தனுசு ராசியில் செவ்வாய் சனி சேர்க்கை - 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்
சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். சனியோடு செவ்வாயும் கூட்டுக்குடித்தனம் செய்யப் போகிறார்.
Recommended Video

சென்னை: திருக்கணிதப்படி செவ்வாய் பகவான் மார்ச் 7 முதல் மே 2 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப் போகிறார். பெருமழையும், வெள்ளமும், தீ விபத்தும் நிலநடுக்கமும், பூகம்பமும் விபத்துகளும் நிகழ்வதில் கிரகங்களின் சேர்க்கை பார்வை மிக முக்கியமானது.
தனுசு குருவின் வீடு. தனுசு காலபுருஷனின் ஒன்பதாம் வீடு எனும் தர்ம ஸ்தானம். ஒரு தர்மவீட்டில் இரு பாவர்கள் தங்கப்போகிறார்கள். மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு காரணம் செவ்வாய் சஞ்சாரம் பற்றியும், செவ்வாய் சனி சேர்க்கை பற்றியும் ஜோதிடர்கள் அதிகம் பேசினார்கள். பூமிக்கு அதிபதியான செவ்வாய், நிலஅதிர்வு-பூகம்பம் போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

நெருப்பு ராசியில் செவ்வாய் சனி
தனுசு ராசி ஒரு நெருப்பு ராசி. சனி ஒரு காற்று கிரகம். செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம். எனவேதான் தனுசு ராசியில் செவ்வாய், சனி சேர்க்கை நெருப்பு சம்பந்தமான விபத்துக்களை அதிகம் ஏற்படுத்தும். கோவில்கள், பூஜையறைகள் போன்ற இடங்களில் அதிக கவனம் தேவை. 12 ராசிக்காரர்களுக்கும் இந்த சேர்க்கையால் என்ன பலன் என பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசியினருக்கு 9ஆம் இடத்தில் செவ்வாய்-சனி இணைவதால் தந்தை - மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். தெய்வ நம்பிக்கை குறைய வைக்கும்.சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் சிக்கல் இருக்கும். சிலருக்கு அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும். மே மாதம் வரை காத்திருக்கவும்.

ரிஷபம்
ரிஷபம் ராசியினருக்கு 8ல் செவ்வாய்-சனி இருக்கிறது. அஷ்டம சனி நடக்கும் இந்த கால கட்டத்தில் இந்த செவ்வாய் சனி சேர்க்கை வேறு பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்களுக்கு சிறு நீரக நோய் உண்டாகலாம் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினை உண்டாகலாம்.

மிதுனம்
மிதுனம் ராசிக்கு 7ல் செவ்வாய்-சனி சேர்க்கை,வருவதால், திருமண பேச்சில் தடங்கல் ஏற்படும். கூட்டு தொழிலில் விரோதம் வளரும். மனைவி (அ) கணவனுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் வாக்குவாதம் உண்டாக்க வாய்ப்பு உள்ளது. பணத்தட்டுப்பாடு அதிகம் காணப்படும்.

கடகம்
கடகம் ராசியினருக்கு 6ல் செவ்வாய்-சனி இணைய இருப்பதால் தேவை இல்லாமல் கடன் அதிகரிக்கும். வம்பு விரோதங்கள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்பு உள்ளது. பெருமாளை வணங்கவும்.

சிம்மம்
சிம்மம் ராசியினருக்கு 5ஆம் இடத்தில் செவ்வாய்-சனி இருப்பதால் பிள்ளைகளுக்கு உடல்நலம், படிப்பு பாதிக்கச் செய்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் பிரச்சினை உண்டாக்கும். இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால் சஷ்டி கவசம் படிக்கவும்.

கன்னி
உங்கள் ராசிக்கு 4ல் செவ்வாய்-சனி இணைய இருப்பதால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். பிரயாண சமயங்களில் கவனமும் நிதானமும் தேவை. துர்க்கையை அஷ்டமி திதியில் வணங்கலாம் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே 3ஆம் இடமான சகோதர பாவத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதகம் செய்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைய வாய்ப்புள்ளது. மாமனாருக்கு பாதிப்பு. அலைச்சல்,வாகனத்தால் பாதிப்பு,உடல்நலனில் தொண்டை பகுதியை பாதிக்கிறது. புகழ், கௌரவத்தை பாதிக்கச் செய்யும். செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு செவ்வாய்-சனி 2ல் சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறது. கண் உபாதையை உண்டாக்கும். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள், சனிக்கிழமை பெருமாளை வணங்கவும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு செவ்வாய் சனி சேர்க்கையால்,கோபம் தலைக்கு ஏறும் ரத்த கொதிப்பு டென்சன் அதிகமாகும். இதனால் உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச் செய்கிறது. தேவை இல்லாமல் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

மகரம்
மகரம் ராசியினருக்கு 12ல் செவ்வாய்-சனி இணைவதால் வழக்கு- வம்பு வந்த வண்ணம் இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் நீண்ட தூர பயணத்தில் கவனம் தேவை. தூக்கம் கெடும், இரவில் துர்கா அஷ்டோத்திரம் படிக்கலாம்.

கும்பம்
ராசியினருக்கு 11ல் செவ்வாய்-சனி இணைய உள்ளதால் மூத்த சகோதரருக்கு பிரச்சினை உண்டாக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் உஷராக இருத்தல் நலம். ஜாதகருக்கே உடல்நிலை பாதிக்கும் என்பதால் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். சஷ்டி விரதம் இருக்கலாம்.

மீனம்
மீனம் ராசியினருக்கு 10ல் செவ்வாய்-சனி சேர இருப்பதால் தொழில்துறையில் நிதானம் தேவை செய்யும். தொழிலில் போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது. வாயை கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். செவ்வாய்கிழமைகளில் மவுன விரதம் இருப்பது நல்லது.

தீ விபத்து ஏற்படும்
ஆன்மிக இடங்களை, கோவில்களை பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள். இரு அழிவு கிரகங்களும் சேரும்போது, கோவில்கள், ஆன்மிக மடங்கள், யாத்திரை ஸ்தலங்கள், தர்ம ஸ்தாபனங்கள் போன்றவை பாதிப்புக்குள்ளாகும்.
காலபுருஷனின் 9-ஆம் இடம். இது அரசு மற்றும் அரசியலைக் குறிக்குமிடம். அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

ரத்ததானம் செய்யலாம்
செவ்வாய் ரத்தத்தின் காரகர். எனவே பயணங்களில் கவனம் தேவை. செவ்வாய் தசை அல்லது செவ்வாய் புக்தி நடப்பவர்கள் முடிந்தால் ரத்த தானம் செய்யவும். அல்லது சிவப்புநிற ஆடைகள் வாங்கி தானம் செய்யவும்.
ஆயுதங்களைக் கையாளும்போது கவனம் தேவை.

முருகனை வணங்குங்கள்
சனி, செவ்வாய் சேர்க்கை நெருப்பு ராசியில் உள்ளதால், கோவில்களில் நிறைய தீபமேற்றுங்கள். தீபமேற்ற எண்ணெய், தீப்பெட்டி போன்றவை வாங்கி கொடுக்கலாம். துர்க்காஷ்டகம் கூறி, எல்லாவல்ல அந்த மகிஷாசுரமர்த்தினியை சரணடையலாம். நன்மையே நடக்கும்.செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு முருகப்பெருமானையும், விநாயகரையும், மகா விஷ்ணுவையும் வணங்க வேண்டும். செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.












Click it and Unblock the Notifications