தீராத நோயினால் அவதியுறுகிறீர்களா? ஷஷ்டி விரதமிருந்து குமாரஸ்தவம் படியுங்கள்!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: நாளை செவ்வாய் கிழமையும் ஷஷ்டி விரதமும் சேர்ந்து வருகிறது. நீண்ட நாட்களாக நோயால் அவதியுருபவர்கள் நாளை முருகனுக்கு விரதமிருந்து குமாரஸ்தவம் படிப்பது விஷேஷமாகும். வளர்பிறை ஷஷ்டியில் விரதமிருப்பது குழந்தை பாக்கியத்திற்க்கும் தேய்பிறை ஷஷ்டியில் விரதமிருப்பது நாட்பட்ட நோய் தீரவும் முக்கிய விரத தினங்களாகும்.
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே ஆனால் இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகவும் காணப்படுகின்றது.
சஷ்டி திதியில் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாகக் கிடைக்கும். அகப்பை என்பது உள்ளிருக்கும் கர்ப்பப்பையைக் குறிக்கிறது. அந்தத் திதியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் கருப்பை கருத்தரிக்கும் என்பது அர்த்தம். அதனால்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்.
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்:
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது.எவ்வளவு பெரிய பணக்காரர்கள் என்றாலும், உயர்பதவி வகிப்பவர்கள் ஆனாலும், கல்வி ஞானம் உடையோர் நாவன்மைமிக்கோர், உழைப்பாளிகள் போன்றோருக்கு ஆரோக்கியம் இல்லையெனில் அவர்களது கல்வியும், உழைப்பும், நாவன்மையும் இவ்வுலகுக்கு பயன்படாமலேயே போய்விடும். இவ்வுலகில் ஆரோக்கியம் இல்லையெனில் திறம்பட செயலாற்ற முடியாது. "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்பார்கள். எனவே நோயற்ற வாழ்வுக்கு ஆன்மிகமும் ஜோதிடமும் காட்டும் வழிகளை அறிய முயலுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
ஆறாம் இடத்தை வைத்து ஒரு மனிதன் அனுபவிக்கும் நோய் , எதிரி மற்றும் கடன் இவற்றை அறிய முடியும். மேலும் சிறை தண்டனை கூட இந்த இடத்தை வைத்து கூற முடியும். ஆறாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எதிரிகள் குறைவாக இருப்பார்கள். அதுவே சுப கிரகம் அங்கே இருந்தால் அனேக எதிரிகளை எதிர்கொள்ளும் நிலை கொடுக்கும்.
ஜோதிடத்தில் நோய் தீர்க்கும் அமைப்பு:
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.
ஜென்ன ஜாதகத்திற்க்கு ஆறாம்வீட்டிற்க்கு பன்னிரெண்டாம் பாவத்தையும்
அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம்.
அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு
பன்னிரெண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பை கூறுவார்கள்.
காலபுருஷனுக்கு லக்னமான மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுவது,
சுப கிரஹ்ங்கள் இருப்பது மற்றும் சுப கிரஹங்களின் பார்வை பெறுவது ஆகியவை ஜாதகருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அமைப்பாகும்.
காலபுருஷனுக்கு தர்ம திரிகோண ராசிகளில் அமைந்துள்ள நக்ஷதிரங்கள் முறையே கேது, சுக்கிரன், சூரியன் ஆகிய கிரஹஙளின் சாரஙளை பெற்றிருக்கும். கேது மருத்துவத்திற்க்கும் ஆன்மிகத்திற்க்கும் காரக கிரகம் ஆகும். சுக்கிரன் நோய் குணமடைவதற்க்கும் சுகமளிப்பத்ற்க்கும் காரகர் ஆகும். சூரியன் ஆத்ம காரகர் ஆகும். எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நோய் வராமல் காப்பதற்க்கும் நோய் குணமாவதற்க்கும் சூரிய பகவானின் அருள் மிக முக்கியமானதாகும்.
நோய் தீர்க்கும் மருத்துவதிற்க்கான கிரஹங்கள்:
ஒருவருக்கு நோய் விரைவில் குணமாக மருத்துவத்தொடு தொடர்புடைய கீழ்க்கண்ட கிரகங்கள் வலுவாக ஜாதகத்தில் அமைந்திருக்கவேண்டும்.
1.ஆரோக்கியத்திற்குரிய கிரகம் சூரியன். சூரியனை ஆத்ம காரகன் என ஜோதிடம் போற்றுகிறது. ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்பது ஜோதிடப் பழமொழி.
2.இரத்தம், அறுவைச் சிகிச்சை இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற செவ்வாய்.
3.மருத்துவம் மற்றும் மருந்துக்களுக்கு காரக கிரகமான புதன். மேலும் பொதுவாகவே கல்விக்கு காரகனான புதனை வித்யாகாரகன் என போற்றுகிறது பாரம்பரிய ஜோதிடம். ஜோதிடத்திற்க்கும் புதன் காரகன் என்பது குறிப்பிடத்தக்கது.
4. கேதுவை மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. கேது மணி, மந்திர ஔஷதங்களுக்கு காரக கிரகமாகும்.
5.ராகு மேற்கண்ட மருத்துவக் கிரகங்களுடன் தொடர்புகொள்ளும்போது அத்துறையில் தீவிரமான ஈடுபாடுகொள்ள வைக்கிறது.ராகு மறைந்து இருக்கின்ற பொருள், உள் விஷயங்கள் மற்றும் விஷம், ரசாயனம் ஆகியவற்றை குறிக்கின்ற கிரகம்.
6. மருந்து, மாத்திரைகள், விஷம் சம்பந்தப்பட்டவைதான். ஒரு ரசாயனம் மருந்து மற்றொரு ரசாயனத்துடன் சேரும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு மருந்தும் விஷத்தமையுடையதுதான். அதனால்தான் அந்த மருந்து அளவு மீறிப்போகும்போது வேறு விதமான உப, துணை நோய்களை ஏற்படுத்துகிறது. ஆகையால்தான் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுகேது மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப்பொருள்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
மருத்துவ படிப்பு யாருக்கு?
1. மருத்துவ படிப்பிற்க்கு லக்னம் ஐந்தாமிடம், ஒன்பதாமிடம் ஆகியவை முக்கிய பாவங்களாகும். இவற்றில் உள்ள கிரகங்களை பொருத்து மருத்துவ பிரிவு அமையும்.
2. சூரியன், செவ்வாய், புதன் மற்றும் குருவின் தொடர்பு ஒன்று ஐந்து ஒன்பதாம் பாவங்களுக்கு ஏற்பட வேண்டும்.
3. மருத்துவராக தொழில் புரிய லக்னம் இரண்டாமிடம் ஆறாமிடம் பத்தாமிடம் ஆகியவை முக்கிய பாவங்களாகும்.
4. மருத்துவராகும் கிரக அமைப்பை பெற்று ஆறாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகத்தை கொண்டு அவர் எந்த பிரிவில் சேவை செய்வார் என்பதை அறியலாம்.
5.பட்டப்படிப்பு, மேல் படிப்பு, ஆராய்ச்சி படிப்புக்கள் எல்லாம் ஒன்பதாம் இடத்தில் இருந்து முடிவு செய்யப்படுகின்றன. இந்த மூன்று இடங்களும், இந்த மூன்று இடங்களுக்குரிய கிரகமும்தான் நமக்கு கல்வி செல்வத்தை தருகின்றன. மேலும் வித்யாகாரகன் என்ற புதன் கிரகம் மிகவும் முக்கியமானது. அத்துடன் வியாழன் என்ற குருவின் பலமும் மிகவும் அவசியம். இந்த அடிப்படை அம்சங்கள் பலமாக இருந்தால் உயர் கல்வி யோகம் சிறப்பாக அமையும்.
அங்காரகனும் மருத்துவ சிகித்ச்சையும்:
ஜாதகத்தில் நோய் தீரும் அமைப்பிருந்துவிட்டாலும் மருத்துவ சிகித்ச்சைக்கு
தெய்வ அருளும் வேண்டுமல்லவா? எந்த தெய்வத்தை வணங்கிணால் நோய் தீரும்?
வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள அருள்மிகு வைத்யநாத ஸ்வாமிதாங்க!
வைத்தீஸ்வரன் கோவில்:
காவிரி ஆற்றின் வடகரைப் பகுதியில் இருக்கும் சைவத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்று திருப்புள்ளிருக்கு வேளூர். அதன் இன்றையப் பெயர் வைத்தீஸ்வரன் கோவில். பெயரிலிருந்தே வைத்தியத்தோடு தொடர்புடய ஸ்தலம் என அறியலாம்.இது செவ்வாய் கிரகத்திற்கான ஸ்தலம் ஆகும். இப்ப தெரியுதா மருத்துவ படிப்பிற்க்கு செவ்வாயின் அருள் வேண்டும் என்பது.
அங்கே உறையும் சிவனாரின் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்மனின் பெயர் தையல்நாயகி அம்மன். ஸ்தல விருட்சம் வேம்பு. அதாவது வேப்பமரம்.
கோயில் அமைப்பு:
நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
செவ்வாயின் நாயகன் அங்காரகன் தனது அங்கத்தில் ஏற்பட்ட தொழுநோயை போக்கிக்கொள்ள இக்கோவிலில் உறையும் சிவனாரிடம் அடைக்கலம் அடைந்ததாகவும், நோய் நீங்கப்பெற்று உய்வு பெற்றதாகவும் வரலாறு. இறைவனுக்கு இங்கே வைத்தியநாதன் என்று பெயர்வந்ததற்கு முக்கிய காரணமே அந்நிகழ்வுதான்! அதை மனதில் கொள்க!
இக்கோவிலில் உறையும் சிவபெருமானை மனமுருகி வேண்டுபவர்களுக்கு, எப்பேர்ப்பட்ட நோய் இருந்தாலும் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே நோய்களால் வாடுபவர்கள், இத்தலத்திற்கு சென்று வரலாம்.
நோய் தீர்க்கும் ஷஷ்டி விரதமும் பாம்பன் ஸ்வாமிகளின் குமாரஸ்தவமும்:
நோய் தீர்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, ஷஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷதிர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
கடுமையன நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பாம்பன் குமர குரு தாஸ ஸ்வாமிகள் அருளிய "ஓம் ஷண்முக பதயே நமோ நம" என தொடங்கும் குமாரஸ்தவ பாடலை படித்தால் நாள் பட்ட தீராத வியாதியும் தீரும்.
நோய் என்பது தீர்க்ககூடியது. ஆனால் பிணி என்பது.தீர்க்க முடியாதது. நோயை மருத்துவர்கள்.குணப்படுத்திவிடுவார்கள். பிணியை குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால்தான்குணப்படும்.
வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல்
"முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!!"
எனும் டி எம் செளந்தர ராஜன் ஐயா அவர்களின் பாடலை கேட்காதவர்களே இருக்கமுடியாது.
அரசு மருத்துவமனையில் முருக தரிசனம்.
அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் சுவாமிகள். தமிழகத்தில் இராமேஸ்வரம் அடுத்த பாம்பன் என்னும் ஊரில் செங்கமலத்தம்மையார், சாத்தப்பப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் அப்பாவு. பின்னாளில் முருகனருள் பெற்று ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளான இவரை பாம்பனில் பிறந்ததினால் பாம்பன் சுவாமிகள் என்ற திருநாமத்தால் அறியப்படுகிறார்.
சிறுவயது முதலே ஒவ்வொரு நாளும் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை மனமுருக படிப்பார். தானும் கந்த சஷ்டி கவசம் போலவே துதி பாட வேண்டும் என்று ஆசைபட்டார். இப்படிப் பாடும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தனது ஞான குருவான அருணகிரிநாதரின் பெயரோடு முடிக்க வேண்டும் என விரும்பினார்.
ஒரு முறை எலும்பு முறிவுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சுவாமிகள். மூப்பின் காரணமாகவும், சுவாமிகள் உப்பு இல்லாத உணவை உண்பதாலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது வானத்தில் இரண்டு மயில்கள் தோகை விரித்தாடின. இன்னும் பதினைந்து தினங்களில் குணமாகும் என்ற அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து குழந்தை வடிவில் முருகப் பெருமான் காட்சியளித்தார். சுவாமிகளின் கால் குணமானது. சென்னை அரசு மருத்துவமனை பதிவுக்கல்லில் இந்தத் தகவல் இன்றளவும் சாட்சியாக உள்ளது.
துன்புறுத்தும் நோயிலிருந்து விடுபடக் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் படித்து திருவான்மியுரில் உள்ள அவரது ஆஸ்ரம கோயிலுக்கு சென்று வருவது உடல் பிணி தீருவதோடு உள்ளத்தில் ஏற்பட்டுள்ள பிணிகளும் தீர்ந்து நோயற்ற வாழ்வு வாழ வழி வகுக்கும் என்பது சத்தியம்.