குரு உடன் இணைந்த ராகு.. யோகமா? தோஷமா? கோடீஸ்வர யோகம் யார் ஜாதகத்தில் இருக்கு? செக் பண்ணுங்க
மதுரை: ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டலட்சுமி யோகம் இருந்தால் அவர் செல்வத்திற்கு அதிபதியாக திகழ்வார். லட்சுமி யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவர் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவார். ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்திருந்தால் அது கோடீஸ்வர யோகம் தரும் அமைப்பு என்கின்றனர் ஜோதிடர்கள். அஷ்டலட்சுமி யோக அமைப்பு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
குரு சண்டாள யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் அது குரு சண்டாள யோகமாகும். மேஷ ராசியில் இப்போது குருவும் ராகுவும் இணைந்துள்ளன. இந்த சமயத்தில் பிறக்கும் குழந்தைகள் சிறப்பான யோகத்துடன் பிறக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். குருவும் ராகுவும் அக்டோபர் மாதம் வரை மேஷ ராசியில் இணைந்திருப்பார்கள். அக்டோபர் மாத இறுதியில் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு குரு பகவான் மேஷ ராசியில் தனியாக பயணம் செய்வார்.

கோடீஸ்வர யோகம்: குருவும், கேதுவும் இணைந்து ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் அவர் பாக்கியசாலியாக திகழ்வார். ரிஷப லக்னத்துடன் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ம் வீடான கன்னி ராசியில் குருவும், கேதுவும் இருந்தால் அந்த ஜாதகர் கோடீஸ்வரன் ஆவது உறுதி. அந்த யோகம் உள்ள ஜாதகக்காரர் 45 வயதுக்கு மேல் உயர்பதவியை அடைவார்.
நாடாளும் யோகம்: பிரகஸ்பதி எனப்படும் தேவகுரு வியாழனும், அசுர குரு எனப்படும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் திடீர் பணவரவால் செல்வந்தர் ஆவார். கடக ராசியில் குரு உச்சமடைகிறார். சுப குருவான குரு, சந்திரன் உடன் இணைந்து கடக ராசியில் இருந்தால் நாடாளும் யோகம் அமையும். சந்திரன், புதன் கன்னி ராசியில் இருந்தால் தனதான்ய சம்பத்து கிடைக்கும்.
லட்சுமி யோகம்: ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது லட்சுமி யோகத்தை தரும். ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும். ஜாதகத்தில் கேந்திரம் என்பது லக்னம், நான்கு, ஏழு, பத்து. த்ரிகோணம் என்பது ஐந்து, ஒன்பது. சில நூல்களில் லக்னம் கேந்திரத்தில் இருக்கும், த்ரிகோணத்திலும் இருக்கும். கேந்திரங்களுக்குரிய கிரகங்களும், த்ரிகோணத்திற்குரிய கிரகங்களும் பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை பெற்றால் லட்சுமி யோகம் அமையும்.
தர்மகர்மாதி யோகம்: தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, பத்தாம் அதிபதி இதில் யாராவது ஒருவர் பார்ப்பது சுபமங்கள யோகமாகும். தர்ம கர்மாதிபதிகள் எனப்படும் 9, 10க்குடையாளர்களுடன் லாபாதிபதி எனும் 11ஆம் அதிபதி சம்பந்தப்பட்டால் சுய சம்பாத்தியத்தின் மூலம் பெரும் தனம் சேரும். தர்ம ஸ்தாபனங்கள், அறக்கட்டளைகள் அமைக்கும் பாக்கியம் உண்டு. லக்னத்திற்கு 9, 10க்குரியவர்கள் அல்லது சந்திரனுக்கு 9, 10க்குரியவர்கள் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் பூமி, பொன், பொருள் உண்டு.
செல்வம் குவியும் யோகம்: சந்திரனுக்கு கேந்திரமான 7ஆம் இடத்தில் சம சப்தம பார்வையுடன் சுக்கிரன் இருப்பது சவுந்தர்ய யோகம், வசிய யோகம். பெண்கள் மூலம் பண வரவு கிடைக்கும். 3, 6, 8, 12க்குரியவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்றாலும், 6க்குடையவன் 12ல், 12க்குடையவன் 6ல் இருந்தாலும், 12ஆம் அதிபதி. 12ல் இருந்தாலும் விமல யோகம். கணக்கிட முடியாத செல்வ வளங்கள் வந்து சேரும். பிறந்த ஜாதகத்தில் லக்னம், நான்கு, எட்டில் சூரியனும், புதனும் சேர்ந்து இருப்பது ராஜயோக அமைப்பாகும். கல்வியில் புகழ் அடைவார்கள், கணக்கு துறையில் சாதனை படைப்பார்கள். லக்னத்திற்கு 10ஆம் இடத்தில் சந்திரன், சனி சேர்ந்து இருந்தால் ஜாதகர் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருப்பார்.
வெள்ளி குத்துவிளக்கில் விளக்கேற்றலாம்: பிருகு மகரிஷிக்கு மகனாய் அவதரித்தவர்தான் சுக்கிரன். மகாலட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் உள்ளது போல சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயருண்டு. ஒரே தாய் தந்தையருக்கு இவர்கள் இருவரும் அவதரித்ததால் சகோதரன் சகோதரி முறை வருகிறது. சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்ற வீட்டில் அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications