புரட்டாசி பிரம்மோற்சவம் கோலாகலம் - தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கருடக்கொடியேற்றம்
மதுரை: பிரசித்தி பெற்ற தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கோலகலமாக தொடங்கியுள்ளது. கோவில் பிரகாரம் முன்புள்ள கொடிமரத்தில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன், கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
மதுரையில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றாலும் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்கோவில் கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா முக்கியமானது. இந்த ஆண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உபகோவிலானது மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலாகும். அழகர் மலையில் இருந்து இறங்கி வந்து மதுரை வைகையில் இறங்க வரும் கள்ளழகர் தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் ஓய்வெடுப்பார்.

பிரசன்ன வெங்கடாசலபதி
மதுரையின் பிரதானப் பகுதியான தல்லாகுளத்தில் இருக்கும் ஆலயம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில்.
17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட ஆலயம் இது. இந்த ஆலயம் உருவான வரலாறு பலவாறு சொல்லப்படுகிறது. கலை நயம் மிக்க இந்தத் திருக்கோயிலில் அருளும் மூலவர் திருநாமம், "பிரசன்ன வெங்கடாசலபதி" என்பதாகும். உள்ளே கருவறையில் வேங்கடாசலபதி நின்றகோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி அருள்கிறார். நேராக நின்று தரிசனம் செய்தால் பெருமாள் மட்டுமே காட்சிகொடுப்பார். அருகில் சென்றால் ஸ்ரீதேவி பூதேவித் தாயாரையும் தரிசனம் செய்து மகிழலாம்.

ஆஞ்சநேயர் சிறப்பு
இங்கு கருவறையின் அருகிலேயே சுயம்பு ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் உக்கிர ஆஞ்சநேயர் என்கிறார்கள். ஒரே கல்லில் உருவான மூர்த்தி இவர். வாலில் மணியும் கையில் தாமரை மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தில் அபய முத்திரையும் காட்டி அருள்கிறார் ஆஞ்சநேயர். இந்த அனுமன் உக்கிர மூர்த்தியாக அருள்வதால் இவரின் உக்கிரத்தைத் தணிக்கும் வண்ணம் எதிரே சங்கு சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

புரட்டாசி பிரம்மோற்சவம்
கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இக்கோவிலில் திருவிழா ஏதும் வெளியில் நடைபெறாமல் உள் புறப்பாடாக விழா நடந்தது. இந்தநிலையில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் முக்கியமான புரட்டாசி பெருந்திருவிழா நேற்று தொடங்கியது. இதில் கோவில் பிரகாரம் முன்புள்ள கொடிமரத்தில் காலை 10.50 மணிக்கு மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன், கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் உற்சவர் பெருமாள், தேவியர்களுடன், முன் மண்டபத்தில் எழுந்தருளினர்.

சுவாமி புறப்பாடு
அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டதை அனைவரும் கண்டு தரிசனம் செய்தனர். நேற்றிரவு அன்ன வாகனத்தில் சுவாமி வலம் வந்தார். இன்றைய தினம் கிருஷ்ண அவதாரத்திலும் நாளை ராமர் அவதாரத்திலும் சுவாமி வலம் வருகிறார். தொடர்ந்து கஜேந்திர மோட்சமும் அன்று இரவு கருடவாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

அலங்கரிக்கப்பட்ட வாகனம்
மறுநாள் ராஜாங்கசேவையும், இரவு சேஷவாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும். 3ஆம் தேதி காலையில் காளிங்கநர்த்தனமும், அன்று இரவு மோகினி அவதாரமும், தொடர்ந்து யானை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 4ஆம் தேதி காலை சேஷசயனமும், இரவு புஷ்பசப்பரமும், 5ஆம் தேதி வெண்ணைதாழியும், இரவு குதிரை வாகன புறப்பாடும், 6ஆம் தேதி திருத்தேரோட்டமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 7ஆம் தேதி பூச்சப்பரமும் நடைபெறுகிறது. 8ஆம் தேதி காலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறும். 9ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications