பில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். ஆலய கருவறையை 'கிருஷ்ண அம்பலம்' என்று அழைக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் சிவன் சன்னிதியும், இடதுபுறம் சாரதாம்பிகை சன்னிதியும், சக்தி விநாயகர் சன்னிதியும் அமைந்துள்ளன. இக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஆண்டுதோறும் கனகதாரா யாகம் நடக்கிறது.

கனகதாரா ஸ்தோத்திரம்
ஆதிசங்கரர் வாலிபராக இருந்தபோது யாசகத்துக்காக ஒரு மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றார். வறுமையான நிலையில் இருந்தபோதும்கூட அந்த மூதாட்டி, ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தாராம். இதனால் நெகிழ்ந்துபோன ஆதிசங்கரர், இதுபோன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கும் அவர்கள் உதவுவார்களே என்று எண்ணி தனது குலதெய்வமான திருக்காலடியப்பனின் மனத்தில் குடிகொண்ட மகாலட்சுமியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினாராம். இதில் உள்ளம் குளிர்ந்த மகாலட்சுமி அந்த ஏழை மூதாட்டியின் குடிசையில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள். ஓர் அட்சய திரிதியை நாளில் இந்த சம்பவம் நடந்ததாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் அட்சயதிரிதியை நாளன்று காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோயிலில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம் செய்யப்படுகிறது.

தங்க நெல்லிக்கனி பிரசாதம்
அப்போது 32 நம்பூதிரிகள் 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரத்தை ஜெபிக்கின்றனர். மே 9ம் தேதி ஆதி சங்கரர் அவதரித்த நாள் வருகிறது. யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு ரூ.5001 தங்க நெல்லிக்கனியும், ரூ.1001 மதிப்புள்ள வெள்ளி நெல்லிக்கனியும், ரூ.351 மதிப்புள்ள கனகதாரா யந்திரமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நெல்லிக்கனியை தபாலில் பெற விரும்புவோர், ஸ்ரீகுமார் நம்பூதிரி, நிர்வாக அறங்காவலர், காலடி தேவஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், காலடி- 683 574 , எர்ணாகுளம் என்ற முகவரிக்கு பணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்

அட்சய பாத்திரம் போல செல்வம் பெருகும்
கொடுக்க கொடுக்க செல்வம் வளரும் அதுபோல நாம் பிறருக்கு தானம் செய்யும் போதுதான் நம்மிடம் உள்ள செல்வம் வளரும் எனவே தானம் செய்யுங்கள் உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தில் இருந்து வருவது போல செல்வம் பெருகும். ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் தானம் கொடுத்தால் உங்கள் வீட்டிலும் தங்கமழை பொழியும்.












Click it and Unblock the Notifications