குருபெயர்ச்சி 2018-19: மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரம்
குரு பகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 4ஆம் தேதியும் திருக்கணித பஞ்சாங்கப்படி அக்டோபர் 11ஆம் தேதி முதல் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு பலன்களை
மயூரா அகிலன்
சென்னை: சுப கிரகமான குரு பகவான் ஒருவருக்கு திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற விசயங்களில் நன்மை செய்யக்கூடியவர். இவர் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறார். அக்டோபர் 11ஆம் தேதியன்று திருக்கணிதப்பஞ்சாங்கப்படி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள், பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.
வீரமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. ராசிக்கு 7வது வீடான துலாம் ராசியில் அமர்ந்து சம சப்தமபார்வையை வீசும் குரு பகவான் அக்டோபர் முதல் ராசிக்கு 8வது வீட்டில் அமரப்போகிறார். உங்கள் ராசி அதிபதி செவ்வாயின் நட்பு கிரகம் குரு என்பதால் பாதிப்பு அதிகம் இருக்காது.
'எட்டில் குரு வந்தால் எமனால் கண்டம், சுகக்கேடு' என்று புலிப்பாணி சோதிடர் சொன்னாலும் அச்சம் வேண்டாம், ஏனென்றால் குருபகவான், உங்கள் ராசி அதிபதி செவ்வாயின் நட்பு கிரகம் என்பதால் பயப்பட தேவையில்லை. நல்லதே நடக்கும். குரு இருக்கும் இடம் கெடுதி. குரு பார்வை கோடி நன்மை என்பார்கள் எனவே குரு பார்வையினால் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.
நல்லதே நடக்கும்
குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்து மீனம், ரிஷபம், கடகம் ராசிகளைப் பார்க்கிறார். இது உங்கள் ராசிக்கு 2,4,12ஆம் வீடுகளைப் பார்ப்பதால் பலன்கள் நல்லதே நடக்கும். பணப்புழக்கம் அதிகம் இருக்கும், கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். 4வது வீட்டை பார்ப்பதால் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள், வண்டி வாகனங்களை பராமரிப்பீர்கள். விரைய ஸ்தானமான 12வது வீட்டில் பார்வை விழுவதால்
செலவுகளை சுப விரையமாக மாற்றுங்கள். வெளிநாடு செல்லும் யோகம் வரும்.
சுப நிகழ்ச்சிகள் தள்ளிப்போடுங்கள்
வீட்டில் சுபகாரியங்கள் செய்வதை ஒத்திப்போடவும். காதலர்களிடையே சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். சண்டைகளை சரி செய்து சமாதானமாக போவது நல்லது. அவ்வப்போது மன உளைச்சல் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை குரு அதிசாரமாக தனுசு ராசிக்கு நகர்வதால் நன்மைகள் ஏற்படும் சுபகாரியங்களை செய்ய ஆரம்பிக்கலாம்.
ஆரோக்கியத்தில் அக்கறை தேவை
சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். உண்ணும் உணவில் கவனமாக இருக்கவும். செரிமான கோளாறு, அஜீரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை. உறவுகள், சொந்தங்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
முயற்சி வெற்றியடையும்
குரு எட்டாம் வீட்டில் இருந்தாலும் சனிபகவான் 9வது வீடான பாக்ய ஸ்தானத்தில் இருப்பதால் நல்லதே நடக்கும். ராகு கேது பெயர்ச்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ உள்ளது. ராகு 3வது வீடான முயற்சி ஸ்தானத்திலும், கேது 9வது வீடான பாக்ய ஸ்தானத்திலும் அமரப்போவதால் முயற்சி செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
குருபகவானை சரணடையுங்கள்
வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபடலாம். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடலாம். சித்தர்கள் சமாதிக்கு சென்று தியானம் செய்வதன் மூலம் மனக்கலக்கம் தீரும். ஏழை, எளியவர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகளை தானமாக எடுத்து கொடுக்கலாம். அன்னதானம் செய்வது நல்லது. தென்திட்டை குருபகவானை சென்று தரிசனம் செய்து வரலாம்.