சனிப்பெயர்ச்சி 2017 பலன்கள்: தனுசு ராசிக்காரர்களுக்கு நிம்மதியான காலம்!
தனுசு ராசிக்கு ஜென்மச் சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார் சனிபகவான். மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.
Recommended Video
சென்னை: டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.
தனுசு ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார்.
தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம். சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ராசிக்கு 3வது இடம், 7வது இடம், 10வது இடத்தை பார்க்கிறார்.
சனிப்பெயர்ச்சி
சனிபகவான் உங்கள் ராசியில் ஜென்மசனியாக சஞ்சாரம் செய்வது நன்மையும் தீமையும் கலந்த பலன் பயங்களாகவே நடந்து வரும். இதுவரை விரயச் சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களை உருவாக்கிய சனிபகவான் இப்பொழுது தேவையற்ற விரயங்களையும் நஷ்டங்களையும் வைத்தியச் செலவுகளையும் குறைத்து ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் வாழ வைப்பார்.
நன்மையே நடக்கும்
ஜென்மசனி என்றாலும் இது ஏழரை சனியின் இரண்டாவது கால கட்டமாகும். விரைய சனியாக இருந்த சனிபகவான் ஜென்மசனியாக தொடர்கிறார். 11வது இடத்தில் இருக்கும் குரு பகவானில் நன்மையே கிடைக்கும்.
உண்மை அவசியம்
தைரிய ஸ்தானதிபதி சனிபகவான் உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். எனவே பயம் வேண்டாம். தனுசு ராசிக்காரர்கள் வெற்றியை நோக்கி பயணிக்கப் போகிறீர்கள். செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் ஜென்மத்தில் வருவதால் உறவுகளிடம் உண்மையாக இருங்கள். தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தவறு செய்தால் தண்டித்து விடுவார் சனிபகவான்.
நல்லதே நடக்கும்
சனிபகவான் 3வது ஸ்தானத்தை 3வது பார்வையாக பார்க்கிறார். எனவே இளைய சகோதரர்களிடம் கவனம் தேவை. 7வது பார்வையாக ராசியின் 7வது இடத்தை பார்க்கிறார்.10வது பார்வையாக தொழில் ஸ்தானத்தை சனிபகவான் பார்க்கிறார். இல்லத்தரசிகளுக்கு ஏற்றமான காலம். தசாபுத்திகள் நன்றாக இருந்தால் நல்லதே நடக்கும்.
படிப்பில் கவனம்
உயர்கல்வியில் தடை ஏற்படும். எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நன்கு மதிப்பெண் பெற முடியும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க பழகுதல் வேண்டும். எதிர்பார்த்த கல்வி கடன் கிடைக்கும்.
விநாயகரை கும்பிடவும்
போக்குவரத்து வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையாகச் சென்று வருதல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அமையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். அடிவயிறு கால், பாதம், போன்ற உடல் உறுப்புகளில் கவனம் தேவை. ஈச்சனாரி விநாயகப் பெருமானை வழிபடுங்கள். ஏழரை சனியினால் ஏற்படும் துன்பங்கள் விலகிடும்.
மூலம் நட்சத்திரம்
தேவையற்ற பேச்சைக் குறைத்து உழைப்பை அதிகரித்தல் வேண்டும். வீடு மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு சாதகமாக அமையும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக அமையும். இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள் சற்று குறைந்து காணப்படும். திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.
பூராடம் நட்சத்திரம்
பயணத்தின் போது விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் அவசியம். புதிய நண்பர்களிடம் அதிகம் நெருக்கம் காட்ட வேண்டாம். செய்யும் தொழிலில் கவனம் தேவை, இந்த சூழ்நிலையில் அகலகால் வைக்க வேண்டாம். மேல்மலையனூர் கோவிலுக்குச் சென்று அங்காளம்மனை வழிபடுங்கள் மேன்மைகள் அதிகரிக்கும்.
உத்திராடம்
செய்யும் தொழிலில் முயற்சி இருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்தான்.வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். பயணத்தின் போது பத்திரம், வண்டி வாகனத்தில் வேகம் வேண்டாம். சின்ன சின்ன விசயங்களுக்கு உணர்ச்சி வசப்பட வேண்டாம். குலதெய்வத்தை தினசரி கும்பிடுங்க. மதுரை மீனாட்சியை தினசரி வணங்கினால் வாழ்க்கை வளம்படும்.