மன்மத ஆண்டு: சிம்மம் ராசிக்காரர்களே சனி பகவானுக்கு பாலபிஷேகம் செய்யுங்க
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் சிம்மம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பொதுவான பலன்களை பார்ப்போம்.
காட்டுக்கு அரசன் சிம்மம் போல் ராசியில் மேலான நிலையை கொண்டிருக்கும் சிம்மம் ராசி அன்பர்களே தனக்கென்று தனிப்பாதை, பிறர் தன்னைத் தான் வணங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே. தான் என்ற மமதை அகம்பாவம் பிறரை அடக்கி ஆளும் அதிகாரப் போக்கு அலட்சிய சுபாவம், அனைத்தும் தெரிந்தவர் போல் காட்டி கொள்பவர்களே தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல் வரட்டு பிடிவாதம் கொண்டவர்களே தன்னை பிறர் போற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே பிறர் முகஸ்துதிக்கு ஆளாகி அவர்கள் பேச்சால் ஏமாற்றம் அடைபவர்களே. உண்மையை நம்பாது தான் என்ற அகம்பாவத்தால் நஷ்டத்தை தேடிக் கொள்பவர்களே ஆற்றல் மிக்கவராக இருந்தும் ஆத்திரத்தால் நிதானத்தை இழக்கும் சிம்மம் ராசி அன்பர்களே.

சனி பகவான் பார்வை
வாழ்க்கையில் எப்பொழுதும் தைரியம் இழக்கமாட்டீர்கள். திட்டமிட்டுச் செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள், செயல்திறம் மிக்கவரான நீங்கள் தனித்துவம் நிறைந்து விளங்குவீர்கள், உங்களுக்கு தற்போது சனி பகவான் நான்காம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் வாக்குவாதம் அடிக்கடி உருவாகலாம். அவரது மூன்றாம் இடத்துப் பார்வை மிகச் சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிக சதகமான நிலை இதனால் வாழ்வில் வெற்றி கிடைக்கும் வருமானம் சீராகும், எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
குருவினால் அலைச்சல்
குரு இப்போது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார். அது சுமாரான நிலையே. இனி அவரால் நன்மை தர இயலாது. பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். அலைச்சலும் பொருள் விரயமும் ஏற்படும். மனதில் இனம்புரியாத உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். குரு ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சிற்சில பிரச்சனைகள் வரலாம்.
ராகு - கேதுவால் பிரச்சினை
நிழல் கிரகமான ராகு தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இங்கு அவரால் நன்மை தர இயலாது. அவர் பண விரயத்தை ஏற்படுத்தலாம். மறைமுக எதிரிகளால் பிரச்சனையை உருவாக்கலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது மீனத்தில் நின்று சில உடல் உபாதைகளை தரலாம். மருத்துவச் செலவும் செய்ய நேரிடலாம். உணவு விஷயத்திலும் எச்சரிக்கை தேவை.
சாதகமான நிலை
பொதுவாக அலைச்சல் அதிகரிக்கும், சிலரது பயணத்தால் செலவு ஏற்படும் அளவு பயன் எதிர் பார்க்க இயலாது. உங்களின் எண்ணங்கள் கடும் முயற்சியின் பேரிலேயே நிறைவேறும், மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும் மே மாதத்திற்கு பிறகு சாதகமான நிலை உருவாகும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். திட்டமிட்டப்படி புதிய வாகனம் வாங்குவீர்கள், ஆனால் அதற்காக பணம் புரட்டுவதில் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
என்ன பரிகாரம்
ஸ்ரீ சுதர்ஸன ஹோமம் செய்து கொள்வது நலம், சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு பால் அபிஷேகம் செய்து கருப்பு வஸ்திரம் சாற்றி, எள் தீபம் ஏற்றி எள்ளோதரை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய இவ்வாண்டு அனைத்து இன்னல்களும் நீங்கி நன்மை உண்டாகும்.












Click it and Unblock the Notifications