சூரியகிரகணம் பரிகாரம் முடிந்தது... பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி: சூரிய கிரகண நிகழ்வை ஒட்டி 13 மணி நேரம் மூடப்பட்டிருந்த திருப்பதி வெங்கடாசலபதி கோவில் நடை மீண்டும் இன்று நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு, வெங்கடாசலபதிக்கு சிறப்பு அபிஷேகம், சூரியகிரகண நிவர்த்தி பூஜைகளும் நடத்தப்பட்டன. பிற்பகல் 2:30 மணி முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 15 மணி நேரம் கழித்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் திருப்பதி ஏழுமலையான். அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆந்திராவின் புகழ்பெற்ற கோவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வந்து ஏழுமலையானை தரிசித்து செல்வது வழக்கம். அதிலும் விடுமுறை நாட்கள் என்றால் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இதனால் ஏழுமலையான குறைந்த பட்சமா 3 முதல் 4 மணி நேரம் வரையிலும் காத்திருந்து தரிசனம் செய்வதுண்டு.
தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், மார்கழி மாத தரிசனத்திற்காகவும் லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தால் திருமலையே அதிர்ந்தது. இதனால் தினந்தோறும் குறைந்த பட்சம் 18 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையான தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் வானில் அபூர்வமாக நிகழும் கங்கண சூரியகிரகண நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி முற்பகல் 11:16 வரை முடிவுபெற்றது. இதனையொட்டி, முன்னெச்சரிக்கையாக நேற்று இரவு 11 மணிக்கு திருப்பதி வெங்கடாசலபதி கோவில் நடை சாத்தப்பட்டது.
இதை முன்னிட்டு இன்று காலை வழக்கமாக நடைபெறும் திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளையும் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது. மேலும், திருமலையில் உள்ள அன்னதானக் கூடம், பக்தர்கள் தரிசன வரிசைகள், பக்தர்கள் காத்திருக்கும் அறைகள், லட்டு உள்ளிட்ட பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளிகளும் மூடப்பட்டன. அன்னதானம் வழங்குவதும் நேற்றிரவு 10 மணியுடன் நிறுத்தப்பட்டது.
சூரிய கிரகண நிகழ்வு இன்று முற்பகல் 11:16 மணிக்கு நிறைவடைந்ததை ஒட்டி, சுமார் 13 மணி நேரத்திற்கு பின்பு திருப்பதி வெங்கடாசலபதி கோவில் நடை மீண்டும் 12 மணிக்கு திறக்கப்பட்டது. உடனடியாக, கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகமும், சூரியகிரகண நிவர்த்தி பூஜைகளும் நடத்தப்பட்டன.
அனைத்து பரிகார பூஜைகளும் நடத்தப்பட்ட பின்னர் பிற்பகர் 2:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அறைகளில் காத்திருக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் தமிழக பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதனால், தரிசன சேவை நேரம் இன்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தேவஸ்தன அதிகாரிகள் தெரிவித்தனர்.