மகாசிவராத்திரி..சதுரகிரி மலையில் இரவில் தங்க அனுமதி கிடைக்குமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மகாசிவராத்திரி நாளில் இரவில் தங்கி பூஜை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்: சனிப்பிரதோஷம், மகா சிவராத்திரி, மாசி அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் சதுரகிரியில் சாமி கும்பிட பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மகா சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு இரவு வழிபாடு நடத்துவது விசேஷமாக கருதப்படுகிறது. சனிக்கிழமையன்று மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்தி இரவிலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.
ஆடி, தை அமாவாசை மகாளய அமாவாசை நாட்களில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தருவார்கள். சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படும் மகா சிவராத்திரி அன்றும் திரளான பக்தர்கள் வருகை தருவதுண்டு. அதன்படி இந்த ஆண்டு வருகிற 18ஆம் தேதி சனிக்கிழமை சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி பவுர்ணமி..சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி
இதையொட்டி சதுரகிரி மலைக்கு செல்ல வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டோர் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னேற்பாடு வசதிகளை செய்து வருகிறது. மேலும் மழைக்குச் செல்லும் பாதைகள், கோவில், மலை அடிவாரத்தில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மகா சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு இரவு வழிபாடு நடத்துவது விசேஷமாக கருதப்படுகிறது. எனவே வருகிற 18ஆம் தேதி பக்தர்கள் சதுரகிரிக்கு மலை ஏற இரவிலும் அனுமதிக்க வேண்டும். சிவராத்திரி என்பதால் கட்டுப்பாடின்றி பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முறை மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்தி இரவிலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.