தமிழ்நாட்டின் மிக முக்கியமான சாலை.. சென்னை - திருச்சி இனி சிம்பிள்.. வருகிறது ராட்சச பசுமை வழிச்சாலை
சென்னை: சென்னை - திருச்சி பசுமை வழிச்சாலைத் திட்டத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சென்னை - திருச்சி பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஒரு முக்கியமான திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்களை மேற்கொண்டு டிப்பர் தயாரிக்கப்பட்ட நிலையில் விரைவில் இந்த சாலைக்கான பணிகள் தொடங்க உள்ளது.
பெரும் அளவிலான நிலம் கையகப்படுத்துதலைக் குறைக்கும் வகையில், சென்னைக்கு அருகில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து தொடங்கும் புதிய விரைவுச்சாலைத் திட்டம், இனி திண்டிவனம் வரை மட்டுமே அமைக்கப்படும். திண்டிவனம் முதல் திருச்சி வரையிலான பகுதியில், ஏற்கனவே உள்ள ஜி.எஸ்.டி. சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

சாலையின் நீளம் குறைப்பு
முந்தைய திட்ட வரைவுப்படி சுமார் 3,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டிய நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திருத்தங்களை வலியுறுத்தியது. ஆரம்ப கட்டத்தில் உள்ள விரிவான திட்ட அறிக்கையை (DPR) பரிசீலித்த அமைச்சக அதிகாரிகள், நில கையகப்படுத்துதலைக் குறைப்பதோடு, தெற்குப் பகுதியில் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.
முன்பு திட்டமிடப்பட்டபடி, சென்னை வெளிவட்டச் சாலையின் சிங்கப்பெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதூர் பிரிவின் ஏழாவது கிலோமீட்டரிலிருந்து இந்த வழித்தடம் தொடங்கி, ஜி.எஸ்.டி. சாலைக்கு இணையாக சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் திருச்சி வரை செல்லும்.
தற்போது, திண்டிவனம் வரை மட்டுமே புதிய விரைவுச்சாலை அமைக்கப்படும். திண்டிவனத்திலிருந்து திருச்சி வரை, ஏற்கனவே உள்ள நான்கு வழி ஜி.எஸ்.டி. சாலை, இருபுறமும் இரண்டு வழி சர்வீஸ் சாலைகளுடன் கூடிய ஆறு வழிச்சாலையாக விரிவாக்கப்படும். இந்த வழித்தடத்திற்கான இறுதி முடிவு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியாகும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திண்டிவனத்திலிருந்து திருச்சி வரை சாலை
இருப்பினும், முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட வழித்தடம் இரண்டு இடங்களில் செய்யார்-ஓரகடம் தொழில்துறை வழித்தடத்துடன் மேலடங்கியது கண்டறியப்பட்டது. இந்த மேலடுக்குகளைத் தவிர்த்து, தொழில்துறை வழித்தடத்திலிருந்தே விரைவுச்சாலையின் தொடக்கப் புள்ளியைக் கருத்தில் கொள்வது போன்ற மாற்று வழிகளை ஆராயுமாறு அமைச்சகம் NHAI-ஐ கேட்டுக்கொண்டுள்ளது.
ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே தினசரி போக்குவரத்து ஒரு லட்சம் பயணிகள் கார் அலகுகளை (PCU) தாண்டியுள்ளதாக NHAI அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உளுந்தூர்பேட்டை நோக்கியும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே உள்ளது.
பேருந்து ஓட்டுநர்கள் இது தொடர்பாக பேசுகையில், வார இறுதி மற்றும் பண்டிகைக் காலங்களில், தாம்பரத்திலிருந்து பரனூர் சுங்கச்சாவடியைக் கடக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆகிறது. செங்கல்பட்டுக்கு அப்பால் உள்ள நான்கு வழிச்சாலையிலும் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து அதிகரித்துள்ளது. புதிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும்" என்று கூறுகின்றனர்.
விரைவுச்சாலை பல கட்டங்களாக உருவாக்கப்படும்
விரிவான திட்டத்தின்படி, விரைவுச்சாலை பல கட்டங்களாக உருவாக்கப்படும். முதலில் சென்னைக்கும் திருச்சிக்கும் இடையே பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும். இது தென் மாவட்டங்களில் உள்ள தொழில்துறை மற்றும் துறைமுக உள்கட்டமைப்புக்கான இணைப்பை மேம்படுத்தும்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்தார். சென்னை-திருச்சி-மதுரை வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் அப்போது தெரிவித்தார். திட்டத்தின் இறுதி முடிவு, டிபிஆர் அறிக்கை, இணைப்புக்கான தேவை, போக்குவரத்து அடர்த்தி மற்றும் பி.எம். கதிசக்தி மாஸ்டர் திட்டத்துடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications