வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கத்தில் எத்தனை நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும் தெரியுமா
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நாளை பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 31ஆம் தேதி இரவு வரைக்கும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். நம்பெருமாளையும் மூலவரை முத்தங்கி சேவையில் தரிசிக்கவும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 14ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் போது, தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுனா மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.
இன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதற்காக நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு பகல் பத்து அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். அழகான நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாளை ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள். வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த அலங்காரத்தைக் காண கண் கோடி வேண்டும்.
பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பெருமாள் பரமபத வாசல் கடந்து, திருமாமணி மண்டபம் எழுந்தருளிய பிறகு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்கு மேல் சேவை கிடையாது.
சொர்க்கவாசல் திறப்பு தினமான நாளை முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். 31ஆம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும். 1ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.
ராப்பத்து ஏழாம் திருநாளான 31ஆம்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான ஜனவரி 1ஆம்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 3-ந்தேதி தீர்த்தவாரியும், 4ஆம்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் மூலவர் முத்தங்கி சேவை, பரமபதவாசல் திறப்பு ஆகியவற்றிக்கு பக்தர்கள் https://srirangam.org என்ற கோவில் இணையதளத்தில் கட்டணமில்லா தரிசனம் மற்றும் விரைவு வழி தரிசனம் ஆகியவற்றிற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த நேரத்தில் இருந்து 30 நிமிட நேரத்திற்கு முன்பாக கோவிலுக்கு வரவேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 5 காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்பட உள்பட 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.