திருவையாறு ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இசைக் கலைஞர்கள் அஞ்சலி
திருவையாற்றில் இன்று நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைக்கலைஞர்கள் கீர்த்தனைகளைப் பாடி ஸ்ரீதியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
திருவாரூர்: தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி, இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இசைக்கலைஞர்கள் கீர்த்தனைகளைப் பாடி ஸ்ரீதியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video

திருவையாறு தியாகராஜர் ஆஸ்ரமத்தில் தியாகராஜரின் 174-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. ஆண்டுதோறும் இவ்விழா 5 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக இவ்விழா இரு நாள்கள் மட்டுமே நடைபெறுகிறது. மேலும், குறைந்த அளவிலேயே இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதேபோலப் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி இன்று காலை 5.30 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் தொடங்கி ஆஸ்ரமம் வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ் உள்பட ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்தக் குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications