வடலூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூசம் - ஜோதி வடிவத்தில் காட்சி அளிக்கும் வள்ளலார்
வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன வழிபாடு 18,19 தேதிகளில் நடைபெற உள்ளது. ஜோதி வடிவில் காட்சி அளிக்கும் வள்ளலாரை காண பக்தர்களுக்கு நேரடியாக அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் நாளை தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று கொடியேற்றம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும்.
ஷாக்! இந்தியாவில் ஒரே வாரத்தில் 40% அதிகரித்த கொரோனா.. அதுவும் இந்த 3 மாநிலங்கள்தான் டாப்!
வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை நடைபெறுகிறது. நாளை 18ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 5.30, 10, மதியம் 1 மணி, இரவு 7,10 மணிக்கு திரை விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். நாளை மறுநாள் 19ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
வடலூர் சத்திய ஞான சபை
கடலூருக்கு அருகே உள்ள மருதூரில் பிறந்த ராமலிங்க அடிகளார் 'சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சத்தியச் சங்கத்தை அமைத்து உயிர்க்கருணை ஒழுக்கத்தை கடைபிடிக்கச் சொல்லி அனைவரையும் வலியுறுத்தினார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று அறிவுறுத்தி வந்த வள்ளலார் அன்னதானச் சாலை ஒன்றை அமைத்தார்.
பசித்த வயிறுக்கு உணவு
வடலூரில் பார்வதிபுரம் என்னும் ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருக்கிறது.
ஜோதியுடன் கலந்த வள்ளலார்
இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் கடந்த 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே 'பேருபதேசம்' என்று சொல்லப்படுகிறது. 1874-ஆம் வருடம் தை மாதம் 19ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருள் வாழ்த்து வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது முதன்மைச் சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.
தைப்பூச நட்சத்திர வழிபாடு
அன்று முதல் ஆண்டு தோறும் தைப்பூச நாளன்று வள்ளலார் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்சோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையைப் பலகணி வழியாகப் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.
ஜோதி வடிவாக காட்சி அளிக்கும் வள்ளலார்
வள்ளலார் ஜோதி வடிவத்தில் காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான். ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் தெரிவதைக் காணலாம்.
ஆன்லைனில் தரிசனம்
சத்திய ஞான சபையில் வள்ளலார் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் மக்கள் கூடி அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' என்று முழக்கமிட்டு பக்தியுடன் வழிபடுவார்கள். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் வழக்கமாக நடைபெறும் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளது. தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நிகழ்ச்சியும், 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஞானசபையில் அருட்பா முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தை நேரடியாகக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கண்டு தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.