தமிழ் புத்தாண்டு..தங்க கவசத்தில் கற்கப விநாயகர்..குமரி மாவட்ட கோவில்களில் சித்திரைக்கனி தரிசனம்
சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு இன்றைய தினம் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தங்க கவசத்துடன் காட்சி அளித்தார். குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் இன்று விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு கோவில்களிலும் வீடுகளிலும் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் காய்கனிகள் படைத்து வைத்து பொது மக்கள் வழிபட்டனர். வீடுகளில் உள்ள பெரியவர்கள் கால்களில் விழுந்து புதுமண தம்பதியினர் மற்றும் குழந்தைகள் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் வெளியூரில் இருந்து வருகை தந்துள்ள ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்துடன் காட்சியளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் இன்று விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தனர். பக்தர்களுக்கு காய், கனிகள் கை நீட்டம் வழங்கப்பட்டது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை கனி காணும் நிகழ்ச்சியையொட்டி பல்வேறு விதமான காய்கறிகள், இளநீர்கள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணசாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. குடும்ப குடும்பமாக வந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில்களில் கைநீட்டம் வழங்கப் பட்டது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமிபதியில் காலையில் நடை திறக்கப்பட்டு பணிவிடைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து வாகன பவனி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அமெரிக்க வைரம் பொருத்தப்பட்ட கிரீடம், தங்க கவசம் மணக்குள விநாயகருக்கு அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications