மதுரை சித்திரை திருவிழா: ஏப். 24ல் மீனாட்சி திருக்கல்யாணம் - 27ல் கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 15ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 24ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் 27ஆம் தேதியன்று கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபைவம் நடைபெறும்.
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 15ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 24ஆம் தேதியன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 25ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.
சித்திரை மாதம் வந்தாலே மதுரையில் திருவிழா களை கட்ட ஆரம்பித்து விடும். பங்குனி மாதமே பந்தக்கால் முகூர்த்தம் நட ஆரம்பித்து பக்தர்கள் விரதத்தை ஆரம்பித்து விடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் மட்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. அழகர்மலை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. கள்ளழகர் மதுரைக்கு வராமல் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தொட்டியில் எழுந்தருளினார்.

சித்திரை திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினத்தில் இருந்து திருவிழா நடைபெறும் 12 நாட்களும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, மீனாட்சி அம்மனுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

சித்திரை தேரோட்டம்
ஏப்ரல் 22ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், 23ஆம் தேதி திக்விஜயம், சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 24ஆம் தேதியும், 25ஆம் தேதி பெரிய தேர் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

வைகையில் இறங்கும் கள்ளழகர்
கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை 26ஆம் தேதியும், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் 27ஆம் தேதியும் நடைபெறும். சித்திரை தமிழ் வருடப்பிறப்பு தொடங்கியதில் இருந்து மதுரையில் சித்திரை திருவிழா கொண்டாட்டம் தொடங்க உள்ளது.

மதுரைக்கு வருவாரா கள்ளழகர்
இந்த ஆண்டு சித்திரை திருவிழா வழக்கம் போல நடைபெற வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அப்போது உள்ள கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருவிழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அழகர் மலையில் இருந்து இந்த ஆண்டு கள்ளழகர் மதுரைக்கு வருவாரா? அவருக்காக வைகையில் தவம் இருக்கும் மண்டூக முனிவரின் சாபத்திற்கு விமோசனம் தருவாரா என்பது அரசின் உத்தரவில்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications