ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி : மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்தின் கடைசி நாளான இன்று, நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்தின் கடைசி நாளான இன்று, நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் ரத்தினகிரி, ரத்தினம் பதித்த தங்க அபயஹஸ்தம் அணிந்தும், வாசனைமிக்க ஏலக்காய் ஜடையினை தரித்தும் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் வெள்ளிப்பல்லக்கில் உலாவந்தார்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நாளை அதிகாலை திறக்கப்படுகிறது.
பகல் பத்து திருவிழா கடந்த 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நம்பெருமாள் நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தினசரியும் பக்தர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை நம்பெருமாளை கண்குளிர தரிசனம் செய்து வருகின்றனர்.

பகல்பத்து உற்சவ 10வது நாளான இன்று நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படுகிறார். இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
கொரோனா பரவலை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை காலை 8 மணிவரை கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் அதிகாலை 3.45மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்படுகிறார். தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரம பதவாசலை அடைகிறார். பின்னர் சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகையில் பக்தர்கள் மத்தியில் எழுந்தருள்வார்.
நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம். எனவே பலரும் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்ய விரும்புவார்கள். இந்த ஆண்டு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் வழியாக சென்று நம்பெருமாளை தரிசனம் செய்யவும் மூலவரின் முத்தங்கி சேவையை தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் ராப்பத்து விழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் ஜனவரி 4ஆம் தேதி முடிய பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும், விரைவாக தரிசனம் செய்திட ஏதுவாக மூலவர் முத்தங்கி சேவை, பரமபதவாசல் ஆகியவற்றிற்கு கோயில் இணைதளமான www.srirangam.org-ல் கட்டணமில்லா தரிசனம் மற்றும் விரைவு வழி தரிசனம் ஆகியவற்றிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகைதர பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வசதியினை பயன்படுத்தி முன்பதிவு செய்த நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பாக வருகைதர வேண்டும். வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகளை srirangam temple என்ற You Tube Channel-லிலும் உள்ளூர் தொலைக்காட்சியிலும் காணலாம் என ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் நிர்வாகம் தரப்பிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications