திருமலை கோவிலில் பிரம்மோற்சவம் - 17ஆம் தேதி மலையப்பசாமி கருடசேவை தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்றுமாலை கருட கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. வரும் 17ஆம் தேதி கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பதி: ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவையில் மலையப்ப சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் 5 லட்சம் பேர் திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க செப்டம்பர் 13ஆம் தேதி மாலை மகர லக்னத்தில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.
மாலை 6.30 மணிக்கு ஆந்திர மாநில அரசு சார்பில், மூலவர் வெங்கடாஜலபதிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில், முதல்வர் சந்திரபாபுநாயுடு குடும்பத்தினருடன் பங்கேற்றார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு
பட்டு வஸ்திரம், மங்களப் பொருட்களை ஒரு வெள்ளித்தட்டில் வைத்து, திருமலையில் உள்ள பேடிஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஏழுமலையான் கோவில் வரை மேள தாளம் முழங்க சந்திரபாபுநாயுடு தனது தலையில் வைத்து சுமந்தபடி ஊர்வலமாக வந்து மூலவர் வெங்கடாஜலபதியின் பாதத்தில் வைத்து, பட்டு வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களை சமர்ப்பணம் செய்து வழிபட்டார்.
மலையப்பசாமி
முதல் வாகன புறப்பாடாக பெரிய சேஷம் எனும் 7 தலைகளுடன் கூடிய தங்க நாக வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார். பாற்கடலில் மகாவிஷ்ணுவை எப்போதும் தன் உடலால் தாங்குபவர் ஆதிசேஷன். ஆதிசேஷனின் வடிவமாக கருதப்படுவது 7 தலைகள் கொண்ட பெரிய சேஷ வாகனம். இதனால், ஆதிசேஷனுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் முதல் வாகனமாக பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி அருள்பாலித்தார்.
பக்தர்கள் தரிசனம்
பிரம்மோற்வ விழாவின் 2ம் நாளான்று காலை சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி உலா வந்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்டு வணங்கினர். இதைத்தொடர்ந்து, இரவு தங்க அம்ச வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பவனி வருகிறார்.
5 லட்சம் பக்தர்கள்
3ஆம் நாளன்று காலை சிம்ம வாகன த்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 16ஆம் தேதி காலை கல்ப விருட்ச வாகனத்திலும், அன்றிரவு சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை, 17ஆம் தேதி இரவு நடக்கிறது. கருட சேவையை தரிசிக்க சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரம்மோற்சவ தோரோட்டம்
18ஆம்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை தங்கத்தேரோட்டம், 20ஆம்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம், 21ஆம்தேதி அதிகாலை 5 மணியில் இருந்து 7.30 மணிவரை பல்லக்கு உற்சவம், தங்கத் திருச்சி வாகன வீதிஉலா, காலை 7.30 மணியில் இருந்து 10 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. அக்டோபர் 10ஆம் தேதியன்று இரண்டாவது பிரம்மோற்சவம் தொடங்குகிறது.