கடக ராசியினருக்கு அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. பட்ட கஷ்டத்துக்கெல்லாம் இனி பலன்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். கடக ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம் - கடகத்துக்கு இந்த சனிப்பெயர்ச்சி அமோகமான காலகட்டமாக இருக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். யாருடைய உதவியும் கிடைக்காமல், வாழ்க்கையே தப்பு தப்பாக போயிருக்கும் சூழல் உண்டாகியிருக்கும். ஆனால் இப்போது சனி பகவான் கடகத்துக்கு பாக்கிய ஸ்தானத்துக்குப் போகிறார். இதனால் உங்களுக்கு பெரிய விமோர்சனம் உண்டாகப் போகிறது.
திருமண யோகம்
ராகு வந்து அமர்ந்தாலும் குருவின் பார்வை இருப்பதால் வீட்டில் நல்ல காரியங்கள் அனைத்தும் நடக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகதவர்களுக்கு திருமணம் உண்டாகும். வாழ்க்கையில் உங்களுக்கு நடக்க வேண்டிய அனைத்து விஷயங்களும் இந்த காலத்தில் நடக்கும். அஷ்டமத்தில் சனி இருக்கும்போது தெய்வத்தின் அனுகிரகம் இருக்காது. ஆனால் இப்போது 9 ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். அனைத்து விஷயங்களிலும் அதிர்ஷ்டம், நல்ல பலன்களும் கிடைக்கும்.
வெளிநாட்டு வாய்ப்புகள்
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு உண்டாகும், முன்னோர்கள் சொத்து, பஞ்சாயத்துகள் இருந்தால் சரியாகும். அம்மா, அப்பாவுடைய ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் பேசுவார்கள், குடும்பம் ஒன்று சேரக்கூடிய யோகங்கள் உண்டாகும். திருமணமாகி விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் உண்டாகும். காப்பீடு மூலமாக பணம் வந்து சேரும். பூர்வீகத்தில் இருந்து, அப்பாவிடம் இருந்து பணம் வந்து சேரும்.
பண வரவு அதிகரிக்கும்
மனைவி, கணவனின் சொத்து மூலமாகப் பணம் வரும். வாடகைக்கு விட்டிருந்த வீட்டில் இருந்து வந்த தகராறுகள் சரியாகும். வேலை, தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். இருக்கும் வேலையில் இருந்து இன்னொரு நல்ல வேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகள் அனைத்து கோயில்கள், தெய்வம் சார்ந்த வழிபாடு போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள். பயணம் செய்து கொண்டே இருப்பீர்கள். 9 ஆம் இடத்துக்கு வரும் சனியால் கூண்டை விட்டு வெளியேறிய கிளி போல பறப்பீர்கள். சந்தோஷமான, வெற்றிகரமான காலகட்டமாக இருக்கும்.
பரிகாரம்
அம்மா, அப்பாவுடைய கால் பாதம் பணிந்து செய்யக்கூடிய அனைத்து விஷயங்களிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். சந்நியாசி, மகான்கள் வழிபாடு அருமையான பலன்களைத் தரும். வீட்டிற்கு வரும் பெரியவர்கள், சித்தர்களுக்கு பாத பூஜை செய்வது அருமையான பலன்களைத் தரும். கால் பாதம் என்பது சனியின் ரூபம். உங்கள் தலையெழுத்து மாற வேண்டும் என்றால் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது எந்த வகையிலும் தவறாகாது. கடகத்தில் பிறந்தவர்கள் ஒருமுறையாவது மந்திராலயம் சென்று சேவை செய்வது நல்ல பலன்களைத் தரும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயம்
பூர்வீகப் பிரச்சனைகளில் இருக்கும் பிரச்சனைகள் வரும். தலைமுறையான பிரச்சனைகள், நோய்கள் வந்து சேரும். அதில் கவனமாக இருப்பது நல்லது.
வழிபட வேண்டிய தெய்வம்
குருமார்கள் வழிபாடு, குறிப்பாக ராகவேந்திரர் வழிபாடு நன்மைகளைத் தரும். குல தெய்வ வழிபாடு நல்ல மாற்றத்தை தரும்.
மதிப்பெண்
மகிழ்ச்சியின் அடிப்படையில் 100க்கு 90 சதவீதம் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தின் அடிப்படையில் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications