சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி விழா - பஞ்சமூர்த்திகள் தரிசனம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மார்கழி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்தி தரிசனம் மற்றும் கருட தரிசனத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்தி தரிசனத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். வரும் 22ஆம் தேதி தேரோட்டமும் 23ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மார்கழித்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 23ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
3வது திருவிழாவான நேற்று முன்தினம் இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 4ம் திருவிழா நாளன்று காலை 8 மணிக்கு சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

கருட தரிசன நிகழ்ச்சி
5ம் விழா நாளன்று நேற்று அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்டம் விநாயகர் கோயில் முன் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து விநாயகர் கோயில் முன் கிழக்கு நோக்கி நிற்கும்போது சுவாமிகளை கருடன் வலம் வரும் கருட தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலி, 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

நடராஜர் சிவகாமி அம்மன்
20ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி உலா வருதல், இரவு 10.30 மணிக்கு கைலாசபர்வத வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் நடக்கிறது. 21ஆம்தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதல், பேரம்பலம் கோவில் முன் நடராஜர் பெருமாள் ஆனந்த திருநடன காட்சியும், காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் நடராஜர் பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து அஷ்டாபிஷேகமும், சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும் நடக்கிறது.

தேரோட்டம்
22ஆம்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிச்சாடனராக வீதி உலா வருதல், காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடக்கிறது.

நடராஜர் வீதி உலா
23ஆம்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், மாலை 5 மணிக்கு நடராஜர் மூர்த்தி வீதி உலாவும் இரவு 9 மணிக்கு ஆராட்டு விழா ஆகியவை நடக்கிறது. தானுமலையான் கோவிலின் மிக முக்கிய விழாவான 10 நாள் மார்கழி திருவிழா ஆருத்ரா தரிசன நாளில் நடராஜ மூர்த்தி திருவீதி உலா உடன் நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications