கல்வி, ஞானம் பெருக தென்திருப்போரை கைலாசநாதரை வணங்குங்க
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது நவ கைலாயங்களுள் ஒன்றான தெந்திருப்பேரை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ஆகும். இத் திருக்கோயில் நவகிரகங்களில் புதன் தலமாகும். இங்கு வழிபட்டால் வாத பித்த நோய்களும் பில்லி சூனியங்களும் நீங்கும் சிவஞானம் சித்திக்கும். ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தினைப்போல் இதுவும் நவகைலாயமும் நவ திருப்பதியும் அமைந்த தலமாக உள்ளது.
புராணச் சிறப்பு
பொதிகை மலையில் அமர்ந்து தமிழ் வளர்த்த அகத்திய மாமுனிவர் முக்திப்பேறு விரும்பிய தமது சீடரான உரோமச முனிவரிடம் ஒன்பது தாமரை மலர்களை தாமிர பரணி நதியில் விடுகிறேன் அந்தத் தாமரை மலர்கள் ஒதுங்கும் கரையோரங்களில் சிவாலயம் எழுப்பி சிவ வழிபாடு செய்யுமாறு பணித்து அனுப்பினார். ஒன்பது தாமரை மலர்களில் ஏழாவது மலர் தமிரபரணி நதிக்கரையில் உள்ள தெந்திருப்பேரை எனும் இவ்வூரின் அருகே நிலை கொண்டது. அகத்தியரின் ஆணைப்படி உரோமச முனிவர் இத்தலர்த்திலும் சிவவழிபாடு செய்து பலன் பெற்றார்.

தனிச் சிறப்பு
பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இத்திருக்கோயிலில் தனி சந்நிதியில் உள்ள வள்ளி, தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு தமிழ் வருடப் பிறப்புத் தினமான சித்திரை முதல் நாள் அன்று ஊர் பொது மக்கள் சார்பாக சிறப்பான முறையில் அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின் சுப்பிரமணியர் வீதி உலாவும் நடைபெறுகிறது. பொதுவாக ஆலயங்களில் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும். இத்திருக்கோயிலில் தமிழ் மாதப் பிறப்பு அன்று நடைபெறுகிறது. இங்குள்ள காலபைரவர், ஆறு கரங்களுடன் வாகனம் இன்றி காட்சி அளிக்கிறார். இங்குள்ள நவக்கிரக நாயகர்கள் குதிரை வாகனத்துடன் காட்சி அளிக்கிறார்கள்.
புதன் தலம்
நவக்கிரகங்களில் இத்தலம் புதன் தலமாகையால் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது. இங்கு வழிபட்டால் சீர்காழியை அடுத்த திருவெண்காடு சிவனை தரிசித்த பலன் உண்டாகும்.
வரலாற்றுச் சிறப்பு
இக்கோயில் அம்மன் சன்நிதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று கண்ணாடி குடுவையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தேங்காய்க்கு தனியாக ஒரு வரலாறு உள்ளது.
சுமார் நூறு வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது இத்திருக்கோயிலுக்கு வந்த ஆட்சியர் கேப்டன் துரை என்பவர், திருக்கோயில் தென்னை மரத்தில் இருந்து இளநீர் பறித்து தருமாறு கேட்க, கோயில் பணியாளர்கள் அது இறைவனின் அபிசேகத்திற்கு மட்டுமே உரியது எனக் கூறி மறுத்துள்ளனர். அதற்கு அவர் அபிஷேகத்திற்கு உரியதாக இருந்தால் என்ன அதற்கு என்ன மூன்று கொம்பா முளைத்திருக்கிறது என வினவியவாறு இளநீர்களை பறிக்குமாறு ஆணையிட்டுள்ளார். உச்சிகால பூஜைக்குறிய ஏழு இளநீர்கள் பறிக்கப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டது. அவ்வேழு இளநீர்களிலும் மூன்று கொம்புகள் வளர்ந்திருப்பது கண்டு வியந்து இவ்விறைவனின் சக்தியை உணர்ந்து கோவிலுக்கு கேப்டன் துரை பல நன்கொடைகள் வழங்கி வணங்கிச் சென்றார். அவற்றில் இரண்டு இளநீர்கள் இன்றளவும் இத்திருக்கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த கொம்பு முளைத்த தேங்காய் இன்றும் அம்மன் சந்நிதியில் இருக்கிறது. இரண்டு கொம்புகள் மட்டும் வெளியே தெரியும். ஒன்று அடியில் தெரியும்.
அமைவிடம்:
திருநெல்வேலி - திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து முப்பத்துநான்கு கிலோமீட்டர் தூரத்திலும் திருச்செந்தூரிலிருந்து பதினேழு கிலோமீட்ட தூரத்திலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.
இறைவன்: அருள்மிகு கைலாசநாதர்
இறைவி: அருள்தரும் அழகிய பொன்னம்மை
தீர்த்தம்: விருட்ச தீர்த்தம்
தலவிருட்சம்: மகாவில்வம்












Click it and Unblock the Notifications