ஸ்ரீரங்கத்தில் ராப்பத்து உற்சவம் கோலாகலம் - நம்பெருமாளை தரிசித்த பக்தர்கள்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் நிறைவடைந்ததை அடுத்து, ராப்பத்து உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று அதிகாலை 4:30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் 4:45 மணியளவில் பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் வழியாக நுழைந்து ஆயிரங்கால் மண்டபம் முன்பாக மணல் வெளியில் எழுந்தருளினார். 2ஆம் நாளான இன்று நண்பகல் 12 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டார். இரவு 9 மணி வரையிலும் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதியன்று பகல் பத்து உற்சவத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. பகல் பத்து நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், பகல் பத்து உற்சவ நாட்களின் போது, ஆண்டாள் அருளிச்செய்த திருமொழி பாசுரங்கள் அரையர்களால் பாடப்பட்டன.

இந்நிலையில், ஞாயிறன்று பகல்பத்து உற்சவம் நிறைவடைந்து, நேற்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கியது. இதனையடுத்து, ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று அதிகாலை 4:30 மணியளவில் உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்துடன் மூலஸ்தனத்திலிருந்து புறப்பட்டு, அதிகாலை 4:45 மணியளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபம் முன்புள்ள மணல் வெளியில் எழுந்தருளினார்.
பின்னர், வழக்கம்போல் இரவு 11 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12;15 மணியளவில் மீண்டும் மூலஸ்தனம் சென்றடைந்தார். ராப்பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று நண்பகல் 12 மணியளவில், நம்பெருமாள் மூலஸ்தனத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணியளவில் பரமபத வாசலைக் கடந்த ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இன்றிரவு 9 மணி வரையிலும் நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோல் ராப்பத்து உற்சவத்தின் அனைத்து நாட்களிலும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
ராப்பத்து உற்சவத்தின் 7ஆம் நாளான வரும் ஞாயிறன்று திருக்கைத்தல சேவை நடைபெறும். அன்று பிற்பகல் 3 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தனத்தில் இருந்து புறப்படுகிறார். மாலை 6 மணி முதல் 6:15 மணி வரையிலும் திருக்கைத்தல சேவை நடைபெறும். ராப்பத்து உற்சவ நிகழ்ச்சியின் 8ஆம் நாளான ஜனவரி 13ஆம் தேதியன்று திருமங்கை மன்னரின் வேடுபறி (வழிப்பறி) நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 4:30 மணியளவில், நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 5:15 மணி முதல் 6:15 மணி வரையிலும் வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் இரவு 7:30 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி இரவு 10:30 மணி வரையிலும் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
இரவு 11 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வீணை வாத்தியத்துடன் புறப்பட்ட நள்ளிரவு 12:15 மணியளவில் மீண்டும் மூலஸ்தனம் சென்றடைகிறார். ராப்பத்து உற்சவ நிகழ்ச்சியானது வரும் ஜனவரி 15ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அன்று காலை 9:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். காலை 10:30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்படும். முற்பகல் 11 மணியளவில் நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சி நடைபெறும்.
ராப்பத்து உற்சவ நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளும், ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் முன்பு, ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் திருவாய் மொழி பாசுரங்களை அரையர்கள் அபிநயத்துடன் இசைக்கின்றனர். அப்போது மூலவரான நம்பெருமாளை முத்தங்கி சேவையில் பக்தர்கள் தரிசிக்கலாம்.
தமிழர் திருநாளான தை முதல் நாளன்று மகா சங்கராந்தி திருவிழா நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் நம்பெருமாள், உபநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு அதிகாலை 3 மணியளவில் சங்கராந்தி மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
தை 2ஆம் நாளான ஜனவரி 16ஆம் தேதியன்று, அதிகாலை 5:30 மணி முதல் 6;30 மணி வரையிலும் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 2 மணியளவில், நம்பெருமாள் மூலஸ்தனத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2:45 மணியளவில் கனு மண்டபம் வந்தடைகிறார். இரவு 8:15 மணிக்கு குதிரை வாகனத்தில் கனு பாரிவேட்டை கண்டருள்கிறார்.
அன்றிரவு 10:30 மணி முதல் 11 மணி வரையிலும் மூலஸ்தானத்தில் இருந்து இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. இரவு 11 மணியில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை 2 மணி வரையிலும் சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவையும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் சாற்று முறையும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா இனிதே நிறைவுபெரும்.












Click it and Unblock the Notifications