மேஷத்தில் ராகு குரு கூட்டணி..சனியின் பார்வை.. யாருக்கெல்லாம் யோகம்..கவனமாக இருக்க வேண்டியது யார்?
சென்னை: மேஷ ராசி செவ்வாயின் வீடு. இந்த வீட்டில் இப்போது ராகு உடன் குரு இணைந்திருக்கிறார். இந்த கிரகங்களை சனிபகவான் கும்ப ராசியில் இருந்து பார்வையிடுகிறார். மேஷ ராசி ராசி சக்கரத்தில் முதலாவது ராசி. அந்த ராசியில் கடந்த ஏப்ரல் முதலே ராகு குரு சேர்ந்திருக்க சனி பார்வை கிடைக்கிறது. இந்த அமைப்பு இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் யோகக் காரர்களாக இருப்பார்களாம். இந்த அமைப்பினால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் அதை சமாளிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
குருபகவான் தேவர்களின் குருவாக திகழ்பவர் பிரகஸ்பதி. ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. குரு பார்க்க கோடி நன்மை. குருவினால் குடும்பம், குழந்தைகள் தொழில் வளர்ச்சி ஏற்படும். அரசு வேலையாக இருந்தாலும் அடிமைத் தொழிலாக இருந்தாலும் சனிபகவான் தயவு நிச்சயம் தேவை. ராகு நிற்கும் ஸ்தானத்தில் வளர்ச்சியை தருவார். மேஷ ராசியில் குரு பகவான் ராகு உடன் இணைந்திருக்கும் நேரத்தில் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும்.

குரு சண்டாள யோகம்: குரு சனி சேர்க்கை பார்வை நிகழும் போதெல்லாம் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஜாதகத்தில் ஒரு ராசியில் குருவும் ராகுவும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று சொல்வார்கள். இப்போது மேஷம் ராசியில் ராகு பகவான் அமர்ந்துள்ளார் குரு உடன் இணைந்துள்ளார்.
ராஜயோக பலன்: ஜோதிடத்தில் குரு முன்னோர்களின் புண்ணியத்தை குறிப்பவராக போற்றப்படுகிறார். சனி முன்னோர்களின் கர்ம பலனை குறிபவராக போற்றப்படுகிறார். குரு சனி இருவரின் சேர்க்கை அல்லது பார்வை ஜீவ கர்ம யோகம் என்ற நிலையை வழங்குகிறது. தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு-சனி சேர்க்கை மிகப் பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களுக்கு குரு அல்லது சனி தசை நடக்கும் போது ராஜ யோகத்தின் பலன்களை அனுபவிப்பார்கள். மேஷ லக்ன காரர்களுக்கு இந்த கூட்டணியால் எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.
யாருக்கு எப்படி: ஜாதகத்தில் லக்னத்தில் - ஒன்றாம் இடத்திலேயே குருவும், ராகுவும் சேர்ந்திருந்தால் இரக்க உணர்வோடு விளங்குவார்கள். எந்த விஷயத்திற்கும் அக்கறையோடு ஆலோசனைகள் கூறுவார்கள். இரண்டாம் இடத்தில் குரு, ராகு சேர்ந்து இருந்தால் பல மொழிகளை அறிந்த பண்டிதர்களாகவும் விளங்குவார்கள். மூன்றாம் இடத்தில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் போராளியாகத் திகழ்வார்கள். நாலு வார்த்தை பாராட்டிப் பேசினால் மயங்கி விடுவார்கள். நான்காம் இடத்தில் குருவும் ராகுவும் இணைந்தால் பங்குச் சந்தையில் கொடிகட்டிப் பறப்பார்கள். பல வழிகளில் பணம் வரும்.

திடீர் அதிர்ஷ்டம்: பிறந்த ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் பூர்வீகச் சொத்தில் ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆறாம் இடத்தில் இவ்விருவரும் அமர்ந்தால் கடன்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். ஏழாம் இடத்தில் குருவும் ராகுவும் சேர்ந்து இருந்தால் திருமணம் தடை ஏற்படும். எட்டாமிடத்தில் குரு ராகு சேர்க்கையால் செய்யும் தொழிலில் தனி முத்திரை பதிப்பார்கள். ஒன்பதாம் இடத்தில் குருவும் ராகுவும் அமர்ந்தவர்கள் அரசாங்கத்திற்கே ஆலோசனை கூறுவார்கள். பதினோராம் இடத்தில் குரு ராகு சேர்ந்தால் செய்யும் தொழிலில் முன்னேறுவார்கள். பன்னிரெண்டாம் இடத்தில் குருவும் ராகுவும் இணைந்திருப்பது மோட்ச ஸ்தானத்தைக் குறிக்கும்.
ஆன்மீக அலைகள்: இந்த கிரகங்களின் கூட்டணியால் நாட்டில் புதிய மாற்றங்களும் ஏற்படும். நாட்டில் அதிகமான ஆன்மீக காரியங்கள் நடக்கும்.கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கடவுளை நம்ப ஆரம்பிப்பார்கள். ராசி சக்கரத்தில் மூன்றாம் வீட்டில் ராகு இருக்கிறார். அது தகவல் தொடர்பு இடம். கம்யூனிகேசன் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ராகு குரு கூட்டணியால் பொருளாதார நிலையில் ஸ்திரத்தன்மை இருக்கும். கும்ப ராசியில் தற்போது உள்ள சனி தனது மூன்றாம் பார்வையாக மேஷ ராசியில் உள்ள ராகு குருவை பார்க்கிறார். ராகு அதீதமான ஆசைகளை தருவார். ஜனன ஜாதகத்தில் சனி, ராகு, குரு நன்றாக இருப்பவர்களுக்கு இந்த கிரகங்களின் கூட்டணியால் பாதிப்பு அதிகம் இருக்காது.












Click it and Unblock the Notifications