மகா சிவராத்திரி: ராமேஸ்வரம் ஆலயத்தில் கோலாகல கொடியேற்றம் - விரதமிருந்தால் என்னென்ன நன்மைகள்
ராமேஸ்வரம் திருக்கோயிலில் மகாசிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியுள்ளது.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோயிலில் மகாசிவராத்திரி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மகா சிவராத்திரி விழா சதுர்த்தசி திதி மார்ச் 1ஆம் செவ்வாய்கிழமை அதிகாலை 3.16 மணிக்கு தொடங்கி மார்ச் 2 புதன்கிழமை காலை 10 மணிக்கு முடிவடைகிறது.
சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். பல சதுர்யுகங்கள் முடிந்து, பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள். தொடர்ந்து 12 சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்று சிவனடியார்கள் கூறியுள்ளனர்.
மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும்.
மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம் என்கிறது இந்துமதம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி பூஜை நான்கு கட்டங்களாக அனுசரிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மாத மகாசிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மஹாசிவராத்திரி நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று காலை சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மேஷலக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்காண பக்தர்கள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படைவசதிகளை துரிதப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ரூ139.35 கோடி ஊழல்: 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் மாதம் 1ஆம்தேதி இரவு இரவு வெள்ளிரதத்தில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் தேரோட்டமும் நடைபெறும். அதே போல் வரும் 02ந் தேதி அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்தக் கடலில் ஸ்ரீராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று அக்கினிதீர்த்தக் கடலில் முதாதையர்களுக்கு தர்பணம் கொடுத்து அக்கினி தீர்த்தக் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.