குரு பெயர்ச்சி 2020: குரு பகவான் யார்? குரு தட்சிணா மூர்த்தி யார் - யாரை எப்படி வணங்க வேண்டும்
குரு பெயர்ச்சி வந்தாலே குரு பகவானுக்கும், சிவ ஆலயக்களில் உள்ள தட்சிணாமூர்த்திக்கும் பரிகாரம் செய்வார்கள். இருவருக்குமே பரிகாரம் செய்யலாமா? யாருக்கு என்ன பரிகாரம் செய்வது என்று பார்க்கலாம்.
சென்னை: குரு பெயர்ச்சி காலத்திலும், வியாழக்கிழமைகளிலும் சிவ ஆலயங்களில் தட்சிணாமூர்த்திக்கும், நவ கிரகங்களில் குரு பகவானுக்கும் மஞ்சள் ஆடை அணிவித்து கொண்டை கடலை மாலை சார்த்தி வணங்குகின்றனர். இருவருக்குமே பரிகாரம் செய்யலாமா என்று பலரும் யோசிக்கலாம். குருவிற்கும், தட்சிணாமூர்த்திக்கும் இடையே என்ன வேற்றுமை இருக்கிறது என்று பார்க்கலாம்.
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது. சிவ பெருமானின் ரூபம். ஸ்நகாதி முனிவர்களுக்கு வேத ஆகமத்தை உபதேசிக்கும் குருவின் உருவமாக தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் அடியில் அமர்ந்திருக்கக் கூடியவர். இவரை ஞான குரு அல்லது ஆதி குரு என அழைக்கப்படுகிறார்.
சிவன் கோயிலில் தென்முகம் பார்த்து அருள்பாலிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. நவகிரகங்கள் என்பது இறைவன் இட்ட கட்டளையை, கடமையைச் செய்யக் கூடிய ஒன்பது கோள்களாகும். அவற்றில் ஒருவர் தான் குரு பகவான் எனும் ப்ரஹஸ்பதி. குரு பகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு
சிவன் கோவில்களில் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற ஆடை அணிவிட்டு பரிகாரம் செய்கின்றனர். இவர்களில் 99 சதவிகிதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.
இரு தெய்வங்களும் ஒன்றா
எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு நவகிரக குரு பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் குரு பகவானுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்? குரு தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக்குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள். குரு ஸ்லோகத்தில் இடம்பெறும் குரு என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் தட்சிணாமூர்த்தியும் ஒன்று என நினைத்திருக்கலாம்.
குரு பிரகஸ்பதி
கடவுள் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர்களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் குருபகவான். இவர் பிரகஸ்பதி. தேவர்களின் குருவாக திகழ்கிறார்.
சிவபெருமானும் குருதான்
சிவனும் குருவே கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார்.
ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தி
சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார். ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.
திசைகள் வெவ்வேறு
தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் குரு என்று அழைக்கப்படும் பிரஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர். வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். குரு பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே தட்சிணாமூர்த்தி, குரு இருவரும் வேறுபடுகின்றனர்.
தெற்கு நோக்கியிருக்கும் தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள்.அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். எனவே இருவருமே வேறு வேறானவர். குரு பகவானுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர்.
குருவிற்கு பரிகாரம்
குருவிற்கு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,இனி வரும் வியாழக்கிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.
தியானம் செய்யலாம்
ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியின் சன்னதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும்.
குருவிற்கு பரிகாரம் செய்யுங்கள்
குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக பாடி, தென் திட்டை, குருவித்துறை ஆகிய ஆலயங்கள் பல உள்ளன. அதே நேரத்தில் ஆலங்குடி, பட்டமங்கலம் உள்ளிட்ட பல சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை வணங்குகின்றனர். குரு பெயர்ச்சி நாளில் குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்தால் மட்டும் போதும் தட்சிணா மூர்த்தியை எந்த நாளில் வணங்கினாலும் ஞானமும் கல்வியும் பெருகும்.