பொங்கல் வைக்க நல்ல நேரம் : காப்பு கட்டுவது தொடங்கி..பொங்கல் பொங்குவது வரை இந்த நேரத்தில் செய்யலாம்
போகி தொடங்கி காணும் பொங்கல் வரை பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.காப்பு கட்டவும், பொங்கல் வைக்கவும் நல்ல நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தை முதல் நாளில் புதுப்பானையை இஞ்சி, மஞ்சள் கொத்து வைத்து கட்டி அலங்கரித்து புத்தரிசியில் பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கு நன்றி கூறும் நாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீடுகளில் காப்பு கட்டவும் பொங்கல் வைக்கவும் பஞ்சாங்கத்தில் நல்ல நேரம் குறிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் இன்றைய தினம் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து காப்புக்கட்டுவார்கள். மாலை 6 மணிக்கு மேல் காப்பு கட்டுவதற்கு ஏற்ற நேரம். சிலர் பொங்கல் நாளில் காலையில் காப்பு கட்டுவார்கள்.
3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகவும் நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கும்,இந்திரன், சூரியன், உபேந்திரனுக்கு படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள். கிராமங்களில் இன்றைக்கும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
எந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்
நாளைய தினம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 6.00 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். பிற்பகல் 02.30 மணி முதல் 3 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 05.00 - 06.00 வரையும் பொங்கல் வைக்க நல்ல நேரம் உள்ளது.
பொங்கலோ பொங்கல்
தை திருநாளில் வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள்.
பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்புவார்கள்.
மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல் நாளில் காலை 8 மணி முதல் 09 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 05 மணி முதல் 6 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். ஜனவரி15ஆம் தேதி சனிக்கிழமை கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்தையும் அலங்கரித்து பொங்கல் வைக்கலாம். மாடு வளர்க்காதவர்கள், கால்நடைகள் இல்லாதவர்கள் பசுவுடன் கூடிய கிருஷ்ணர் பொம்மையை வைத்து பொங்கல் வைத்து வழிபடலாம்.
கணு வைக்க நல்ல நேரம்
தை 3ஆம் நாளில் நம்முடைய வீட்டில் சமைத்த சாதத்தை நமது உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக, காக்கா குருவிக்கு உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் அளிக்க வேண்டும். ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ ,மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்கவேண்டும். காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும் என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும். காணும் பொங்கல் ஞாயிற்றுகிழமை ஜனவரி 16ஆம் தேதி காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரைக்கும், காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரைக்கும் பொங்கல் வைக்க நல்ல நேரம். பொங்கல் பொங்குவது போல அனைவரின் வாழ்க்கையும் செழிக்க வாழ்த்துக்கள்.