மாசி மகம்: கும்பகோணத்தில் 8ல் கொடியேற்றம் - 15ல் தேரோட்டம், 17ல் தீர்த்தவாரி
மாசிமக திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் வைணவ கோவில்களில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் விழா நடைபெறும்.
கும்பகோணம்: பிரசித்தி பெற்ற மாசி மகம் திருவிழா கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்களில் வருகிற 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15ஆம் தேதி தேரோட்டமும், 17ஆம் தேதி மகாமக குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
மாசி பவுர்ணமிக்கு தனி சிறப்பு உண்டு. மகம் நட்சத்தில் சந்திரன் சஞ்சரிக்க கும்பம் ராசியில் சூரியன் சஞ்சரிக்க கோலகலமாக மாசி மகம் திருவிழா நடைபெறும்.
கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப் டாப் எப்போது கிடைக்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
மாசி மகம் கொடியேற்றம்
மாசி மகம் விழா கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்படுகிறது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் வைணவ கோவில்களில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் விழா நடைபெறும். இந்த ஆண்டு மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், காளகஸ்தீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர்கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் வருகிற 8ஆம் தேதி மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆதி கும்பேஸ்வரர்
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 11ஆம் தேதி அறுபத்து மூவர் வீதி உலாவும், 12ஆம் தேதி ஓலைச்சப்பரமும், 15ஆம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. 17ஆம் தேதி மகாமக குளத்தில் காலை 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதேபோல் அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர் கோவில்களின் சார்பில் வருகிற 16ஆம் தேதி மாலை மகாமக குளக்கரையில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
மகாமகம் தெப்பக்குளத்தில் புனித நீராடல்
மாசி மகம் திருநாளன்று கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனங்களில் புறப்பட்டு, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளுவார்கள். கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெறும். அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சாமி தரிசனம் செய்வார்கள்.
வைணவ ஆலயங்களில் கொடியேற்றம்
இதேபோல் கும்பகோணம் பகுதியில் உள்ள வைணவ கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமிகோவில், ஆதிவராக பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வருகிற 9ஆம் தேதி பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12ஆம் தேதி கருட வாகனத்தில் ஓலைச்சப்பரமும் நடைபெறும்.
காவிரி படித்துறையில் தீர்த்தவாரி
17ஆம் தேதி காலை 7 மணிக்கு சக்கரபாணி கோவில் தேரோட்டமும் நடக்கிறது. தொடர்ந்து 12 மணியளவில் காவிரி ஆற்றங்கரை சக்கர படித்துறையில் வைணவ கோவில்கள் சார்பில் தீர்த்தவாரி நடக்கிறது. மாசிமகத்தையொட்டி சாரங்கபாணி கோவிலில் வரும் 17ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.