பங்குனி பவுர்ணமியில் தெப்ப உற்வசவம் - திருப்பதியில் 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து
திருப்பதியில் தெப்பத்திருவிழாவை ஒட்டி 5 நாட்களுக்கு அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருமலை திருப்பதியில் நடத்தப்படும் வருடாந்திர தெப்ப உற்சவத் திருவிழாவை முன்னிட்டு, சகஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதே சமயம், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அபாயம் படிப்படியாக குறைந்து விட்ட காரணத்தால், கொரோனா கட்டுப்பாடுகளும் பெருமளவு தளர்த்தப்பட்டு அனைத்து பகுதிளும் சகஜ நிலைக்கு மாறிக்கொண்டிருக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களிலும் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல் திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், கல்யாண உற்சவ சேவைக்கட்டணங்கள் உயர்வு - பக்தர்கள் கலக்கம்
தெப்ப உற்சவம்
தெப்ப உற்சவ விழாவின் முதல் நாளான மார்ச் 13ஆம் தேதியன்று சீதா, லட்சுமண, ஸ்ரீஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஊர்வலமும், 14ஆம் தேதியன்று ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் மூன்று சுற்று ஊர்வலமும் நடைபெறும். 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஏழுமலையான் ஸ்ரீவாரி புஷ்கரணியில் வலம் வரவுள்ளார். நிறைவு நாளன்று ஏழு சுற்றுக்கள் புஷ்கரணியில் சுவாமிகள் வலம் வருகின்றனர்.
பங்குனி மாத பவுர்ணமி
பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறும் ஐந்து நாட்களுக்கு, சகஸ்ர தீப அலங்காரம் மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆர்ஜித சேவைகள் தொடக்கம்
அதே சமயம், கொரோனா நோய்த் தொற்று அபாயம் படிப்படியாக குறைந்து விட்ட காரணத்தால், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை, மேல்சாட் வஸ்திரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
ஏப்ரல் 1 முதல் அனுமதி
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்காரம் உள்ளிட்ட சேவைகளை நேரடியாகவும், இணையதளம் மூலமும் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், ஆர்ஜித சேவைகள், உதயாஸ்தமன சேவை, விம்சதி வர்ஷ தர்ஷிணி சேவை டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொரோனா நிபந்தனைகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதிலும் பழைய முறையே பின்பற்றப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.