மேஷம் நெற்றி... மீனம் கண்கள்... 12 ராசிக்காரர்களும் அத்தி வரதரை தரிசனம் செய்யும் முறை
12 ராசிக்காரர்களும் அத்தி வரதரை தரிசிக்க வேண்டிய முறைகளை ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
காஞ்சிபுரம்: அத்தி வரதர் திருவிழா காஞ்சிபுரத்தில் களைகட்டியுள்ளது. 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கும் அத்தி வரதர் இப்போது திருக்குளத்தை விட்டு வெளியே வந்திருக்கிறார். அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அத்திவரதரை எப்படி வழிபடவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம்தான் அத்தி வரதர். ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி தந்தார். அதே நாளில் பிரம்ம தேவர், தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது.
வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்பார்கள். இரண்டாவது முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பதும் ஐதீகம். அத்தி வரத பெருமாளை பாதம் முதல் தலை வரை பார்த்து வணங்க வேண்டும். ஒவ்வொரு ராசியினரும் பெருமாளை முழுவதுமாக பார்ப்பதோடு, அவர்களின் ராசிக்கேற்ப எந்த பகுதியை பார்த்து வணங்க வேண்டும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பெருமாளின் கிரீடம் பெருமாளின் நெற்றியைப் பார்த்து வழிபடுவதன் மூலம் அறிவாற்றலும் ஆன்மீக சக்தியையும் அளிக்கும் மிகப்பெரிய தீட்சிதை கிடைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. நம்பர் 1 ஆக இருக்க ஆசைப்படுபவர்கள் பெருமாளின் நெற்றியைப் பார்த்து வணங்குகள் வேண்டிய வரம் தருவார் அத்தி வரதர்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பெருமாளின் முகத்தில் இருந்து கன்னங்களை பார்த்து கழுத்துவரை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஆண்கள் வலது கன்னம், பெண்கள் இடது கன்னம் பார்த்து பிரார்த்தனை வைப்பதோடு, முழு பெருமாளையும் பார்த்து வணங்குவது நல்லது. இதன் மூலம் செல்வம் பெருகுவதோடு வசீகரத்தன்மையும் அதிகரிக்கும். பெருமாளின் பாத தரிசனம் உங்கள் பாபங்களைப் போக்கும்.
மிதுனம்
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் பெருமாளுடைய காது பகுதியில் இருந்து இடது தோள் அல்லது வலது தோள் பார்த்து பிரார்த்திக்க வேண்டும்.
ஆண்கள் வலது தோள், பெண்கள் இடது தோள் பார்த்து பிரார்த்தனை வைத்து பெருமாளை முழுவதுமாக கண்டு தரிசிக்க வேண்டும். தைரியம், குடும்ப ஒற்றுமை கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.
கடகம்
பெருமாளின் மார்பில் லட்சுமி தேவி வாசம் செய்கிறார். அத்தி வரத பெருமாளின் கை மேல் நோக்கி காட்டும் கையின் உள்ளங்கையை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும். நினைத்தது நடக்கும் அதிக அளவில் பணம் விரையமாகாது. சேமிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பெருமாளின் தாடையை பார்த்தும் தொப்புள் வரை உள்ள பகுதிகளைப் பார்த்து பிரார்த்திக்க வேண்டும். சமுதாயத்தில் பிரபலாமாக வாழ வேண்டும் என நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தாடையை பார்த்து பிரார்த்தனை வைக்க வேண்டும். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தொப்புள் பகுதியைப் பார்த்து வணங்கினால் நினைத்தது நடக்கும்.
கன்னி
புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் அழகானவர்கள் இளைமையானவர்கள். வசீகரமான தோற்றம் உள்ள கன்னி ராசிக்காரர்கள், அத்தி வரத பெருமாளின் இடுப்பு, வயிற்றுப் பகுதியைப் பார்த்து பிரார்த்தனை வைப்பது நல்லது. திருமண தடைகள் நீங்கும். பெண்கள் பெருமாளின் இடுப்பு பகுதியை பார்த்து வணங்க தொழில் வளம் பெருகும் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
துலாம்
துலாம் ராசியினர் பெருமாளின் இடுப்பு பகுதி முதல் தொடை வரை பார்த்து வணங்க வேண்டும். பெருமாளின் அடிவயிறை பார்த்து வணங்க நன்மைகள் நடைபெறும். ஆண்கள் முழங்கால் பார்த்து பிரார்த்தனை செய்வது நல்லது. வேலை வேண்டுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் சிக்கியிருக்கிறீர்கள். சனி பகவானின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்கக் கூடியவர் இந்த அத்தி வரதர். பெருமாளின் பாதத்தைப் பார்த்து நீங்கள் வணங்குவது நல்லது. பாதத்தைப்பார்த்து வழிபட்டால் பாத சனியின் பிரச்சினைகள் தீரும். ஏழரை சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். நோய்கள் நீங்கி சுபிட்சம் பெருகும். விபத்தில் இருந்து தப்பிக்கலாம் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியினர் பெருமாளின் இரண்டு தொடைகளைப் பார்த்து வணங்குவது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். தொழில் மேன்மையடையும். வேண்டுதல்கள் நிறைவேறும். ஆணோ பெண்ணே அத்தி வரதரை வணங்கச் செல்லும் போது இரண்டு தொடைகளையும் பார்த்து பிராத்தனை செய்யுங்கள்.
மகரம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. நீங்கள் பெருமாளின் நெற்றி மற்றும் முழங்கால் பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும். இதனால் கடன்கள் அடைபடும். நோய்கள் நீங்கும். வேலையில்லாமல் இருப்பவர்கள் பெருமாளின் முழங்கால் பகுதியைப் பார்த்து வணங்க நிச்சயம் வேலை கிடைக்கும் அத்தி வரதர் வரப்பிரசாதி. வேண்டியதை உடனே நிறைவேற்றுவார்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால் பெருமாளின் முழு உருவத்தைப் பார்த்து வழிபாடு செய்வதுடன், வேண்டுதல் வைக்கும் போது பெருமாளின் பெருமாளின் கணுக்கால் பகுதியைப் பார்த்தும் உதட்டுப்பகுதியைப் பார்த்தும் வேண்டுதல் வைத்தால் வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட முடியும். நினைவாற்றல் அதிகரிக்கும். பாவங்கள் நீங்கும்.
மீனம்
மீன ராசியினர் பெருமாளின் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்தால், அருமையான, பெருமையான வாழ்க்கை வாழ முடியும். பாதத்தை பார்த்து வணங்கினால் வண்டி வாகனங்கள் வீடு வாங்கும் யோகம் நிறைவேறும். 12 ராசிக்காரர்களும் அத்தி வரதரை இப்படி வணங்கினால் நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.