பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி?
மங்களகரமான பிலவ வருடம் பிறக்கப் போகிறது. இந்த பிலவ வருடத்தில் வருட கிரகங்களான குரு, சனி, ராகு கேது ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளில் பிறந்த 4 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பர
சென்னை: மங்களகரமான பிலவ வருடம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று புதன்கிழமை பிறக்கிறது. ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். பிலவ வருடத்தில் ராஜாவாக செவ்வாய் வருவதால் இரண்டு மரக்கால் மழை பொழியும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. இந்த பிலவ வருடத்தில் குரு பகவான் முதலில் கும்ப ராசியில் அதிசாரமாக பயணித்து பின்னர் மகர ராசிக்கு வந்து மீண்டும் கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார். சனி பகவான் மகர ராசியிலும் ராகு ரிஷப ராசியிலும் கேது விருச்சிக ராசியிலும் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
குரு பகவான் அதிசாரமாக கும்ப ராசியில் பயணம் செய்கிறார் செப்டம்பர் 14ஆம் தேதியன்று வக்ர கதியில் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு திரும்புகிறார். நவம்பர் 11ஆம் தேதி குரு நேர்கதியில் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஏப்ரல் 13ஆம் தேதி 2022ஆம் ஆண்டு மீன ராசிக்கு பயணம் செய்கிறார்.
ராகு கேது பெயர்ச்சி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பயணம் செய்கிறார். சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் மகர ராசியில் பயணம் செய்கிறார். இந்த நான்கு ராசிகளில் பிறந்தவர்களுக்கு திருமண யோகம் கைகூடி வருமா? நல்ல வேலை கிடைக்குமா? வருமானம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சிம்மம்
சூரிய பகவானை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சனிபகவான் பயணம் செய்கிறார். ராகு பத்தாம் வீட்டிலும் கேது 4 ஆம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். குரு பகவான் வருட ஆரம்பித்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டிலும் பிற்பகுதியில் வக்ரமடைந்து ஆறாம் வீட்டிலும் பயணிக்கிறார். வருட இறுதியில் மீண்டும் நேர்கதியில் குரு பகவான் ஏழாம் வீட்டில் பயணிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் உங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது. தொட்டது துலங்கும். குருவின் பார்வையால் உங்களுக்கு யோகமான ஆண்டாக அமைந்துள்ளது.
செய்யும் தொழிலில் லாபம் அபரிமிதமாகக் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் சுப காரியம் கை கூடி வரும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். வேலையில் புரமோசனும் கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்கு ஆலய தரிசனம் செய்வீர்கள். படித்து முடித்து விட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் நவம்பர் 20ஆம் தேதி வரை பண விவகாரங்களிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும். வீடு நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். புது வீடு கட்டலாம். நவம்பர் 20ஆம்தேதிக்கு மேல் குருபகவான் நேர்கதியில் பயணித்து உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில் வசந்தகாலம் வீசும். பணப்புழக்கம் அபரிமிதமாக இருக்கும். வியாழக்கிழமை நாளில் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று வர சகல நன்மைகளும் தேடி வரும்.
கன்னி
அறிவின் நாயகன் புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ராகுவும் மூன்றாம் வீட்டில் கேதுவும் பயணம் செய்கின்றனர். குரு பகவான் வருட ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சுப காரிய செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு கரையும் கடன் வாங்கும் நிலை ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மீண்டும் வக்ரகதியில் 5ஆம் வீட்டிற்கு குருபகவான் திரும்புகிறார். நவம்பர் 20ஆம் தேதி வரை ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யும் காலத்தில் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் செய்யும் தொழில் நன்கு விருத்தியாகும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் தேடி வரும். நவம்பர் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் மீண்டும் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு செல்வதால் வேலையில் கவனம் தேவை. வீண் செலவுகள் செய்து தேவையற்ற கடன் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வரும். கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்து நெருக்கம் அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் ஆடை அணியவும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றவும். யானைக்கு பழங்கள் வாங்கிக் கொடுக்கவும்.
துலாம்
களத்திரகாரகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சாரம் செய்கிறார். நான்கில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் யோகம்தான் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ராகு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிலும் கேது இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். வருடம் பிறக்கும் போது குரு பகவான் ஐந்தாம் வீட்டில் பயணித்து உங்கள் ராசியை பார்க்கிறார். குருவின் பொன்னான பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண சுப காரியங்கள் நடைபெறும். காதல் திருமணம் கை கூடி வரும்.
பெற்றோர்களின் ஆசியுடன் காதல் திருமணம் நடைபெறும். புதிய வீடு, மனை வாங்கலாம். வீடு கட்ட ஆரம்பிக்கலாம். செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் நவம்பர் 20ஆம் தேதி வரைக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு மீண்டும் வருவதால் தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்வு அவசியம். யாரை நம்பியும் அதிக அளவில் பணத்தை கடனாகக் கொடுக்க வேண்டாம். அதையும் மீறி கொடுத்தால் கொடுத்த பணம் திரும்ப வராது. நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு மேல் குரு பகவான் மீண்டும் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு பயணம் செய்யும் காலத்தில் தொழில் முதலீடுகளில் லாபம் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். சிலருக்கு கூடுதல் சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை செவ்வாய்கிழமை சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.
விருச்சிகம்
பூமி காரகன் சகோதரகாரகன் செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிகராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சனிபகவான் பயணம் செய்கிறார். வெற்றிகரமான ஆண்டாக அமையப்போகிறது. கடந்த சில வருடங்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் உறவினர்களிடையே திடீர் சலசலப்புகள் வந்து போகும். கேது உங்கள் ராசியில் இருப்பதால் சுப காரியங்கள் நடைபெறுவதில் சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் நவம்பர் 20ஆம் தேதி வரை குரு பகவான் மீண்டும் 3ஆம் இடத்திற்கு வருவதால் திடீர் இடமாற்றம் ஏற்படும். இளைய சகோதரர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். நவம்பர் 20ஆம் தேதிக்கு மேல் ஏப்ரல் வரை குரு பகவான் மீண்டும் நான்காம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி செல்வதால் உங்கள் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்வி யோகம் கை கூடி வரும். திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்து வர பாதிப்புகள் நீங்கும். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் நடைபெறும்.