ஏழுமலையானுக்கு உண்டியல் காணிக்கை.. ஜூலை மாதத்தில் வரலாற்று சாதனை.. எத்தனை கோடி தெரியுமா?
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பல கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. கொரோனா காலத்தில் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்த முடியாத பணத்தை எல்லாம் தற்போது உண்டியல் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர் பக்தர்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் அனுமதிக்கப்படாமல் இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததால் படிப்படியாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளாக தரிசன செய்ய முடியாத பக்தர்கள் தற்போது சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுதவிர, பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை, தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மூலமும் தேவஸ்தானத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. இந்த வருமானம் அனைத்தும், ஏழுமலையான், தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஏழுமலையானுக்கு ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர் .கடந்த மே மாதம் 130 கோடியே 5 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்திருந்தது. இதுவே கடந்த மாதம் வரை ஏழுமலையானுக்கு ஒரே மாதத்தில் கிடைத்த அதிக காணிக்கை வருமானமாக இருந்து வந்தது.
கடந்த ஜூலை மாதம் ஐந்து நாட்கள் ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்திருந்தனர். ஜூலை நான்காம் தேதி 6 கோடியே 18 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்தது. இது வரை ஏழுமலையானுக்கு ஒரே நாளில் கிடைத்த அதிக காணிக்கை தொகை இதுவே ஆகும்.

ஜூலை மாதத்தில் வரலாற்று சாதனை
கடந்த 31 நாட்களில் ஏழுமலையானுக்கு பக்தர்கள் 139 கோடியே 45 லட்ச ரூபாயை கோவில் உண்டியலில் காணிக்கையாக அளித்து உள்ளனர். இதன் மூலம் தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரே மாதத்தில் ஏழுமலையான் உண்டியல் அதிக காணிக்கையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பவித்ரோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம் வரும் 8ஆம் தேதி துவங்கி பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. கோயிலில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களை களைய வருடாந்திர பவித்ரோற்சவத்தின்போது யாகம் நடத்தப்படும். இதையொட்டி, நடைபெறும் உற்சவருக்கான திருமஞ்சன சேவையிலும், நிறைவு நாளன்று நடைபெறும் பூர்னாஹுதியிலும் பக்தர்கள் கலந்து கொள்ளலாம்.
இதற்கான டிக்கெட்டை வரும் இன்றைய தினம் திருப்பதி தேவஸ்தான இணைய முகவரியில், 2,500 ரூபாயை செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பவித்ரோற்சவத்தில் பங்கேற்க வரும் பக்தர்கள் சேவைக்கான டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன், சம்பிரதாய உடை அணிந்து வரவும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
பிரம்மோற்சவம்
செப்டம்பர் மாதம் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. புரட்டாசி மாதத்தில் தமிழக பக்தர்கள் ஏராளமானோர் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அந்த மாதத்தில் உண்டியல் காணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications