குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம்.. கும்பத்துக்கு செவ்வாய் பெயர்ச்சியில் உள்ள சிக்கல்
சென்னை: தை மாதத்தில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் கிரக பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு ஏற்படும் பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
செவ்வாய் அமைப்பு சரியாக இருந்தால் ஆரோக்கியம், உத்யோகம் அமைப்பு நன்றாக இருக்கும். செவ்வாய் 3, 6, 11 ஆம் இடங்களில் நற்பயன்களை கொடுப்பார். பத்தாம் இடத்தில் சுமாராகவும் 1,2,4,5,7,8,9,12 ஆகிய இடங்களில் செவ்வாய் வந்தால் சற்று பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

செவ்வாயுடன் சனி சம்பந்தப்பட்டால் உலகளவு பேரழிவு ஏற்படும். செவ்வாயுடன் சந்திரனின் நேர்பார்வை வரும்போதும், செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் பயணிக்கும்போது நீச்ச பங்கம் பலன் கிடைக்கும். இந்நிலையில் செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார்.
அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். செவ்வாய் ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். இது 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.
கும்ப ராசிக்கு செவ்வாய் ஆறாம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். ஐந்தாம் ஸ்தானம் உடன்பிறப்புகளை குறிக்கும். உடன்பிறப்புகளிடம் மனஸ்தாபம் ஏற்படும். ஏற்கனவே அவர் அக்டோபர் மாதத்துக்கு முன்பே அவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படுத்தியிருப்பார். அப்படி ஆகியிருந்தால் அவர்களே உங்களுடன் வந்து பேசுவார்கள்.
அந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லுங்கள். அதை அவர்கள் புரிந்து கொண்டு உங்களுடன் மீண்டும் நட்பு பாராட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. செவ்வாய் எட்டாம் இடத்தை பார்ப்பதால் எதிரிகள் அழியக் கூடிய சூழல் உள்ளது. இந்த அமைப்பு எதிரிகளைக் கூட நண்பர்களாக மாற்றும்.
செவ்வாய் ஐந்தாம் இடத்துக்கு வருவதால் வியாபாரத்தில் உங்கள் கௌரவம் சார்ந்த விஷயங்களில் சற்று பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. படிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தடுமாற்றம் ஏற்படும். எனவே அதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நலன் சார்ந்த விஷயங்களால் படிப்பில் லேசான தடுமாற்றம் ஏற்படும்.
அதேநேரத்தில் உங்களின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. முக்கியமாக இந்த காலத்தில் உங்களின் உயர் படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கான யோகமும் உண்டு. பெரிய பல்கலைக்கழகங்களில் இருந்து இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளின் உடல்களில் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உஷ்ணத்தால் சூட்டு கொப்புளங்கள், வயிறு சார்ந்த பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பதவி, செல்வாக்கு ஆகியவற்றில் உங்களுக்கு மரியாதை குறைவு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே சபையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். குடும்பத்திலும் சலசலப்புகள் ஏற்படும்.
மூத்த சகோதர, சகோதரிகளிடம் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தசம ஸ்தானதிபதி ஐந்தாம் இடத்துக்கு வருவதால், வியாபாரத்தில் மாற்றுவதற்கான முயற்சிகள் உண்டு. மார்ச் மாதம் சனி உங்களின் இரண்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். அப்போது வருமானத்தில் தடை ஏற்படலாம். அதன் காரணமாக தொழில் மாற்றத்துக்கான முயற்சியில் தெளிவாக சிந்தித்து செயல்படுங்கள்.
வருவாய் தடை இல்லாமல், அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்க்க அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். தினசரி திருப்புகழை படித்து உங்களின் வேலையை தொடங்கினால் முருகன் உங்களை எல்லாவற்றிலும் பாதுகாத்து வெற்றியை தேடி தருவார்.












Click it and Unblock the Notifications