மகாளய அமாவாசையில் 21 தலைமுறை பித்ருக்களுக்கு தர்ப்பணம் - எங்கே தரவேண்டும் தெரியுமா?
நம்முடைய முன்னோர்கள் நம்மை திட்ட மாட்டார்கள், சாபமிட மாட்டார்கள். ஆனால் நம் செயல்களினால் மனவருத்தம் அடைவதன் மூலமே சாபம், தோஷம் ஏற்படும். இந்த தோஷத்திற்கு மன்னிப்பே கிடையாது. இந்த தோஷத்தை நிவர்த்தி செ
சென்னை: பித்ரு தோஷத்திற்கு மன்னிப்பு கிடையாது. முன்னோர்களின் பசியாற்றினால் பித்ரு தோஷம் நீங்கும். அமாவாசை நாளில் குறிப்பாக ஆடி, தை, புரட்டாசி அமாவாசை நாட்களில் புனித நீராடி தர்ப்பணம் அளித்தால் தோஷம் தீரும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
மகாளயபட்சத்தின் 15 நாட்களில் கடைசி தினமான அமாவாசை தினத்தன்று நாம் அளிக்கும் தர்ப்பணம் நம் முன்னோர்களுக்கு மட்டுமல்லாது தாவரங்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் சென்று சேரும். இந்த தர்ப்பணம் 'காருண்ய தர்ப்பணம்’ என்று அழைக்கப்படுகிறது.
பித்ருக்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட தர்ப்பணம் செய்யலாம். எள்ளும், தண்ணீருமே பித்ருக்களுக்கு உணவாக கருதப்படுகிறது. அதனால் தான் முன்னோர்களுக்கான பித்ரு பூஜையை வேத விற்பன்னர்களின் உதவியுடன், சாஸ்திர சம்பிரதாயப்படி செய்து பிண்டம் வைத்து எள்ளும், நீரும் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

21 தலைமுறையினருக்கும் தர்ப்பணம்
கோவில்கள், குளங்கள், ஆறுகள், கடல்களில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்யலாம். பித்ரு தர்பணம் கொடுக்கும் போதும் திதி அளிக்கும் போதும் இறந்து போனவர்களின் 21 தலைமுறை முன்னோர்களுக்கும் சேர்த்தே செய்கின்றனர்.
திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருமயம் அடுத்து வரும் ஊர் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது. செதலபதி என்று அழைக்கப்படும் திலதர்ப்பணபுரி தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.
பித்ரு தோஷம் எதனால் வரும்
கருச் சிதைவு செய்து கொண்டால் பித்ரு தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மனவேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்ய வேண்டும். ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யா விடில் பித்ருதோஷம் வரும்.

இந்த பித்ரு தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை சாப்பாடு கூட போடாமல் அலையவிட்டதையும் குறிக்கும். நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்து வைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்து வைத்ததையும், நமது வறிய சகோதரனுக்கு அவசர காலத்தில் உதவி செய்யாமல் பணத்திமிர், அதிகாரத் திமிரில் இருந்ததையும் உணர்த்துகிறது.
பித்ரு தோஷம் நீங்க புனித நீர்நிலைகளில் பிதுர்பூஜை செய்வதே நல்லது. புனித நதிகள், கடற்கரையோரங்கள், கோவில்களில் உள்ள தீர்த்தக் கட்டிடங்கள் ஆகியவை இந்த பூஜைக்கு ஏற்றவையாக கருதப்படுகிறது. எனவே புனிதத்தலங்களில் உள்ள நீர் நிலைகளில் புரட்டாசி அமாவாசையன்று வேத விற்பன்னர்கள் மூலம் தர்ப்பணம் செய்வதால் அப்போது அளிக்கப்படும் எள்ளும், தண்ணீரும், பிண்டமும் மூதாதையர்களை சென்று அடைகின்றன.
மகாளயபட்சம் மகிமை
மகாபாரதப் போரில் கர்ணன் மரணம் அடைந்த பின் வானுலகம் சென்றான். அப்போது அவனுக்கு பொன்னையும், ஆபரணங்களையும் அளித்தார்கள். கர்ணன் உண்பதற்கு உணவைக் கேட்டான். அதற்கு எமதர்மன் 'பூலோகத்தில் இருந்த போது ஏராளமான தானங்களை அளித்த நீ உன் மூதாதையர்களுக்காக அன்னதானமோ, சிரார்த்தமோ செய்யவில்லை. அதற்கு பரிகாரமாக நீ புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களில் பூலோகம் சென்று முன்னோர்களுக்காக அன்னதானமும், சிராத்தமும் செய்து விட்டு வந்தால் இங்கு உனக்கு உணவு கிடைக்கும்’என்றார். கர்ணனும் அதன்படி பூலோகம் வந்து அன்னதானமும், சிரார்த்தமும் செய்தார். அந்த நாட்களே மகாளயபட்ச நாட்கள் எனவும் புராணக் கதை கூறுகிறது.
காருண்ய தர்ப்பணம்
மகாளயபட்சத்தின் 15 நாட்களில் கடைசி தினமான அமாவாசை தினத்தன்று நாம் அளிக்கும் தர்ப்பணம் நம் முன்னோர்களுக்கு மட்டுமல்லாது தாவரங்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் சென்று சேரும். இந்த தர்ப்பணம் 'காருண்ய தர்ப்பணம்’ என்று அழைக்கப்படுகிறது.
மகாளயபட்சத் தர்ப்பணம் செய்வதால், நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும். ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.
பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது நமது கடமை. அதை மகாளயபட்சத்தன்று அளிப்பது மிகவும் சிறப்பு. எனவே நாளை பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முடிந்ததும் மறக்காமல் காகங்களுக்கு உணவும், பசுக்களுக்கு அகத்திக் கீரையும் அவசியம் அளிக்க வேண்டும்.
சாபங்கள் தீர நாம், நம் முன்னோர்களுக்கு முறையாக சிராத்தம் மற்றும் அன்னதானம் செய்ய வேண்டும். நாம் எந்த அளவுக்கு ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்கிறோமோ, அந்த அளவுக்கு பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் மனம் குளிர்ந்து நம் சந்ததியினருக்கு ஆசிர்வாதம் அளிப்பார்கள்.












Click it and Unblock the Notifications