செவ்வாய் பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கு கடவுள் பாதி.. மிருகம் பாதி.. என்ன நடக்கும்?
சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் தை மாதத்தில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி இருக்கிறது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரக பெயர்ச்சியால் சிம்மம் ராசிக்கு ஏற்படும் பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
செவ்வாய் அமைப்பு சரியாக இருந்தால் ஆரோக்கியம், உத்யோகம் அமைப்பு நன்றாக இருக்கும். இந்நிலையில் செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடகம் ராசியில் நீட்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார். அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். செவ்வாய் ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுனம் ராசியில் இருக்கப் போகிறார். இது 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

இதில் சிம்மம் ராசியின் லாப ஸ்தானத்துக்கு செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த தொல்லை விலகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வழக்கு மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்னை பூதாகரமாகிவிடுமோ என்று பயத்தில் இருப்பீர்கள். அந்த பயம் நீங்கி நம்பிக்கை, யோகம் பிறக்கும் காலமாக இது இருக்கும்.
உங்களின் பதற்றம் குறையும். ஆரோக்கியத்திலும் எந்த பிரச்னையும் இருக்காது. நான்காம் வீட்டு அதிபதி லாப ஸ்தானத்தில் இருக்கிறார். நிலம் சார்ந்த லாபம், தாயார் சார்ந்த லாபம் ஏற்படும். பத்தாம் இடத்துக்கான அதிபதி இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளார். எனவே பதவி சார்ந்த விஷயங்களிலும் லாபம் கிடைக்கும்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். முக்கியமாக அரசியல் மற்றும் அரசுத்துறையில் பணியாற்றுவோருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டு அதிபதி, 11 ஆம் வீட்டுக்கு வருகிறார். அதனால் முன்னோர்களின் ஆசிர்வாதம் இருந்தாலும், பெற்றோரின் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
சனி எட்டாம் இடத்துக்கு செல்கிறார். அது ஒன்பதாம் இடத்துக்கு விரய ஸ்தானம். அதனால் தந்தை வழியில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தந்தையின் பணிகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற வேண்டிய காலமாக இது இருக்கும். குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகளால் சங்கடம் உருவாகும்.
உங்கள் வார்த்தையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விரக்தி மனப்பான்மை அதிகம் ஏற்படும். கடன் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். நிலத்தை விற்றோ, அடமானம் வைத்தோ கடனை அடைக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு, லாபம் இருந்தாலும் அது சில இழப்புகளையும் ஏற்படுத்தும்.
தொழிலில் வளர்ச்சி சீராக இருக்கும். லாபம் அதிகம் வரும்போது உங்களின் செல்வாக்கை அதிகரிக்கு வகையில் பணியாற்றிக் கொள்வது நல்லது. தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த பெரிய லாபம் வராவிடினும் நீங்கள் வேண்டாம் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்த ஒன்றால் லாபம் ஏற்படும்.
எப்போதோ நீங்கள் கொடுத்த கடன் திரும்பி வருவது, திடீர் லாட்டரி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எந்த இடத்திலும் பொறுமையை விட்டு விட வேண்டாம். இந்த காலத்தில் குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம். கருப்பண்ண சாமி மற்றும் முத்துக்குமார சாமி கோயில்களில் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்தால் லாபம் அதிகரித்து மரியாதை உயரும்.












Click it and Unblock the Notifications