திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்பசுவாமிக்கு புஷ்ப யாகம்.. நவம்பர் மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்
திருப்பதி: மலையப்பசுவாமியை தங்கம் வைரங்களால் அலங்காரம் செய்து பார்த்திருப்போம். அதே ஏழுமலையானை பலகோடி பூக்களால் அலங்கரித்து பார்ப்பதை காண கண் கோடி வேண்டும். திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை தொடர்ந்து, புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதியன்று புஷ்பயாகம் நடைபெறவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் பல்வேறு சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில், நவம்பர் 9ஆம் தேதி மாதாந்திர ஏகாதசி, 11ஆம் தேதி சிவராத்திரி, 12ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம், 13ஆம் தேதி கேதார கௌரி விரதம் நடைபெற உள்ளது. 14ஆம் தேதி திருமலை நம்பி சாற்றுமுறை, 16-ஆம் தேதி மணவாள மாமுனி சாற்றுமுறை, 17ஆம் தேதி நாகர் சதுர்த்தி, பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா நடைபெற உள்ளது.

நவம்பர் 18ஆம் தேதி வருடாந்திர புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம், 19ஆம் தேதி ஏழுமலையான் கோவில் புஷ்பயாகம், 26ஆம் தேதி கார்த்திகை மாத பௌர்ணமி, 27ஆம் தேதி திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை, 28ஆம் தேதி திருப்பாணாழ்வார் வருட திருநட்சத்திரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது என தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
திருமலை வெங்கடாச்சலபதிக்கு ஆண்டு தோறும் புஷ்பயாகம் நடைபெறுவது தொன்றுதொட்டு நடைபெற்ற வருகிறது. மொகலாயர்கள் ஆட்சி செய்து வந்த 15ஆம் நூற்றாண்டு வரையிலும் இது எவ்வித தடங்களும் இல்லாமல் நடைபெற்று வந்தது. பின்னர், காலப்போக்கில் அது கைவிடப்பட்டது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து பின்பு, திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் வேதாந்த ஜெகந்நாதாச்சாரியலு 1980ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் மீண்டும் திருமலை ஏழுமலையானுக்கு புஷ்பயாகத்தை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார்.
தெலுங்கு கார்த்திகை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவம் முடிந்த பின்னர் வரும் கார்த்திகை மாத ஸ்ராவன நட்சத்திர தினத்தன்று, புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஜா, முல்லை, மல்லி, சாமந்தி, தாழம்பூ, கனகாம்பரம், தாமரை, அல்லி, சம்பங்கி, மனோரஞ்சிதம் போன்ற மலர்களும் துளசி, தவனம், மருவம், வில்வம் போன்ற புனித இலைகளும் கூடை கூடையாக கொண்டு வரப்பட்டு மலையப்பசுவாமிக்கு புஷ்பயாகம் நடைபெறும். பல டன் மலர்களால் செய்யப்படும் புஷ்பயாகத்தை காண கண் கோடி வேண்டும்.
இதனிடையே திருப்பதியில் இனி அதி நவீன தொழில்நுட்ப முறையில் வருகை பதிவு செய்யும் திட்டத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அமல்படுத்தியுள்ளது. திருப்பதிக்கு வருடத்தில் சுமார் 2 கோடி பக்தர்கள் வந்து செல்லும் ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் 8000 க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும், 15000 மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோவிலை மட்டுமே அல்லாமல் பல்வேறு கோவில்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகிறது.
தேவஸ்தானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதையும், வேலை முடிந்தபின் சரியான நேரத்தில் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு செல்வதையும் உறுதிப்படுத்துவதற்கு வசதியாக முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன உபகரணத்தை திருப்பதியில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள தன்னுடைய சேம்பர் வாசலில் பொருத்தப்பட்டு இருக்கும் முக அடையாளம் கண்டுபிடிக்கும் வருகை பதிவு உபகரண செயல்பாட்டை துவக்கி வைத்த நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தேவஸ்தான கல்வி நிலையங்களிலும் இந்த முறை அமலுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார். திருப்பதியில் நேற்று 85 ஆயிரத்து 497 பேர் தரிசனம் செய்தனர். ரூபாய் 2 கோடியே 41 இலட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications