கறுப்பு பணம்.... கனமழை... பஞ்சாங்கம் பரபரப்பு கணிப்பு
சென்னை: கடந்த ஆண்டு ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்தபடி சென்னையை பெரும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், இந்த ஆண்டும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ளபாதிப்பு ஏற்படும் என, ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்க வெளியீட்டாளர் கே.என்.நாராயண மூர்த்தி எச்சரித்துள்ளார்.
பஞ்சாங்கத்தின் கணிப்பு பலமுறை பலித்துள்ளது. இந்த பஞ்சாங்கத்தின் 2015ம் ஆண்டு பதிப்பில், வரலாறு காணாத வெள்ளம் சென்னையை தாக்கும் என்ற தகவலும், இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்ற தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த நவம்பர் 8ம் தேதியன்று பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இதன் பின்னர் நாடு முழுவதும் ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டுகளாக மாறிவிட்டன. மக்கள் தங்களிடம் இருந்த செல்லாத நோட்டுகளை வங்கியில் வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர். இதை முன்கூட்டியே பஞ்சாங்கத்தில் கணித்து வெளியிட்டுள்ளனர்.
ஆற்காடு பஞ்சாங்கத்தின் பக்கங்கள் வாட்ஸ் அப் மூலம் வேகமாக பரவியது. அதில், வங்கிகளில் பல மாற்றம் ஏற்படும். கணக்கில் இல்லாத கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க நேரும். தணிக்கைத் துறையின் மூலம் அரசாங்கத்துக்கு கோடிக்கணக்கான பணம் சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள துர்முகி வருட பஞ்சாங்கத்தில் கார்த்திகை மாதத்தில் 'அரசுக்கு வருவாய் பெருகும்' என்று குறிப்பிட்டுள்ளது. நல்ல மழை விளைச்சல் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அரசு வருமானம் அதிகரிப்பு பலித்து விட்டது... அதே போல இந்த ஆண்டு வெள்ளம் வரும் என்ற பஞ்சாங்கத்தின் கணிப்பு பலிக்குமா? பார்க்கலாம்.