மகாளய பட்சம் 2019: மகாபரணி தர்ப்பணம் கொடுத்தால் என்ன பலன் தெரியுமா
சென்னை: மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம். பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளய பட்சம் என்று கூறுகிறோம். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை. மஹாபரணி நாளான இன்று தர்ப்பணம் செய்தால் வம்சம் செழிக்கும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி மகிழ்ச்சியாக நடைபெறும்.
மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி எமதர்மராஜன் அனுமதிப்பாராம்.
நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் அவர்களின் சந்ததிகள் வசிக்கும் வீடுதானே. எனவேதான் அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் நம் இல்லத்திற்கு நம்மை காண வருகிறார்கள் என்பது நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை வறுமை நீங்கி விருத்தியடையும்.

பித்ருக்களின் ஆசி
நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று கவலைப்பட்டாலும் அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். எத்தகைய தடைகளையும் தாண்டி வெற்றியடையலாம்.

மகாபரணி தர்ப்பணம்
தந்தை அல்லது தாய் இறந்த திதி அறியாதவர்கள்கூட, இந்த நாளில் அவர்களுக்கான நீர்க் கடன்களைச் செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உரிய புண்ணிய பலன்கள், அந்த ஆத்மாவை அடையும் என்பது நம்பிக்கை. மேலும், 15 நாள்களும் கர்மாவினைச் செய்ய முடியாதவர்கள், மகாபரணி தினமான இன்று தர்ப்பணம் செய்வது அவசியம். கூடவே தானம் செய்வதும் அவசியம்.

முன்னோர்கள் மகிழ்ச்சி
பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும். மஹாபரணி, மஹாவியதீபாதம், மத்யாஷ்டமி, அவிதவா நவமி ஆகிய நட்களில் ஒருமுறையும் மகாளய அமாவாசை அன்று ஒரு முறையாக இரு நாட்களில் முன்னோர்களுக்கான தில தர்ப்பணம், படையல் வைத்தல், தானதர்மங்கள் செய்யலாம். இதனால் நம்முன்னோர்கள் மகிழ்வதோடு நம் தலைமுறையும் வாழ்வாங்கு வாழும் வகையில் ஆசி வழங்குகின்றனர்.

நினைத்தது நிறைவேறும்
ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன. முதல்நாள் - பிரதமை - பணம் சேரும் இரண்டாம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும். மூன்றாம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறும். நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல் ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல் ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல் ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

ஆசைகள் நிறைவேறும்
எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல் ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும். பத்தாம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும். பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில் பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை. பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல். ரிஷிகளின் ஆசிகளும் கிடைக்கும்.

மகாபரணி தர்ப்பணம்
இன்றைய தினம் சந்திரன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். புரட்டாசி 1ஆம் தேதி மகா பரணி இன்றைய தினம் நாம் கொடுக்கும் திதி மற்றும் தர்ப்பணம் மேலே சொல்லபட்ட அத்தனை திதிகளுக்கான பலன்களை அளிக்ககூடியது இந்த நாள் இறைவன் நமக்களித்த மாபெரும் பாவமன்னிப்பு நாள்.

நீத்தார் கடன் முக்கியத்துவம்
வாழ்கையில் நாம் மனிதபிறவியில் செய்த பாவங்கள் பல அவற்றில் பெரிய பாவம் என்னவென்றால் அது நாம் நம் முன்னோர்களுக்கு செய்யத் தவறிய கடமைகள், அப்படிப்பட்டக் கடமைகளை செய்யத்தவறியதன் காரணமாக மீண்டும் பிறவியெடுத்து இந்த பிறவியில் நம் தாய் தந்தையருக்கும் நம் தாத்தா பாட்டிகளுக்கு செய்யும் கடமைகளை சிறப்பாக செய்து முன்னோர்களுக்கு தவறாது சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்வதனால் நாம் நமது பிதுர் தோஷம் என்னும் நீத்தார் கடன் தீர்த்தல் ஆகும். மகாளய பட்சம் என்னும் காலத்தில் நம்மை காண வரும் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறுவோம்.

காசி - ராமேஸ்வரம்
காசி முக்தி தரும் ஸ்தலம் என்று போற்றப்படும் காசி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு மிக முக்கியமான இடங்களுள் ஒன்று. ராமேஸ்வரம் புனிதமான தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்வதன் மூலம் மூதாதையர்களின் ஆன்மாக்களுக்கான பாதையில் இருக்கும் தடைகள் நீங்கி அவர்கள் முக்தி பெற உதவுகின்றது. திலதர்ப்பணபுரி ராமன் தனது தந்தையாகிய தசரதருக்கு இங்கு தர்ப்பணம் செய்தார். எனவே இந்த இடம் முக்தி ஷேத்திரம் என்று கூறப்படுகின்றது. இங்கெல்லாம் செல்ல முடியாதவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள புனித நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்கலாம்.












Click it and Unblock the Notifications